Skip to main content

ஹோட்டலில் இருந்த இருவேறு மதத்தைச் சேர்ந்த ஜோடி; கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பல்

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
A mob that carried out incident and An interfaith couple in the hotel;

கர்நாடகா மாநிலம், ஹனகல் பகுதி அருகே தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலுக்கு 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், 26 வயது இஸ்லாமியப் பெண் ஒருவரும் கடந்த 8 ஆம் தேதி ஒன்றாக அறை எடுத்து தங்குவதற்காக வந்துள்ளனர். இருவரும் ஹோட்டலுக்கு சென்றபோது வெளியே இருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், இதைக் கவனித்து தனக்குத் தெரிந்த ஒரு கும்பலிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, உடனே ஹோட்டலுக்கு வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், இருவர் தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து, உள்ளே இருந்த இருவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அந்த பெண்ணையும் உடன் இருந்த நபரையும் தங்கள் பைக்கில் ஏற்றிக்கொண்டு ஆளில்லா இடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்தும் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அந்த ஆறு பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், அந்த பெண்ணுக்கு பணம் கொடுத்து சொந்த ஊருக்குச் சென்றுவிடுமாறு அந்த கும்பல் அனுப்பியுள்ளது.

ஹோட்டல் அறைக்குள் புகுந்து நடத்தப்பட்ட தாக்குதலை, தங்கள் செல்போனில் வீடியோவாகவும் அந்த கும்பல் எடுத்துள்ளது. தற்போது, அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ பரவியதையடுத்து, இந்த சம்பவம் குறித்து ஹனகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய கும்பலை சேர்ந்த 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், அஃதப் மக்பூல் அஹமது சந்தன்கட்டி (24), சமாயுல்லா லாலனாவர் (23), முகமது இசாக் மண்டக்கி (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாகியிருக்கும் மேலும் 3 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம், தாக்குதலுக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்