Skip to main content

"எதிர்க்கட்சித் தலைமை ஜனநாயக முறையில் முடிவு செய்யப்படட்டும்" - பிரசாந்த் கிஷோர்!

Published on 02/12/2021 | Edited on 02/12/2021

 

prashant kishor

 

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனையொட்டி, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை மம்தா சந்தித்தார். இதனால் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றாக இணைந்து வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களைத் தங்கள் பக்கம் இழுத்தது. இதனால் இரு கட்சிகளுக்குமிடையே மோதல் வெடித்தது. இதனால் இரு கட்சிகளும் ஒன்றுசேர்ந்து தேர்தலைச் சந்திக்குமா என கேள்வியெழுந்தது.

 

இதனைத்தொடர்ந்து நேற்று (01.12.2021) மும்பையில்  சரத் பவாரை சந்தித்த மம்தா, "நடந்துகொண்டிருக்கும் பாசிசத்திற்கு எதிராக யாரும் போராடவில்லை. எனவே வலிமையான மாற்றுப்போக்கை உருவாக்க வேண்டும். சரத் பவார் மூத்த தலைவர். அவர் சொன்னதை நான் ஏற்றுக்கொள்கிறேன். என்ன ஐக்கிய முற்போக்கு கூட்டணி? ஐக்கிய முற்போக்கு கூட்டணி தற்போது இல்லை" என கூறினார்.

 

இது மம்தா, மூன்றாவது அணி அமைக்க முயல்வதைக் காட்டுவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மம்தாவுக்கு பதிலடி தந்த காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்திரி, "ஒட்டுமொத்த இந்தியாவும் 'மம்தா, மம்தா' என்று கோஷமிட ஆரம்பித்துவிட்டதாக அவர் நினைக்கிறார். ஆனால் இந்தியா என்பது மேற்கு வங்கம் மட்டுமல்ல. மேற்கு வங்கம் மட்டும் இந்தியா அல்ல. இன்று அவருக்குப் பின்னால் மோடி நிற்பதால் அவரது பலம் அதிகரித்துள்ளது. எனவே, காங்கிரசைப் பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறார். பாஜக இந்தியா முழுவதும் போராடிக்கொண்டிருக்கும்போது அவர்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டிருக்கும்போது, அவர்களுக்கு ஆக்சிஜனை வழங்க மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார். மம்தா பானர்ஜி பாஜகவின் ஆக்சிஜன் சப்ளையர் ஆகிவிட்டார்" என விமர்சித்திருந்தார்.

 

இந்தநிலையில் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைமையை விமர்சித்துள்ளதோடு, எதிர்க்கட்சித் தலைமை ஜனநாயக முறையில் முடிவு செய்யப்படட்டும் எனக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கையும், வெளியும் ஒரு வலுவான எதிர்க்கட்சிக்கு இன்றியமையாதது. ஆனால் குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் கட்சி 90%க்கும் அதிகமான தேர்தல்களில் தோல்வியடைந்துள்ள நிலையில், காங்கிரஸின் தலைமை என்பது ஒரு தனிநபரின் தெய்வீக உரிமை அல்ல. எதிர்க்கட்சித் தலைமை ஜனநாயக முறையில் முடிவு செய்யப்படட்டும்" என கூறியுள்ளார். மம்தாவின் பிரதமர் கனவை வெளிக்காட்டும் வகையில் இந்தப் பதிவு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.