Skip to main content

லட்டு கலப்பட சர்ச்சை; பக்தர்களுக்கு பரிகாரம் சொன்ன திருப்பதி தேவஸ்தானம்

Published on 23/09/2024 | Edited on 23/09/2024
bb

லட்டில் மாடு மற்றும் பன்றி இறைச்சி கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக ஆந்திர அரசு, முன்னாள் ஆளுங்கட்சி மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அரசால் நவீன தரத்தில் மேம்படுத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு ஆய்வகங்களில் ஜூலை 6 மற்றும் 12ம் தேதிகளில் தயாரித்த நான்கு லட்டு நெய் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் அடிப்படையில், லட்டுக்களை தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது உண்மைதான் என திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ் தெரிவித்திருந்தார்.

திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்ந்து பேசுபொருளாகி வரும் நிலையில், பக்தர்களுக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. அந்த வேண்டுகோளில், இன்று மாலை 6 மணிக்கு பக்தர்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள தேவஸ்தானம், ஸ்ரீ வெங்கடேசா... நாராயணா...' என்று மந்திரங்களை உச்சரிக்கவும் பக்தர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இதனால் விலங்கு கொழுப்பால் தயாரித்த லாட்டல் ஏற்பட்ட தோஷம் விலகும் என நம்பிக்கை தெரிவித்துள்ள தேவஸ்தானம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் நேரத்தில் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற பிரதமர் மோடியின் இதேபோன்ற அறிவிப்பு பல்வேறு சர்ச்சைகளையும் இட்டுச் சென்ற நிலையில் தற்போது திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த பரிகார அறிவிப்பும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

சார்ந்த செய்திகள்