Skip to main content

ஒரே மாதத்தில் ஐந்தாவது முறை.... ஊரடங்கிலும் வேகமாக முன்னேறும் ரிலையன்ஸ்...

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

kkr invests in ambanis jio

 

கடந்த ஒருமாத காலத்தில் 67,000 கோடி ரூபாய்க்கு மேலாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், தற்போது அமெரிக்க நிறுவனம் ஒன்றிலிருந்து மேலும் 11,000 கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்றுள்ளது. 
 


ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் தொழில்துறை முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், பல முன்னணி நிறுவனங்கள் திவாலாகி வருகின்றன. ஆனால் இதற்கு விதிவிலக்காக ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் இந்தக் காலகட்டத்தில் அதிக அளவிலான முதலீடுகளைப் பெற்று மற்ற தொழில் நிறுவனங்களை அசரவைத்துள்ளது. 5ஜி சேவை, ஜியோமார்ட் என அடுத்தடுத்த திட்டங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம், இவற்றை வைத்துப் பல வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகளைப் பெற்று வருகின்றன.

அந்த வகையில் ஜியோவில் ரூ.43,574 கோடி முதலீடு செய்து, 9.9 சதவீத பங்குகளை வாங்கியது 'ஃபேஸ்புக்'. அதனைத் தொடர்ந்து சில்வர் லேக் நிறுவனம் ஜியோவில் ரூ. 5,655 கோடி முதலீடு செய்து 1.5% பங்குகளை வாங்கியது. பின்னர் மற்றொரு பிரபல அமெரிக்க நிறுவனமான 'விஸ்டா' நிறுவனம் ஜியோவில் ரூ.11,367 கோடி முதலீடு செய்து, அந்நிறுவனத்தின் 2.32 சதவீத பங்குகளை வாங்கியது. இதனையடுத்து கடந்த வாரம் மற்றொரு அமெரிக்க நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் ஜியோவில் ரூ.6,598.38 கோடி முதலீடு செய்து அதன் 1.34% பங்குகளை வாங்கியுள்ளது. இந்த அடுத்தடுத்த முதலீடுகள் மூலம் கடந்த ஒரு மாதத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் சுமார் 67,000 கோடி ரூபாயைத் திரட்டியது.

 

 


இந்தச் சூழலில் தற்போது மற்றொரு பிரபல அமெரிக்க நிறுவனமான 'கே.கே.ஆர்', ரிலையன்ஸ் நிறுவனத்தில் 11,367 கோடி ரூபாயை முதலீடு செய்ய உளது. இந்தத் தொகை மூலம் ஜியோ நிறுவனத்தின் 2.3 சதவீத பங்குகளை கே.கே.ஆர் நிறுவனம் வாங்க உள்ளது. ஆசியாவில் இதுவரை அந்நிறுவனம் மேற்கொண்ட மிகப்பெரிய முதலீடு இதுவே ஆகும். மேலும், இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 78,000 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்