three member SIT to investigate Hathras case

Advertisment

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஹத்ராஸ் பகுதியில், இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் கடந்த 14 -ஆம் தேதி நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். நாக்கு வெட்டப்பட்டு, முதுகெலும்பு முறிந்த நிலையில் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்த அந்த பெண், டெல்லி ஜவஹர்லால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் சிறப்பு சிகிச்சைக்காக அங்கிருந்து டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அந்த பெண் உயிரிழந்துள்ளார்.

Advertisment

இதனையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, கொலை சம்பவத்தில் ஈடுபடல் மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பெண்ணின் உடலை போலீஸார் கட்டாயப்படுத்தி இரவோடு இரவாக தகனம் செய்ய வைத்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரிக்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளார். இந்த குழு அடுத்த ஏழு நாட்களில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யும் எனவும், இந்த வழக்கை நீதிமன்றம் விரைவாக விசாரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.