Skip to main content

சர்ச்சைக்கு மத்தியில் கோவிலுக்கும்-மசூதிக்கும் இடையே நடைபெற்ற நில பரிமாற்றம்!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

kasi vishwanathan temple and gyanvabi mosque

 

உத்தரப் பிரதேசதின் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதா் ஆலயம் அமைந்துள்ளது. இதன் அருகே ஞான்வாபி மசூதி அமைந்துள்ளது. இந்நிலையில், காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை அகற்றி, முகலாய மன்னர் ஒளரங்கசீப், ஞான்வாபி மசூதியைக் கட்டியதாகவும், மசூதி அமைந்துள்ள  இடம் காசி விஸ்வநாதர் ஆலயதிற்குச் சொந்தமானது எனவும் வழக்கு தொடரபட்டது.

 

இந்த வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம், ஞான்வாபி மசூதியில் அகழ்வாய்வு நடத்த உத்தரவிட்டது. உத்தரபிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியம் மற்றும் மசூதி குழு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த மேல்முறையீட்டு மனு தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நில சர்ச்சைக்கு இடையே காசி விஸ்வநாதா் ஆலய நிர்வாகமும்,  ஞான்வாபி மசூதியை நிர்வகிக்கும் குழுவும் தங்களுக்கு சொந்தமான நிலங்களை பரிமாற்றம் செய்துகொண்டுள்ளன.

 

காசி காசி விஸ்வநாதா் ஆலய விரிவாக்கத்திற்கு நிலம் தேவைப்பட்டதையடுத்து, ஆலய நிர்வாகம் ஞான்வாபி மசூதி அருகேயுள்ள நிலத்தை கேட்டுள்ளது. இதனையடுத்து ஞான்வாபி மசூதி குழு 1700 சதுர அடியுள்ள நிலத்தை காசி விஸ்வநாதா் ஆலய நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளது. பதிலுக்கு காசி விஸ்வநாதா் ஆலய நிர்வாகம், ஞான்வாபி மசூதியிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள 1000 சதுர அடி நிலத்தை வழங்கியுள்ளது.

 

ஞான்வாபி மசூதி குழு, காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு வழங்கிய நிலம், உத்தரபிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானதாகும். அந்தநிலத்தை உத்தரபிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியம்,ஞான்வாபி மசூதி குழுவிற்கு எந்தவித பணமறிமாற்றமும் இன்றி கால வரையற்ற குத்தகைக்கு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆய்வில் விசித்திரம் காட்டிய மாவட்ட ஆட்சியர் !

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
The collector Research pretending to be a patient in uttarpradesh

உத்தரப்பிரதேச மாநிலம், பிரோஸ்பூர் பகுதியில் அரசு சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் அங்குள்ள பணியாளர்கள், வரும் நோயாளிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள் என தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.

இந்த தொடர் புகாரின் காரணமாக, மாவட்ட ஆட்சியர் கிருதி ராஜ், அந்த மருத்துவமனையை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஆட்சியர் கிருதி ராஜ் தலையில் முக்காடு அணிந்து ஒரு நோயாளி போல் அந்த மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை சந்தித்துள்ளார். அப்போது, அந்த மருத்துவர், ஆட்சியர் கிருதி ராஜிடம் அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஆட்சியர் கிருதி ராஜ், தான் யார் என்பதை தெரிவித்த பிறகு, அந்த மருத்துவமனையே ஆட்டம் கண்டுள்ளது. 

அதன் பின்னர், ஆட்சியர் கிருதி ராஜ் அந்த மருத்துவமனை முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்டார். அந்த ஆய்வில், மருத்துவர்கள் முறையாக வருகை தராதது, நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாதது, காலாவதியான மருந்துகள் அளிக்கப்படுவது என பல குற்றங்கள் கண்டறியப்பட்டது. 

இது குறித்து ஆட்சியர் கிருதி ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நாய்க்கடிக்கு ஊசி போடுவதற்கு மருத்துவமனைக்கு  நோயாளி ஒருவர் சென்ற போது காலை 10 மணிக்குப் பிறகும் மருத்துவர் வரவில்லை என சுகாதார நிலையம் தொடர்பாக எனக்கு புகார் வந்தது. அந்த புகாரின் பேரில், நான் மறைந்திருந்து, முக்காடு போட்டுக் கொண்டு அங்கு சென்றேன். அப்போது மருத்துவரின் நடத்தை ஏற்புடையதாக இல்லை. மேலும், சிலர் மருத்துவமனைக்கு சரியாக வருகை தராதது தெரியவந்தது.

வருகை பதிவேட்டில் சிலரின் கையெழுத்து இருந்தாலும், சுகாதார நிலையத்தின் உள்ளே அவர்கள் இல்லை எனவும் தெரிந்தது. கையிருப்பில் உள்ள பெரும்பாலான மருந்துகள் காலாவதியாகிவிட்டன. சுகாதார மையத்தில் தூய்மையும் பராமரிக்கப்படவில்லை. இது குறித்து நாங்கள் மேலும் விசாரணை நடத்தவுள்ளோம்” என்று கூறினார். 

Next Story

மது அருந்துவதை தடுத்த மனைவி; ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
 Incident happened at husband in anger for A wife who abstains from drinking alcohol

உத்தரப்பிரதேசம் மாநிலம், நைத்துவா கிராமத்தைச் சேர்ந்தவர் முனீஸ் சக்சேனா. இவருக்கு ஷானோ என்ற பெண்ணுடன் திருமணமாகி, 8 மற்றும் 5 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். முனீஸ் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்.

அதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று (07-03-24) இரவு முனீஸ் வழக்கம் போல், மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மது போதையில் வீடு திரும்பிய முனீஸுக்கும் அவரது மனைவி ஷானோவுக்கும் தகராறு ஏற்பட்டது.  இதனையடுத்து, முனீஸ் தனது வீட்டிலேயே மது குடித்துள்ளார். அப்போது,  அவர் வீட்டில் குடிப்பதை ஷானோ தடுக்க முயன்றுள்ளார். இதில் ஆத்திரமடைந்த முனீஸ், தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து வந்து மனைவி ஷானோ மீது ஊற்றித் தீ வைத்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஷானோவின் மாமியார் முன்னி தேவி, ஷானோவை காப்பாற்ற முயன்றபோது அவருக்குத் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், அங்கு வந்து ஷானோ மீது ஏற்பட்டிருந்த தீயை அணைத்தனர். இருப்பினும், ஷானோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஷானோவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஷானோவை காப்பாற்ற முயன்றதில் தீக்காயம் அடைந்த மாமியாரை மீட்டு மேல்சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, தலைமறைவாகியுள்ள முனீஸ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மது அருந்துவதைத் தடுக்க முயன்ற மனைவி மீது கணவன் தீ வைத்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.