Skip to main content

திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரம்; இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
The incident happened of the young woman and Rage because of refusal to marry

கர்நாடகா மாநிலம், ஹாவேரி மாவட்டம், பைசவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தீபா (21). இவரது வீட்டில், தீபாவுக்கு திருமணம் ஏற்பாடுகள் செய்து வந்தனர். இந்த நிலையில், தீபா நேற்று (18-03-24) அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் மர்மமான முறையில் மரத்தில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த தீபாவை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு தீவிர விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தீபா கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் தீபாவின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், தீபாவின் மாமா மால்தேஷ் (35) முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த போலீசார், மால்தேஷிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், தீபா மற்றும் அவரது மாமா மால்தேஷ் ஆகிய இருவருக்கும், அவர்களுடைய குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். 

அதற்காக இருவருக்கும் திருமண ஏற்பாடு செய்ய நிச்சயதார்த்தத்தை நடத்தினர். நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தீபா இந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மால்தேஷ், தீபாவை அருகில் உள்ள தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற மால்தேஷ், திருமணத்திற்கு சம்மதிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், இந்த திருமணத்திற்கு தீபா திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மால்தேஷ் தீபாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே தீபா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, என்ன செய்வது என தெரியாமல் திகைத்த மால்தேஷ், போலீசுக்கு பயந்து தீபாவின் உடலை அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார் என்பது தெரியவந்தது. திருமணத்திற்கு மறுத்ததால் இளம்பெண் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்