Skip to main content

"குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தாவிட்டால் சாலையில் சடலங்களாக இருக்கும்" - ஆம் ஆத்மி எம்.எல்.ஏ!

Published on 30/04/2021 | Edited on 30/04/2021

 

aam aadmi

 

இந்தியாவில் கரோனா பரவல் மோசமடைந்துள்ளது. டெல்லியிலும் கரோனா தொற்று அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் ஆக்சிஜன், படுக்கைகள், மருந்துகள் உள்ளிட்டவற்றுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் சேவையிலும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் கரோனா உயிரழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அங்குள்ள தகன மைதாங்கள் உடல்களால் நிரம்பியுள்ளதோடு, ஒரு உடலை தகனம் செய்ய 20 மணிநேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய அவலமும் ஏற்பட்டுள்ளது.

 

இந்தநிலையில், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரே, டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார். சோயிப் இக்பால் என்ற சட்டமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “டெல்லியின் நிலை குறித்து வேதனையடைந்துள்ளேன்; மிகவும் கவலைப்படுகிறேன். என்னால் தூங்க முடியவில்லை. மக்களுக்கு ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் கிடைக்கவில்லை. என் நண்பர் பாதிக்கப்பட்டுள்ளார்; மருத்துவமனையில் இருக்கிறார். ஆனால் ஆக்சிஜனோ வெண்டிலேட்டரோ கிடைக்கவில்லை. அவருக்கான ரெம்டெசிவர் பரிந்துரை என்னிடம் இருக்கிறது. ஆனால் நான் அதை எங்கிருந்து பெறுவது? அவரது குழந்தைகள் அதற்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். எம்.எல்.ஏ.வாக இருப்பதற்கு இன்று நான் வெட்கப்படுகிறேன். எங்களால் உதவ முடியவில்லை; அரசாங்கத்தினாலும் உதவ முடியவில்லை. நான் ஆறுமுறை எம்.எல்.ஏ.வாக இருந்தவன், மிகவும் மூத்தவன். இருந்தபோதிலும், யாரும் பதிலளிக்கவில்லை. எந்த நோடல் அதிகாரியையும் தொடர்புகொள்ள முடியவில்லை. இந்தச் சூழ்நிலையில், டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு டெல்லி உயர் நீதிமன்றத்திடம் நான் கோர விரும்புகிறேன். இல்லையெனில் சாலையில்  சடலங்களாக இருக்கும்" என கூறியுள்ளார்.

 

சோயிப் இக்பால் கோரிக்கைக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. டெல்லி மாநில காங்கிரஸ் தலைவரும், டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என ஜனாதிபதிக்கு நேரடியாக கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்த சோயிப் இக்பால், 2020 சட்டமன்றத் தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இதை செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ் அப் எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 WhatsApp warning May have to leave India

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். 

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார். 

இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை.  இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து  என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர். 

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.