Skip to main content

மத்திய அமைச்சர் முன்பு வேதனையை வெளிப்படுத்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

Published on 23/10/2021 | Edited on 23/10/2021


 

ramana

 

மும்பை உயர்நீதிமன்றத்தில் அவுரங்காபாத் கிளையில், கட்டப்பட்ட புதிய கட்டிடம் ஒன்றிற்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மஹாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்ரே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

 

இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி ரமணா பேசும்போது, நீதிமன்றங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் பேசியதாவது; இந்தியாவில் நீதிமன்றங்களுக்கான நீதித்துறை உள்கட்டமைப்பு என்பது எப்போதுமே ஒரு சிந்தனையாக மட்டுமே இருந்து வருகிறது. இந்த மனநிலையின் காரணமாகவே இந்தியாவில் நீதிமன்றங்கள் இன்னும் பாழடைந்த கட்டமைப்புகளுடன் செயல்படுகின்றன. இதனால் திறம்படச் செயல்படுவதில் சிக்கல் உள்ளது.

 

5 சதவீத நீதிமன்ற வளாகங்களில் மட்டுமே அடிப்படை மருத்துவ உதவி உள்ளது. 26 சதவீத நீதிமன்றங்களில் பெண்களுக்குத் தனி கழிப்பறைகள் இல்லை. 16 சதவீத நீதிமன்றங்களில் ஆண்களுக்குக் கழிப்பறைகள் இல்லை. கிட்டத்தட்ட 50 சதவீத நீதிமன்ற வளாகங்களில் நூலகம் இல்லை, 46 சதவீத நீதிமன்ற வளாகங்களில் தண்ணீர் சுத்திகரிப்பு வசதி இல்லை.

 

நீதிமன்ற உட்கட்டமைப்பு தொடர்பான நான் மத்திய சட்ட அமைச்சருக்கு முன்மொழிவை அனுப்பியுள்ளேன். விரைவில் நேர்மறையான பதிலை எதிர்பார்க்கிறேன், மத்திய சட்ட அமைச்சர்  இந்த செயல்முறையை விரைவுபடுத்துவார் என்று நான் நம்புகிறேன்.

 

பல நேரங்களில் மக்கள் நீதிமன்றத்தை அணுகுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் இந்த எண்ணத்தை நாம் அகற்ற வேண்டிய நேரம் இது. நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம்.


இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கில் குற்ற நடவடிக்கைக்கு ஆளுநர் ஒப்புதல்

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

Governor approves action in case against ex-ministers

 

தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 31 ஆம் தேதி அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா, சி. விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எதிராக ஊழல் வழக்குப்பதிவு செய்யக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அரசு அனுமதி கோரியது. இதற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவில்லை. அதேபோன்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்ய கடந்த மார்ச் மாதம் அனுமதி கோரிய நிலையில் அதற்கும் இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை. டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் தொடர்பான கோப்புகளையும் ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகளுக்கு அரசு உரிய விளக்கத்துடன் மீண்டும் அனுப்பி வைத்தபோதும் ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆளுநர் அலுவலகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், “அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா, சி. விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்கில் குற்ற நடவடிக்கைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ஜி. பாஸ்கரன் மீது வழக்கு தொடரவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தவிர எஞ்சிய அரசுப் பதவி நியமன கோப்புகளுக்கு ஆளுநர் அனுமதி அளித்துவிட்டார். 2021 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2023 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி வரை அனுப்பப்பட்ட துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா, சி. விஜயபாஸ்கர் ஆகியோர் மீது சிபிஐ விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

Next Story

''மொழிக்காக முதலில் வருபவர்கள் தமிழர்கள்தான்''-உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா பேச்சு!

Published on 23/04/2022 | Edited on 23/04/2022

 

 

சென்னை  உயர்நீதிமன்ற வளாகத்தில் கட்டப்படவுள்ள 9 மாடி நிர்வாக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் நாமக்கல் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் குடியிருப்பு கட்டடம்,  விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் குடியிருப்பு கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. சென்னையில் அமைக்கப்பட்டுள்ள வணிக நீதிமன்றங்கள் திறந்து வைக்கப்பட்டது. கரோனாவால் உயிரிழந்த 450 வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு தலா 7 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ''மொழிக்காக முதலில் வருபவர்கள்  தமிழர்கள்தான். தமிழர்களின் மொழி, அடையாளம் பெருமை மிக்கது. சென்னை வழக்கறிஞர்கள் நீதித்துறையை வலுப்படுத்தும் பணிகளில் முக்கிய பங்காற்றுகின்றனர். மாநில மொழிகளை பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் இருக்கிறது. தொழிநுட்ப வசதிகளை பயன்படுத்தி மொழிகளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும். ஒருவர் நீதிபதி எனும் பதவியை அடைய  பகுதி, இனம்,மொழி உள்ளிட்ட எவையும் தடையாக இருக்கக்கூடாது. சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை அமைப்பது குறித்து சக நீதிபதிகளுடன் ஆலோசிக்கப்படும்'' என்றார்.