|
கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. பாஜகவும், காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளமும் தனித்தனியாக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளன.
இதனிடையே பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளில் உள்ள எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று காலை தொடங்கியது . இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 12 பேர் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் 12 எம்.எல்.ஏக்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ், மஜத கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் கொண்டு வரும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் - மஜத கூட்டணி பிடிக்காத எம்.எல்.ஏக்கள் பலர் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாஜக தலைவர் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.
ஆனால், நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். உண்மையில் பாஜகவை சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள் தான் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார் என காங்கிரஸ் எம்.பி. பாட்டீல் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா அரசியலில் அதிரடி திருப்பம்! 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மாயம்!
சார்ந்த செய்திகள்
Next Story
"பாஜகவுக்கு எதிரான அலை" - சரத் பவார்
கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தனித்து நின்று தேர்தலை சந்தித்தன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடத்தி வருகிறது. இந்தத் தேர்தல் முடிவானது வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டும், அதே சமயம் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தேர்தல் முடிவை பார்க்கும் போது மக்கள் மாற்றத்தை விரும்புவது தெரிகிறது. ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதால் நாட்டில் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது. இதை சொல்வதற்கு ஜோதிடர் தேவை இல்லை. கர்நாடக தோல்வியை தொடர்ந்து மத்தியில் பாஜக வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தும். மேலும் நாடாளுமன்ற தேர்தலுடன், மாநில சட்டமன்ற தேர்தல்களையும் சேர்த்து நடத்தும் திட்டம் குறித்து குழப்பி கொள்ள வாய்ப்பில்லை " எனத் தெரிவித்துள்ளார்.
Next Story
சட்டமன்றத்தில் தோல்வி; நாடாளுமன்றத்தில் கூட்டணி? - தேவகவுடா பதில்
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் முதலில் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. இருப்பினும் சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பாகவே எடியூரப்பா தனது பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாநிலத் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து முதல்வர் ஆனார்.
சுமார் ஒரு ஆண்டு காலம் ஆட்சி நடைபெற்ற நிலையில் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து பாஜகவானது எடியூரப்பா தலைமையிலும், அவரைத் தொடர்ந்து பசவராஜ் பொம்மை தலைமையிலும் ஆட்சி அமைத்து பாஜக ஆட்சிக் காலத்தை நிறைவு செய்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தனித்து நின்று தேர்தலை சந்தித்தன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடத்தி வருகிறது.
மேலும் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிவுற்றுள்ள நிலையில் அம்மாநிலம் உட்பட இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும், வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் தேசியத் தலைவருமான தேவகவுடா, பெங்களூருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட முயற்சித்து வருவதாகச் சில கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தோம். அதனை நம்பாமல் மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என்று சொல்லி வருகின்றனர். நாட்டில் பாஜகவுடன் கூட்டணி அமைக்காத கட்சி ஏதாவது உண்டு என்றால் தைரியமாக சொல்லட்டும் பார்க்கலாம். அதன் பின்னர் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது குறித்து பேசலாம்" என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமியும் உடன் இருந்தார்.