Skip to main content

37 லட்சத்துல இப்ப 37 ரூபா கூட இல்லீங்க...: விசு மீது புகார் கொடுத்தது ஏன்? விளக்குகிறார் ரமேஷ் கண்ணா!

Published on 25/07/2018 | Edited on 25/07/2018
VISU


தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் ரூபாய் 37 லட்சம் மோசடி செய்துள்ளதாக முன்னாள் தலைவர் விசு, செயலாளர் பிறைசூடன், அறங்காவலர் மதுமிதா ஆகியோர் மீது, தற்போதைய சங்க தலைவர் கே.பாக்யராஜ், பொதுச்செயலாளர் மனோஜ்குமார், பொருளாளர் ரமேஷ்கண்ணா ஆகியோர் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய ரமேஷ் கண்ணா, 
 

கடந்த எட்டு, பத்து வருடங்களுக்கு முன்பு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பதவியை விசுவே ஏற்றுக்கொண்டார். யாரும் அவரை தலைவராக்கவில்லை. தொடர்ந்து நீடித்தார். இந்த சங்கத்தில் தேர்தலே நடத்தவில்லை. தேர்தல் நடத்தாமல் இருந்தால் நியாயமான சங்கமாக இருக்காது என்று தேர்தல் நடத்த முடிவு செய்தோம். அதற்கான ஏற்பாடுகளை செய்தோம். பொறுப்புக்கு வந்தோம். 
 

நாங்கள் சங்க பொறுப்புக்கு வருகிறோம் என்று தெரிந்தவுடன், விசு ஒரு அறக்கட்டளையை ஆரம்பித்தார். பின்னர் எங்கள் சங்கத்தில் இருந்த சந்தா பணம் ரூபாய் 37 லட்சத்தை அந்த அறக்கட்டளைக்கு மாற்றினார். 37 லட்சத்துல இப்ப 37 ரூபாய் கூட இல்லை. இதெல்லாம் அவர் இருக்கும்போது நடந்தது. இதனை கேட்க அப்போது யாரும் இல்லை. 

 

 

 

நாங்கள் பொறுப்புக்கு வந்த பின்னர், இந்த அறக்கட்டளை தனிப்பட்ட முறையில் சொந்தமானது. இதில் யாரும் தலையிட முடியாது என்று கூறிவிட்டார். பொதுக்குழுவைக் கூட்டி முடிவு எடுக்காமல் அறக்கட்டளை ஆரம்பிக்கக்கூடாது. ஆனால் அவர் அதனை ஆரம்பித்துவிட்டார். அவரே அதற்கு தலைவராகி, பிறைசூடனையும் சேர்த்துக்கொண்டார். எழுத்தாளர் சங்கத்தில் உள்ள ஆவணங்களையும் இரவோடு இரவாக எடுத்துக்கொண்டு அவரது வீட்டில் வைத்துக்கொண்டார். 

பொறுப்பில் உள்ள அனைவரும் அவரிடம் சென்று, ''அய்யா நீங்க பெரிய மனுஷன், சினிமாவுல உங்களுக்கு ஒரு மரியாதை இருக்கு. நீங்க தலைவராக இருங்க, பிறைசூடன் பொருளாளராக இருக்கட்டும், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இருந்து 3 பேரை சேர்த்து, அதாவது நான், மனோஜ்குமார், பாக்கியராஜ் ஆகிய 3 பேரும் சேர்த்து சங்கத்தை, அறக்கட்டளையை இயக்குவோம். 5 பேர் சேர்ந்து இயக்கினால் நன்றாக இருக்கும்'' என்றோம். இந்த யோசனை அவருக்கு நியாயமாகவும் இருக்கிறது. நிராகரிக்கவும் முடியவில்லை. 

விசு சார் என்ன சொன்னாருன்னா, ''பிறைசூடனை கேளுங்கள்'' என்றார். அவரைப்போய் கேட்டால், ''விசுவை கேளுங்கள்'' என்றார். ''அவரை கேளு, இவரை கேளு'' என்றார்கள். பழைய நிர்வாகிகளை சந்தித்துப் பேசும்போது, ''நாங்கள் விலகிவிட்டோம், சங்கத்திற்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை'' என்றார்கள். மதுமிதா என்பவர் திரிசக்தி சுந்தரராமனை உறுப்பினராக ஆக்கியிருக்கிறார். 
 

திரிசக்தி சுந்தரராமனை தொடர்பு கொண்ட பாக்கியராஜ், நிலைமையை விளக்கினார். அதற்கு அவர், ''எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. நீங்க எந்த முடிவை வேண்டுமானாலும் எடுங்கள்'' என்றார்.
 

இதற்கிடையில் பிணம் திண்ணும் ஓநாய்கள், கழுகுகள் என வாட்ஸ் அப்புகளில் எங்களை அவதூறாக செய்திகளை பரப்பினார்கள். 
 

நடந்ததையெல்லாம் மறந்து, நாமெல்லாம் ஒன்றாக இணைந்து பணியாற்றலாம் என்று பாக்கியராஜ் விசுவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதற்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, சுந்தரராமனை விட்டு வழக்கு போட்டார். 
 

இதையடுத்து நாங்கள் பொதுக்குழுவை கூட்டினோம். விவாதித்தோம். மறுபடியும் ஒரு கடிதம் கொடுத்தோம். எந்த பிரச்சனையானாலும் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தோம். 
 

 

 

ஆனால் விசு, பிறை சூடனை பாருங்கள் என்றார். பிறைசூடன் விசுவை பாருங்கள் என்றார். வேறு வழியில்லாமல்தான் ரூபாய் 37 லட்சம் மோசடி செய்துள்ளதாக புகார் கொடுத்தோம். இப்பவும் நாங்கள் அவர்களை சேர்த்துக்கொள்ள தயாராக இருக்கிறோம். 

இப்பொழுதுள்ள நிர்வாகிகள் எப்பொழுது பதவியேற்றார்கள்? எவ்வளவு ஆண்டுகள் உங்கள் பதவிக்காலம்?
 

கடந்த மார்ச் மாதம் தேர்தல் நடந்தது. அதில் யாரும் எங்களக்கு எதிராக போட்டியிடவில்லை. அன்னப்போஸ்டிங்கில் அனைவரும் பொறுப்புக்கு வந்தோம். பதவி காலம் இரண்டு ஆண்டுகள். 
 

உங்க சங்க உறுப்பினர்களுக்கு என்னென்ன நலத்திட்ட உதவிகள் செய்திருக்கிறீர்கள்?
 

கடந்த வருடம் கூட மருத்துவ உதவி, கல்வி கட்டண உதவி உள்ளிட்ட எத்தனையோ உதவிகள் செய்திருக்கிறோம். 
 

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், இப்போது உங்கள் சங்கம்... அனைத்திலுமே ஊழல் புகார்கள் எழுகின்றன. இதற்கு காரணம் என்ன?
 

சங்கம் ஆரம்பிக்கும்போது நல்ல எண்ணத்துடன்தான் அனைவரும் ஆரம்பித்தனர். அப்போது நிர்வாகிகளாக இருந்தவர்கள் சுயநலம் பார்க்காமல் பொதுநலத்தை பார்த்தார்கள். சமீபத்தில் சங்கத்தில் கொஞ்சம் நிதி சேர்ந்தவுடன் அதை அனுபவிக்க சிலர் உள்ளே புகுந்துகொண்டனர். 
 

சங்க உறுப்பினராக இருந்தால்தான் சினிமாவில் பணியாற்ற முடியும் என்ற கட்டுப்பாடெல்லாம் இன்னும் இருக்கிறதா?
 

 

 

கண்டிப்பாக இருக்கிறது. உறுப்பினராகி சினிமாவில் பணியாற்றுவதுதான் முறை. அப்போதுதான் உறுப்பினருக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால் சங்கம் தீர்வு காண முயற்சி எடுக்கும். பிரச்சனையை தீர்த்து வைக்கும் என்றார்.
 

கே.பாக்யராஜ், மனோஜ்குமார், ரமேஷ்கண்ணா ஆகியோரின் குற்றச்சாட்டை மறுத்து பிறைசூடன் தலைமையிலான உறுப்பினர்கள் சென்னை போலீஸ் கமிசனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அதில், முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை. 37 லட்சம் பாரத் ஸ்டேட் வங்கியில் உள்ளது. உள்நோக்கத்தோடு புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். 
 

 

 

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.