Skip to main content

என்ன செய்யப் போகிறது பாமக?

Published on 28/01/2021 | Edited on 29/01/2021

 

What is pmk going to do in upcoming election

 

'தேர்தல் திருவிழா 2021' மிக விரைவில் கொடியேற்றிக் கொண்டாடப்பட இருக்கிறது.

 

அதற்குள், அனல் பறக்கும் அதிரடி பேச்சுகள், கனல் தெறிக்கும் கட்சிக் கூட்டங்கள் என அரசியல் ஃபீவர் அனைவரையும் தொற்றிக்கொண்டுள்ளது. 'கூட்டணிக் கணக்குகள்?', 'மூன்றாவது அணி?' எனத் தேர்தலுக்குத் தேர்தல் பேசப்படும் அத்தனை ஹேஷ்யங்களும் இப்போதும் இடம்பெறுகின்றன. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் கட்சித் தாவல் நடந்துவருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் முக்கியக் கட்சிகளுள் ஒன்றான பாமகவின் நிலைப்பாடு இந்தத் தேர்தலில் என்னவாக இருக்கும் எனப் பலரும் நகம் கடித்துக் கொண்டு காத்திருக்கின்றனர்.

 

கடந்த 2016 தேர்தலில் 'மாற்றம்! முன்னேற்றம்! அன்புமணி!' எனும் டேக் லைனுடன் களம் கண்டது பாமக. எதிர்பார்த்த 'முதல் கையெழுத்து' போடமுடியாவிட்டாலும் முக்கியக் கட்சி என்னும் அடையாளத்தை 5.3% வாக்குகள் பெற்று தக்கவைத்துக் கொண்டது. இதனால், தேர்தலுக்குத் தேர்தல் பாமக பற்றிய எதிர்பார்ப்புகள் எகிறிக்கொண்டே உள்ளது. 2019, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, அதிமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து ஆளுநரிடம் 'ஊழல் புகார்' வாசித்தது பாமக.

 

What is pmk going to do in upcoming election

 

'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததும் அதே பா.ம.க.தான். இதையொட்டி, தைலாபுரத்திற்கு அதிமுக தலைவர்கள் படையெடுத்துச் சென்றனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று இரண்டு கட்சித் தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களிடம் அறிவித்தனர். இருப்பினும் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடி அமையவில்லை. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றும், பாமகவின் கோட்டை என்று சொல்லப்பட்ட தர்மபுரியில், அன்புமணியே தோல்வியைத் தழுவினார்.

 

கடந்த தேர்தல்களில் சரிவைச் சந்தித்துள்ள பாமக வருகிற சட்டமன்றத் தேர்தலில் தன்னை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. போன தேர்தலில் 'மாற்றம் முன்னேற்றம்' என்றால், இந்தத் தேர்தலில் 'உள் இட ஒதுக்கீட்டை' கையில் ஏந்தியுள்ளது. இதனால், உள் இட ஒதுக்கீடு பற்றிய விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கின. இதன்பிறகு நடைபெற்ற பொதுக் குழு கூட்டத்தில், 'அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் என்ற தன்னுடைய நீண்ட நாள் கனவு கனவாகவே போகுமா?' என ராமதாஸ் உருக்கமாகப் பேசினார். இதனால், பாமக தனித்துக் களமிறங்கத் தயாராகிவிட்டதாகச் செய்திகள் பரவியது. 

 

ஆனாலும் பாமக அதிமுக இடையே புகைச்சல் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன என்றும் பாமக கூடுதல் தொகுதிகள் கேட்கிறது, அதிமுக தயக்கம் காட்டுகிறது என்றும் செய்திகள் றெக்கை கட்டியது. மேலும், உள் இட ஒதுக்கீடு சமாச்சாரத்தில் ராமதாஸ் உறுதியாக இருக்க, அதிமுக சமரசம் செய்ய முயன்று வருவதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், ஜனவரி 25-ஆம் தேதி நடைபெற இருந்த பாமகவின் நிர்வாகக்குழு கூட்டம், வரும் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தேர்தல் கூட்டணி குறித்த முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளதாக பாமகவினர் கூறுகின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக, "வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன். இல்லையெனில், வரும் 31ம் தேதி நடக்கும் நிர்வாகக் குழுவில் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும்" என கெடு விதித்துள்ளார் ராமதாஸ். இதனால் அதிமுகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

cnc

 

இன்னொருபுறம், சமீபத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் 'வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை திமுக ஏற்றுக்கொண்டால், கூட்டணி குறித்து ராமதாஸ் முடிவு செய்வார்' என்றார் ஜி.கே.மணி. இதனால், திமுக-பாமக கூட்டணிக்கு வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்பட்டது. பிறகு, ஜனவரி 25-ஆம் தேதி வெளியான முரசொலி இதழில், 'திமுகவை குறிவைக்கும் இலவு காத்த கிளி! மருத்துவர் ஐயாவின் பகல் கனவு' எனும் கட்டுரை, திமுக-பாமக கூட்டணி ஊகங்களைத் தவிடுபொடியாக்கியது.

 

திமுக கூட்டணியில் பாமக இணைவது பற்றி முரசொலி பதில் சொல்லிவிட்டது. அதிமுக கூட்டணியில் தொடர்வது குறித்து வரும் 31-ஆம் தேதி ஆலோசிக்க இருப்பதாக ராமதாசே கூறிவிட்டார். இந்நிலையில், பாமக, மீண்டும் தனித்துக் களமிறங்கப் போகிறதா அல்லது மூன்றாம் அணியைக் கட்டும் முயற்சியில் இறங்கப் போகிறதா எனப் பல்வேறு கேள்விகள் அரசியல் அரங்கில் எழுப்பப்படுகிறது.

 

என்ன செய்யப் போகிறது பாமக? 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.