Skip to main content

யார் ஆட்சியில் துப்பாக்கிச்சூடுகள் அதிகம்?

Published on 24/05/2018 | Edited on 24/05/2018

விடுதலை பெற்ற பிறகு தமிழகத்தில் முதன்முதலில் காங்கிரஸ் ஆட்சியில்தான் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்தி மொழியை கட்டாயப்பாடமாக திணிக்க மத்திய அரசு முயற்சி செய்தது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தை ஒடுக்க அன்றைக்கு உள்துறை அமைச்சராக இருந்த கக்கன் துப்பாக்கிசூடு நடத்த உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, நூற்றுக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகினர்.

 

அதன்பிறகு, 1972 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கோவில்பட்டி பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் 3 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

 

1980ஆம் ஆண்டு எம்ஜியார் ஆட்சியில் இலவச மின்சாரம், இலவச உரம் கோரி நாராயணசாமி நாயுடு தலைமையில் தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தை ஒடுக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில் 14 விவசாயிகள் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு குருஞ்சாக்குளத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 8 விவசாயிகள் உயிரிழந்தனர்.

 

shoot

 

1985 ஆம் ஆண்டு சென்னையில் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக நடத்திய போராட்டத்தை ஒடுக்க மீனவ நண்பனாகவும், படகோட்டியாகவும் நடித்த எம்ஜியார் உத்தரவில் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. அதில் 3 மீனவர்களும், பரமக்குடியில் நடைபெற்ற சாதிக்கலவரத்தை ஒடுக்க நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேரும் பலியாகினார்கள்.

 

அருப்புக்கோட்டை அருகே ராட்சத ஆழ்குழாய் கிணறு தோண்டுவதை எதிர்த்து 1987 ஆம் ஆண்டு விவிசாயிகள் நடத்திய போராட்டத்தை அடக்க துப்பாக்கிசூடு நடத்த எம்ஜியார் உத்தரவிட்டார். அதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகினர்.

 

1992 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் விவசாயிகள் சங்கத்தினர் நடத்திய போரட்டத்தை அடக்க ஜெயலலிதா துப்பாக்கிச் சூடுக்கு உத்தரவிட்டார். அதில் 2 பேர் பலியாகினர். 1994 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் காஞ்சிபுரத்தில் பஞ்சமி நிலத்தை மீட்க தலித் மக்கள் நடத்திய போராட்டத்தை அடக்க துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டார். அதில் 2 பேர் பலியாகினர்.

 

1995 ஆம் ஆண்டில் நெல்லை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சாதிக்கலவரத்தை அடக்க ஜெயலலிதா உத்தரவின் பேரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் 2 பேர் பலியாகினர்.

 

1991 ஆம் ஆண்டு பதவியேற்ற ஜெயலலிதா, எம்ஜியாரைப் போலவே தனது ஆட்சிக்காலத்திலும் துப்பாக்கிச் சூடுக்கு மிகச் சாதாரணமாக உத்தரவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

 

1997 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கயத்தாறு, சிவகாசி ஆகிய இடங்களில் போராட்டத்தைக் கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் உயிர்ப்பலி ஏதுமில்லை.

 

1997 ஆம் ஆம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தடையை மீறிய டாக்டர் கிருஷ்ணசாமியை போலீஸார் கைது செய்தனர். இதைக் கண்டித்து நெல்லையில் நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட  மோதலைக் கட்டுப்படுத்த போலீஸ் துப்பாக்கிச் சூடுக்கு உத்தரவிடப்பட்டது. அதில் ஒருவர் பலியானார்.

 

மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர் கூலி உயர்வுகேட்டு நடத்திய போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து நெல்லையில் பேரணி நடத்தப்பட்டது. அப்போது நடந்த கலவரத்தை அடக்க தடியடி நடத்தினார்கள். தடியடியில் தப்பிக்க கலைந்து ஓடியவர்கள் தாமிரபரணி ஆற்றில் குதித்தனர். இதில் 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டில் இறந்ததாக கூறப்பட்டாலும் அதற்கு ஆதாரம் இல்லை என்று கூறப்பட்டது.

 

2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தண்டனைபெற்ற குற்றவாளி என்ற நிலையில் சட்டத்துக்குப் புறம்பாக ஜெயலலிதா இரண்டாம் முறையாக பதவியேற்றார். உடனே திமுக தலைவர் கலைஞரை கைது செய்ய உத்தரவிட்டார். நள்ளிரவில் நடைபெற்ற அந்த கைதை கண்டித்து திமுகவினர் நடத்திய போராட்டத்தை கலைக்க ஜெயலலிதா துப்பாக்கிசூடு நடத்த உத்தரவிட்டார். அதில் 4 திமுகவினர் பலியாகினர்.

 

2011 ஆம் ஆண்டு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்காக சென்றவர்கள் மீது இன்னொரு பிரிவினர் நடத்திய தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர ஜெயலலிதா துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டார். அதில் 7 பேர் பலியாகினர்.

 

2013 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி ராமேஸ்வரம் தங்கச்சி மடத்திலும், 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி தேனியில் பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் ஒருவரின் இறுதி ஊர்வலத்திலும், 2016 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி நெல்லை மாவட்டத்தில் காதல் பிரச்சனையால் ஏற்பட்ட மோதலைக் கலைக்கவும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மூன்றுசம்பவங்களும் அதிமுக ஆட்சியில் நடைபெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்போது, 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அமைதியாக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காட்டுமிராண்டித் தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அப்பாவிகள் 13 சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

 

மொத்தத்தில் எம்ஜியார், ஜெயலலிதா ஆட்சிகளில்தான் எதற்கெடுத்தாலும் துப்பாக்கிச்சூடு நடத்தி போராட்டங்கள் ஒடுக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது.

 

 

Next Story

விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலரின் கண்கள் தானம்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Eye donation of a policeman who passed away in a two-wheeler accident

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, இவர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 28  ஆம் தேதி இரவு அண்ணாமலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் நாட்றம்பள்ளி நோக்கிச்சென்று கொண்டிருந்த போது, கல்லாறு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர  தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் அண்ணாமலையும் மற்றும் அவரது நண்பரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனளிக்காமல் அண்ணாமலை 29 ஆம் தேதி மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவலர் அண்ணாமலையின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார்.