Skip to main content

திமுக, அதிமுக கனவு நனவாவது அவ்வளவு எளிதல்ல... ம.நீ.ம. கடும் தாக்கு... 

Published on 28/12/2019 | Edited on 30/12/2019

 

மக்கள் நீதி மய்யம் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் நக்கீரன் இணையதளத்திடம் சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.



மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியரிமை சட்டத்திற்கு எதிராக திமுக நடத்திய பேரணியில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ளாதது பற்றிய விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறதே?
 

பேரணியில் கலந்து கொண்டாலும் ஒரு விவாதம் இருக்கத்தான் செய்யும். அது வேறொரு விவாதமாக வரும். திமுக நடத்தியப் போராட்டம் நல்ல போராட்டம். வலிமையான போராட்டம். திமுகவுக்கு கொடுத்த கடிதத்திலேயே, ''இந்த மசோதாவை எதிர்க்கிற எல்லோருக்கும் எங்களது ஆதரவு உண்டு. அதேபோல் உங்களுக்கும் எங்களது ஆதரவு உண்டு'' என்றுதான் சொல்லியிருப்போம்.


கடைசி வரியில் ''ஒற்றைக் குரலாக ஒலிப்போம்'' என்று எங்கள் தலைவர் சொல்லியிருக்கிறார். அந்த பேரணியில் கலந்து கொள்ளக்கூடாது என்ற எண்ணம் இல்லை. கலந்து கொள்ளக்கூடிய சூழல் இல்லை என்பதுதான் உண்மை. 


 

 mnm


 

தொடர்ந்து குடியரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் மக்கள் நிதி மய்யத்தின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன?

 

தொடர்ச்சியாக போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு போராட்டம் நடத்தி அதனை பதிவு செய்துவிட்டு போவதற்கான சூழல் இல்லை. அதேபோல எத்தனைப் போராட்டங்கள் என்பதற்கும் கணக்கு இல்லை. 
 

மக்களை வீதியில் இறக்கி போராட்டம் நடத்துவதைவிட மத்திய அரசை கோர்ட்டுக்கு வரவழைத்துள்ளோம். அங்கு நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டும். ஒன்று சட்டத்தின் நியாயத்தை விளக்க வேண்டும், விதிமுறைகளை மாற்ற வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும். இருப்பதிலேயே வலிமையான போராட்டமாக அதைத்தான் நினைக்கிறோம். 
 

இரண்டாவது மக்கள் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்த திட்டம் இருக்கிறது. தற்போது இந்த நிமிடம் எங்கள் தலைவர் ஊரில் இல்லை. அவர் வந்தவுடன் அடுத்தக் கட்டப் போராட்டங்கள் குறித்து முடிவு செய்யப்படும். 


 

 

உள்ளாட்சித் தேர்தலை சந்தித்திருக்கலாம் என்ற எண்ணம் மக்கள் நீதி மய்யத்திற்கு தோன்றுகிறதா? 
 

உள்ளாட்சித் தேர்தல் தொண்டர்களுக்கு மிகவும் பங்களிப்புள்ள தேர்தல் என மனசுக்கு தெரிந்தே ஒதுங்கி வந்தோம். உள்ளாட்சித் தேர்தல் முக்கியமான தேர்தல்தான். ஆனால் அவர்கள் சரியாக நடத்தவில்லை. பாதி நடத்துகிறார்கள், பாதி நடத்தவில்லை. உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பில் குளறுபடி என நீதிமன்றத்திற்கு போகிறார்கள். இதனால்தான் அந்தத் தேர்தலில் பங்கேற்கவில்லை. 
 

அரசியல் கட்சி என தொடங்கிவிட்டால் அனைத்துத் தேர்தல்களையும் சந்திக்க வேண்டும். வெற்றியோ தோல்வியோ சீமான் தேர்தலை சந்திக்கிறார். ஆனால் கமல் உள்ளாட்சி தேர்தலில் பின்வாங்கியது ஏன் என்ற கேள்வி எழுகிறது...
 

அரசியல் கட்சி என தொடங்கிவிட்டால் அனைத்துத் தேர்தல்களையும் சந்திக்க வேண்டும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. அதே நேரம் ம.நீ.ம. எதற்கு தொடங்கப்பட்டது என்றால், இங்கு உள்ள கட்சிகள் போதாது என்றோ, எங்கள் தலைவர் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காகவோ தொடங்கிய கட்சி அல்ல. இப்போதுள்ள அரசியல் அமைப்பையே மாற்றி அமைக்க வேண்டும். இன்று உள்ள ஆட்சி அமைப்பை மாற்றவேண்டும். இப்போதுள்ள அரசியல் கலாச்சாரத்தையே மாற்ற வேண்டும். அதற்கு வலிமையான இடத்தில் உட்கார வேண்டும். அப்படியென்றால் ஆட்சியை கைப்பற்ற வேண்டும். அதற்கான காலம் 2021. அதற்கான போருக்கு போகும்போது முழுமையாக போக வேண்டும். பலவீனமாக இருந்து களத்தில் குதிப்பது அர்த்தம் கிடையாது. கடந்த தேர்தலை சந்தித்தபோது ஒரு இடத்தில் 13 சதவீத வாக்குகள் பெற்றிருந்தோம். ஒரு இடத்தில் ஒரு சதவீதம் வாக்கு பெற்றிருக்கிறோம். சில பூத்துக்களில் 35 சதவீதம் வாங்கியிருக்கிறோம். இப்படிப்பட்ட ஆதரவை எந்தக் கட்சிக்கும் மக்கள் கொடுத்தது இல்லை.
 

எங்களது கட்டமைப்பை உறுதிப்படுத்துவதற்குள் தேர்தலை சந்தித்ததுதான் பலவீனமாக போய்விட்டது. நாளை வரும் தேர்தலை சந்திக்கும்போது அப்படிப்பட்ட பலவீனம் இருக்கக்கூடாது. கட்சியை வலுப்படுத்த வேண்டும், களத்தை பலப்படுத்த வேண்டும், ஒவ்வொரு வாக்காளரையும் ம.நீ.ம. நிர்வாகிகள் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஓய்வு. இன்னும் ஓரிரு மாதங்களில் தமிழகத்தின் கடைசி பூத் வரை நிர்வாகிகளை நியமித்துவிடுவோம். 
 

சட்டமன்றத் தேர்தலில் எங்களது கட்சி வெற்றிக்கான கணிப்பில் உள்ள கட்சியாக இருக்கும். அப்படி இருக்க கட்சியை தயார் படுத்திக்கொண்டிருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலைவிட சட்டமன்றத் தேர்தலை முக்கியமாக கருதுகிறோம். 


 

 

கிராமப்புறங்களில் மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்கு வங்கி இல்லை. இந்தநிலையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் எடுத்த வாக்கு சதவீதத்தற்கு பாதிப்பை ஏற்படுத்தும், அது சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று விமர்சனம் செய்கிறார்களே...
 

நாங்கள் எங்கள் திட்டத்தில் தெளிவாக இருக்கிறோம். 2021 சட்டமன்றத் தேர்தலில் 4 சதவீத வாக்குள் பெற்ற ம.நீ.மய்யமாக இருக்கக்கூடாது. மாற்று வாய்ப்புக்குள்ள கட்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது திட்டம். அதற்காகத்தான் எல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டு எங்களது கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறோம். மீண்டும் சொல்கிறேன் இருக்கும் கட்சிகளில் இன்னொரு கட்சியாக வந்த கட்சி ம.நீ.ம. அல்ல. குறிக்கோளுடன் வந்திருக்கிறோம். அதனை நிறைவேற்ற போராடுகிறோம். 
 

கடந்த 50 வருடங்களாக திமுக, அதிமுக ஆட்சியில் இருந்துள்ளது. கிராம பஞ்சாயத்துக்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள், கைக்குள் இருக்க வேண்டும் என்று திமுக, அதிமுக ஆசைப்படுகிறது. மத்திய அரசிடம் சுயாட்சி கேட்கிற மாநில அரசு, கிராமப் பஞ்சாத்துக்களுக்கு முழுமையான அதிகாரங்களை கொடுப்பதில்லை. அதைக் கொடுப்பதற்குக்கூட நாங்கள்தான் வரவேண்டும். 

 

Murali Appas


 

இந்த உள்ளாட்சித் தேர்தலே குறைபிரசவம். நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல முடியாமல் தேர்தலை அறிவித்திருக்கிறார்கள். இந்த தேர்தலை யாராவது நிறுத்திவிடமாட்டார்களா என்று ஆசைப்பட்டார்கள். இந்தத் தேர்தல் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தப்போவதில்லை. இதில் வெற்றிபெறுபவர்களின் பதவி காலம் என்ன? என்ற சந்தேகத்தை உருவாக்குகிறார்கள் இங்கு உள்ள கட்சிகள். 
 

ம.நீ.மய்யத்தை பொறுத்தவரை 2021 பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவோமானால் எல்லாவற்றுக்கும் மாற்று இருக்கிறது. எந்த வகையிலும் விட்டுக்கொடுக்கவோ, அந்த வாய்ப்பை நழுவ விடவோ தயாராக இல்லை. எங்களிடம் இத்தனை வாக்கு சதவீதம் இருக்கிறது என்று யாரிடமாவது சென்று எம்பி சீட்டு வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது. மிகத் தெளிவாக சொல்கிறோம் வரும் 2021 தேர்தலில் திமுக, அதிமுகவை எதிர்த்து நிற்கப்போகிறோம். 2021 தேர்தலில் திமுக, அதிமுக தங்களது கனவை நனவாக்குவது அவ்வளவு எளிதல்ல. அதிமுக ஆட்சியில் மட்டுமல்ல, அரசியலில் இருந்தே ஓய்வு பெறும் காலம் வரும். 
 

2021 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம், ரஜினியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளதா?  
 

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற இரண்டு பேரின் நோக்கத்தில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த நட்பு சென்று கொண்டிருக்கிறது. தேவைப்படுமானால் வாய்ப்பு இருக்கத்தான் செய்யும். திமுக, அதிமுகவை வீழ்த்துவதற்கு அது தேவை என்றால் அதுவும் நடக்கும். 


 

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.