Skip to main content

தேர்தல் ஆணையத்துக்கு அ.தி.மு.க. பெப்பே!

Published on 01/03/2021 | Edited on 01/03/2021

 

ddd

 

சட்டம் - ஒழுங்கு சரியில்லை எனத் தமிழக அதிகாரிகளுடன் ஆலோசித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடிந்துகொண்டது, எடப்பாடி பழனிசாமியை டென்ஷனாக்கிவிட்டது என்பதை நக்கீரன் விரிவாக எழுதியிருந்தது. இதையடுத்து கடந்த 17ம் தேதி இரவில், 54 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து அதிரடி அறிவிப்பு, வெளியானது.

 

அந்தப் பட்டியலில், 50வது பெயராக இருந்தவர், வந்திதா பாண்டே ஐ.பி.எஸ். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக இருந்து, பொருளாதாரக் குற்றப்பிரிவு எஸ்.பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் பிரிவுகளுக்கும் சட்டம் - ஒழுங்குக்கும் என்ன சம்பந்தம் எனக் காவல்துறையினரிடம் கேட்டபோது, "ஒரு புண்ணாக்கும் இல்லை. நேர்மையாக செயல்பட்ட அதிகாரிகள் புண்ணாகிக் கிடப்பதுதான் மிச்சம்'' என்றார் காவல்துறை அதிகாரி ஒருவர்.

 

கரூர் அன்புநாதன் என்ற பெயரை அத்தனை சீக்கிரமாக தமிழக அரசியல்களம் மறந்திருக்காது. 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வுக்காக அரசாங்க முத்திரையைப் போலியாகப் பதித்திருந்த ஆம்புலன்ஸில் கட்டுக்கட்டாகப் பணம் கடத்தி, வாக்காளர்களுக்கு விநியோகம் செய்த குற்றச்சாட்டில் கைதானவர். அவரது வீட்டில் நடந்த சோதனையில் ஆம்புலன்சுடன், 10 லட்சத்து 38 ஆயிரத்து 820 ரூபாயும், பணம் எண்ணும் மெஷின்களும், வாக்காளர் பட்டியலும் கையும் களவுமாகப் பிடிபட்டன. இந்த ரெய்டை முன்னின்று நடத்தியவர்தான் எஸ்.பி. வந்திதா பாண்டே.

 

தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படை, வருமானவரித்துறை எனப் பல தரப்பிலும் கரூர் அன்புநாதன் சோதனைக்குள்ளானார். வ.வ.துறையிடம் 4 கோடியே 77 லட்ச ரூபாய் சிக்கியது. அனைத்தும் அரவக்குறிச்சி தொகுதிக்கான ஆளுங்கட்சியின் பண விநியோகத்திற்கானது எனக் கண்டறியப்பட்டது. அரவக்குறிச்சி தேர்தலை ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம். கரூர் அன்புநாதன் மீது வழக்குகள் பதியப்பட்டன.

 

ஃப்ளாஷ்பேக் முடிந்துவிட்டதா? சமீபத்தில் சென்னையில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழக தலைமைச் செயலாளர் முன்னிலையில் டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகளிடம் கடுமை காட்டியபோது, 5 ஆண்டுகளாக கரூர் அன்புநாதன் கேஸில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்? எனக் கேட்டிருக்கிறார். வருமான வரித்துறை கமிஷனர் அப்போது அங்கு இல்லை. ஜாயிண்ட் கமிஷனர்தான் இருந்திருக்கிறார். கமிஷனர் ஏன் வரவில்லை என்றும் சுனில் அரோராவின் கோபம் வெளிப்பட்டுள்ளது.

ddd

 

அன்புநாதன் வழக்கு என்னதான் ஆனது? அரசு முத்திரையுடன் போலி ஆம்புலன்ஸில் பணம் கடத்தி, வாக்காளர்களுக்கு விநியோகித்தது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் வழக்கில் அன்புநாதன் விடுவிக்கப்பட்டுவிட்டார். வருமான வரித்துறை போட்ட வழக்குக்கு எதிராக நீதிமன்றம் சென்றது அன்புநாதன் தரப்பு. வழக்கு குவாஷ் செய்யப்பட்டுவிட்டது.

 

இதனை தலைமைத் தேர்தல் ஆணையரிடம் டி.ஜி.பி. திரிபாதி தெரிவித்தபோது, "ஏன் அப்பீல் போகவில்லை?'’ எனக் கேட்டிருக்கிறார். காவல்துறையும் போகவில்லை. வருமானவரித்துறையும் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. கரூர் அன்புநாதன் மூலமாக அ.தி.மு.க. அமைச்சர்கள் நடத்திய பணப்பரிமாற்றம், வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வருமானவரித்துறை தோண்டித் துருவியெடுத்தவற்றை நக்கீரன் அப்போதே விரிவாக வெளியிட்டிருந்தது. ஆனாலும், அதிகாரப் பலத்தாலும் செல்வாக்காலும் கரூர் அன்புநாதன் தப்பிவிட்டார். அவர் மீது நடவடிக்கை மேற்கொண்ட எஸ்.பி.வந்திதா பாண்டே?

 

2015ல் கரூர் எஸ்.பியாக நியமிக்கப்பட்டவர், 2016ல் ஆம்புலன்ஸில் இருந்த பணத்தைப் பிடித்ததும், ராஜபாளையம் பெட்டாலியனுக்குத் தூக்கியடிக்கப்பட்டார். 2017ல் ஆவடி பெட்டாலியனுக்கு மாற்றப்பட்டார். அதன்பின் 2018ல் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கும், தற்போது பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டிருக்கிறார்.      

 

அதுபோலவே, கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில், திருப்பூரில் மூன்று கண்டெய்னர் லாரிகள் 570 கோடி ரூபாய் பணக்கட்டுடன் சிக்கின. அப்போது, திருப்பூர் எஸ்.பி.யாக இருந்த சரோஜ் தாக்கூர்தான் அதனை மடக்கினார். ஆளுங்கட்சியின் தலைமையிடமிருந்து நேரடியாக அனுப்பப்பட்ட பணம் என்ற செய்திகள் வெளியான நிலையில், மத்திய அரசே நேரடியாகத் தலையிட்டு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட பணம் எனக் கணக்கை முடித்தது. இதன் உள்விவகாரங்களை ‘கண்டெய்னர் பணம் - மறைக்கப்படும் உண்மைகள் - அம்பலப்படுத்தும் ஆதாரம்’ என 2016 மே 20-23 தேதியிட்ட நக்கீரன் இதழ் வெளியிட்டது.

 

இந்தியத் தேர்தல் களத்தில் இவ்வளவு பெரிய தொகை இதுவரை சிக்கியதில்லை. அதனைப் பிடித்த எஸ்.பி. சரோஜ் தாக்கூர், இப்போது சைபர் க்ரைம் பிரிவில் முடக்கப்பட்டிருக்கிறார்.

 

இதைச் சுட்டிக்காட்டும் காவல்துறை உயரதிகாரிகள், "ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என இப்போது கேட்கின்ற தேர்தல் ஆணையம், கடந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து, நேர்மையான நடவடிக்கைகளை மேற்கொண்ட போலீஸ் அதிகாரிகள் என்ன ஆனார்கள் என்பது பற்றி கவலைப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு செயல்பட்டவர்களின் 5 ஆண்டுகால சர்வீஸ் வீணடிக்கப்பட்டிருக்கிறது. நேர்மையாக செயல்பட்டவர்கள் காவு கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்'' என்கிறார்கள் விரக்தியுடன்.

 

ஆளுந்தரப்பினர் மாவட்டந்தோறும் கரன்சிகளையும் மதுபாட்டில்களையும் கொண்டு சேர்த்துவிட்டனர். அ.தி.மு.க.வுக்காக இந்த முறையும் ஆம்புலன்ஸை ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் கரூர் அன்புநாதன்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.