Skip to main content

“தமிழ் சினிமா உள்ள சன் டிவி வந்துட்டா, சினிமா அழிஞ்சுரும்...”- நடிகர் ஜே.கே ரித்தீஸ் 

Published on 04/12/2018 | Edited on 04/12/2018

தமிழ் சினிமாவிலுள்ள நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் நடிகர் விஷால் முக்கியமான பொறுப்பில் இருக்கிறார். விஷால் பொறுப்பிற்கு வருவதற்கு முன் அவருடன் இருந்த சிலர், பதவிக்கு வந்தபின் அவரையே எதிர்க்க தொடங்கிவிட்டனர். இது பலருக்கு மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. அதில் குறிப்பாக விஷாலுக்கு நெறுங்கிய நண்பராக இருந்தவர் ஜே.கே ரித்தீஸ். தற்போது இவர் விஷாலை எதிர்த்து வருகிறார். இந்நிலையில் அவரை சந்தித்து நேர்காணல் செய்தோம்,  அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள்....
 

jk rithish

 

 

நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு உதவியாக இருந்த நீங்கள் அவரை தற்போது எதிர்ப்பது ஏன்? 

விஷால் நடிகர் சங்கத்திற்குள் வந்ததற்கு நான் தான் காரணம். ஏற்கனவே நடிகர் சங்க பொறுப்பில் இருப்பவர்களுக்கு வயதாகிவிட்டது, அவர்களே பல காலகட்டம் இருந்துவிட்டார்கள். சங்கத்தில் வேறு மாற்றம் வந்து புது நிர்வாகம் வந்தால் சரியாக இருக்கும் என்பதற்காக நான் விஷால் பக்கம் இருந்தேன். எப்போது விஷாலுக்கு பழி வாங்குகிற எண்ணம் வந்ததோ, அப்போதே நான் சங்கத்தைவிட்டு விலகிவிட்டேன். அதன் பின்பு, அவர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக நிற்கிறேன் என்று சொன்னபோதுகூட. ஏற்கனவே ஒரு சங்கத்தில் இருக்கிறீர்கள். அதில் சொன்னதை செய்து வெற்றிபெற்றால் மக்களே உங்களை ஏற்றுக்கொள்வார்கள். அதன்பின் அடுத்த நிர்வாகத்திற்குள் வரலாம் என்றேன்.  அகல விழுவதைவிட ஆழ விழுவதே மேல் என்று சொல்வார்கள். ஆனால், அவரோ இல்லை நான் இப்போதே தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் நிற்பேன் என்றார். நான் இதற்கு முழு எதிர்ப்பாகவே இருந்தேன். அவரும் என் பேச்சை கேட்கவில்லை, தனியாக ஒரு குழுவை அமைத்து தயாரிப்பு சங்கத்தில் போட்டியிட திட்டமிட்டார்கள்.இதன் பின் அவருடன் இருப்பவர்களிடம், அவர் ஏற்கனவே ஒரு சங்கத்தில் இருக்கிறார். எதற்கு இன்னுமொரு சங்கத்தில் இழுத்துவிடுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நான் அவரை ஒன்றும் அழைக்கவே இல்லை. அவராகவே நான் தான் தலைவர் என்று சொல்லிக்கொள்கையில் நாங்கள் என்ன செய்வோம் என்றனர். இது நடந்துகொண்டு இருக்கும்போதே விஷால் ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிட போகிறேன் என்று காமெடியை செய்தார். நாங்களெல்லாம் அதைபார்த்து சிரித்துகொண்டிருந்தோம். நான் ஆர்.கே நகர் தேர்தல் வேலைகளில் பிஸியாக இருந்ததால், தயாரிப்பாளர்கள் தேர்தலை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். நான் தயாரிப்பாளர் என்ற முறையில் அப்போது ராதாகிருஷ்ணனுடன் இருந்திருந்தால் அவர்தான் கண்டிப்பாக தலைவராகி இருப்பார். 

 

நடிகர் சங்கத் தேர்தலிலும், தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலிலும் போட்டியிடுவதற்கு முன்பு பல வாக்குறுதிகள் கொடுத்த விஷானில் நடவடிக்கைகள் தற்போது  என்னவாக இருக்கிறது?

இந்த இரண்டு சங்கத்திலும் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன் விஷாலுக்கு பல பிரச்சனைகள் இருந்தது. தற்போது பதவிக்கு வந்த பின்னர் அவருடைய சொந்த பிரச்சனைகள் எல்லாம் சரி செய்யப்பட்டது. மற்ற தயாரிப்பாளர்கள் பிரச்சனை எல்லாம் பெரிதாக்கப்பட்டது. குறிப்பிட்ட அளவிலான தியேட்டர்களில் மட்டும்தான் படங்களை வெளியிட வேண்டும் என்று அவர் அறிக்கை வெளியிட்ட அடுத்த வாரத்திலேயே அவருடைய படங்கள் அந்த விதிகளை மீறி 450 தியேட்டர்களில் வெளியானது. சொல்லுக்கும் செயலுக்கும் சம்மந்தமே இல்லாதவர் நண்பர் விஷால். 

 

 

 

அவருடைய பிரச்சனைகளை யார் தீர்த்து வைத்தார்கள்?

எனக்கு தெரிந்தவரை லைகா தயாரிப்பு நிறுவனம் அவருடைய பல பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளது. விஷால் ஒன்றும் பெரிய ஆளில்லை, அவருடைய படங்களை பெரிய தொகை கொடுத்து வாங்கவேண்டிய கட்டாயமும் லைகா நிறுவனத்திற்கு இல்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்ற பதவியை வைத்திருப்பதால்தான் லைகா நிறுவனம் இப்படியெல்லாம் செய்கிறது. அவருடைய படங்களை வாங்கியும், அது சரியாக ஓடவில்லை. சண்டக்கோழி 2 படத்தில் வேலை செய்தவர்களுக்கு சரியாக பணம் இன்னும் வரவில்லை என்று அதை அந்த யூனியனை சேர்ந்தவர் விஷால் நிறுவனத்திடம் கேட்டிருக்கிறார். இவ்வாறு அவர் கேட்டதால் விஷாலும் ஃபெஃப்ஸி தலைவர் ஆர்.கே. செல்வமணியும் சேர்ந்து ஃபெஃப்ஸியிலிருந்து ஒரு யூனியனையே தூக்கி இருக்கிறார்கள். இது எதுவும் பைலாவில் இல்லை, தன்னுடைய பவரை பயன்படுத்தி இவ்வாறு விஷால் செய்கிறார். நானும் ஐந்து வருடம் எம்பியாக இருந்திருக்கிறேன். எந்த ஒரு பதவிக்கும் காலவரை இருப்பதுபோன்று கடவுள் வரயறை செய்துள்ளார். யார் ஒருவர் தன்னுடைய பதவியின் பவரை பயன்படுத்தி தவறாக நடந்துகொள்கிறார்களோ, தங்களின் பதவிக்காலம் முடிந்தபின்னர், அவர்களின் நிலைமை கேள்விக்குறியாகத்தான் இருந்திருக்கிறது. அது பிரதமர் பதவியாக இருந்தாலும் சரி. பொதுநலமாக இருப்பேன் என்று சொல்லிவிட்டு இப்படி சுயநலமாக அவருடைய படங்கள் ஓடுவதிலேயே முழு சிந்தனையாக இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் சங்க உறுப்பினர்களுக்கு என்று எதையுமே செய்ததில்லை. 

 

விஷாலின் எந்த மாதிரியான பிரச்சனைகளை சரி செய்திருக்கிறது லைகா நிறுவனம்?

எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் 100 தியேட்டர்களில்தான் முதலில் வெளியிட வேண்டும் என்று விஷால் அறிவித்திருந்தார். அதனால் அந்த நிறுவனம் விஷாலின் படத்தை வாங்கி, 400 முதல் 500 தியேட்டர்களில் வெளியிட்டு அதற்கு ஒரு முடிவு கட்டினர். இதுவே ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்கள் வெளியிடப்பட்டிருந்தால் வேறு மாதிரி பிரச்சனை ஆகியிருக்கும். சங்ககத்தில் போட்ட தீர்மானத்தை விஷாலை வைத்தே உடைத்தது அந்நிறுவனம். இதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சன் டிவி கையில்தான் தமிழ் சினிமாவே இருந்தது.  ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களுமே அப்போது பிரச்சனையில் இருந்தனர்.

2008 ஆம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் என்ற ஒரு படம் சன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டபோது பயங்கரமான எதிர்ப்பு கிளம்பியதே?

அதை நான்தான் செய்தேன். அப்போது திமுகவில் இருந்தேன். அக்கட்சியில் இருந்தபோதே சொன்னேன், தமிழ் சினிமாவுக்குள் சன் டிவி வந்தால் ஒட்டுமொத்த சினிமாவும் அழிந்துவிடும் என்றேன். அவர்களிடம் சொந்தமாக சேனல்கள் இருக்கிறது. தற்போது எந்த ஒரு பொருளாக இருந்தாலும் விளம்பரம் செய்தால்தான் விற்கப்படுகிறது. சேனல்களை வைத்து அவர்கள் செய்யும் விளம்பரத்தால் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் எடுக்கும் படமும் தோல்விடையும். நீங்க சன் டிவிக்கு ஒரு கட்டுப்பாடு வையுங்கள். அதை யாரும் கேட்கவில்லை, அவ்வாறு கேட்காததால் அந்த காலகட்டத்தில் பல தயாரிப்பாளர்கள் நஸ்டம் அடைந்தார்கள். நீங்க எவ்வளவு கோடி போட்டு படம் எடுத்தாலும் சன் டிவியிடம் விற்க வேண்டும் இல்லையென்றால் உங்கள் படம் ரிலீஸாகாது, பெரிதாக ஓடாது. இது போன்ற சூழ்நிலை அந்த காலகட்டத்தில் இருந்தது. அதன் பின் அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் இதற்கு ஒரு முடிவு வந்தது. அனைத்து படங்களுக்கும் நியாயம் கிடைத்தது. இப்போது மீண்டும் சன் டிவி தலையெடுத்து வைக்கிறது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சன் டிவியின் தொழிலாளி ஆகிவிட்டார். 

 

விஷாலை இயக்குவது லைகாவா அல்லது சன் டிவியா?

இரண்டுமே அவரை இயக்குகிறது. அவர் நடுத்தர தயாரிப்பாளர்களை தவிர்த்து பெரிய பெரிய கம்பெனிகளுக்காக இயங்குகிறார். இந்த பதவி இருக்கும் வரைதான் அவர்கள் கண்டுகொள்வார்கள். பதவி முடிந்த் வேறொருவர் தலைவராக வந்தால், விஷாலை தூக்கிப்போட்டுவிடுவார்கள். அவர் இந்த பதவியை வைத்து பழிவாங்குவது தண்டிக்கப்பட வேண்டிய ஒன்று, கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்.  

 

 

 

 

Next Story

ரத்னம் பட ப்ரமோஷன்; வீதி வீதியாக சென்று ஆதரவு கோரும் இயக்குநர் ஹரி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Director Hari goes from street to meet people for the promotion of Rathnam movie

நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் நாளை வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இதயொட்டி அப்படத்தின் இயக்குநர் ஹரி இன்று வேலூர் விருதம்பட்டில் உள்ள திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தார் அப்போது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வேலூர் எனக்கு சென்டிமென்ட்டான ஊர் இங்கிருந்து தான் திரைக்கதைகளை எழுதுவேன். எனக்கும் வேலூருக்குமான நெருக்கம் அதிகமாக உள்ளது. ரத்தினம் என்னுடைய 17 வது படம் நடிகர் விஷாலை வைத்து இயக்கும் மூன்றாவது படமாகும் இப்படம் வெற்றி பெறும். வழக்கமாக எனது படம் பல மாவட்டங்களை சார்ந்திருக்கும். வட மாவட்டங்களை மையகப்படுத்தி படம் ஒன்று இயக்க திட்டமிட்டேன்.

அதன்படி ஆந்திரா - தமிழக மாவட்ட எல்லையான வேலூர் மாவட்டத்தில் இப்படத்தை இயக்கி உள்ளேன். மாநில எல்லைகளின் பிரச்சினை இந்த படத்தில் காட்டி இருப்பேன். இளைஞர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் குடும்பப் பாங்காகவும் அமைந்துள்ளது. பழைய படங்கள் மீண்டும் ரிலீஸ் ஆவது மகிழ்ச்சி அளிக்கிறது. பழைய படத்திற்கு ஆதரவு அளிக்கும் போது எங்களை மென்மேலும் ஊக்குவிக்கிறது. மீண்டும் நாங்கள் தரமான படங்கள் இயக்குவதற்காக எங்களை பணி செய்ய வைக்கிறீர்கள்” என்றார்.

Director Hari goes from street to meet people for the promotion of Rathnam movie

ரத்னம் ட்ரெய்லரில் கெட்ட வார்த்தை இடம் பெற்றிருப்பது குறித்து கேட்டதற்கு, “படத்துக்கு தேவை என்பதால் மட்டுமே சில கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. இது படத்தின் தேவையை கருதியே பயன்படுத்துகிறோம். மேலும் பொது மக்களுக்கு மிக நெருக்கமாக ரியாலிட்டியுடன் எடுக்க வேண்டும் என்பதால் இத்தகைய போக்கை கடைபிடிக்கிறோம். எனது கடந்த படமான யானை படத்துக்கு இங்கு வந்திருந்தேன். படம் வெற்றி பெற்றது இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும். ரத்தினம் படம் தமிழகத்தில் 750 ஸ்கிரீன்களில் வெளியிடப்படுகிறது. மக்களுக்கு நல்லது செய்வதற்காக நடிகர்கள் சினிமாக்கு வருவது சந்தோசம் தான்.

என்னுடைய படங்களில் குடும்ப செண்டிமெண்ட் கட்டாயமாக இருக்கும். இதுவே நமது கலாச்சாரமாக எண்ணி அனைத்து படத்திலும் அதை வலுவாக வைத்துள்ளேன். கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகி மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அதை பார்க்கும்போது எனக்கும் ஆசையாக உள்ளது எனது படத்தையும் ரீலீஸ் செய்ய வேண்டும் என்று இதற்கு தயாரிப்பாளர் முடிவு செய்ய வேண்டும். மீண்டும் போலீஸ் கதையாம்சம் கொண்ட படத்தை இயக்க திட்டம் வைத்துள்ளேன்” என்றார்.

லோகேஷ் யுனிவர்ஸ் போன்று ஹரி யுனிவர்ஸ் வர வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு, “அது அவருடைய ஸ்டைல். எனக்கு அதுபோன்ற எண்ணம் இல்லை” என்று பதிலளித்தார்.

வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து பிரமோஷன் தேடுவது குறித்து கேட்டதற்கு, “தேர்தல் சமயத்தில் வேட்பாளர்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று மக்களை சந்திக்கிறார்களே அதுபோலத்தான் நாங்களும் ஒரு படைப்பை உருவாக்கி அதனை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல இது போன்ற பிரமோஷனை நாடுகிறோம்” என்றார்.

Next Story

விஷால் வழக்கில் ஆய்வறிக்கை தாக்கல் 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
vishal lyca case update

நடிகர் விஷால் நடிப்பது மட்டுமின்றி 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார். இந்தக் கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இது தொடர்பாக லைகா நிறுவனம் விஷாலிடம் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் விஷால், கடன் தொகையைச் செலுத்தாமல் படம் வெளியிடும் பணிகளை மேற்கொள்வதாக லைகா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில் தங்களுக்கு செலுத்த வேண்டிய கடனைத் திரும்பச் செலுத்த விஷாலுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ.21.29 கோடியில் ரூ. 15 கோடியை உயர்நீதிமன்றத்தில் விஷால் டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்தத் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார் விஷால். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம். 

இதையடுத்து பல கட்டங்களாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த முறை நடந்த விசாரணையில், உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆஷா, ரத்னம் படத்திற்காக விஷால் வழங்க வேண்டிய நிலுவைச்  சம்பளமான ரூ.2. 60 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த, அந்தப் படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்த போது, லைகா நிறுவனம் விஷாலின் மனுவிற்கு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைக்கப்பட்டிருந்தது. 

இதனிடையே பல கட்டங்களாக நடந்த விசாரணையின் போது, இந்த வழக்கு தொடர்பாக விஷால் - லைகா இருவருக்கும் இடையிலான பண பரிவர்த்தனை குறித்து ஆய்வறிக்கை சமர்பிக்க ஆடிட்டர் ஸ்ரீகிருஷ்ணா என்பவரை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் மூன்று ஆண்டுக்கான வருமான வரி கணக்கு விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி இருவருக்குமான 
பண பரிவர்த்தனை குறித்த ஆய்வறிக்கையை ஆடிட்டர் ஸ்ரீகிருஷ்ணா இன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து ஆடிட்டரின் அறிக்கை குறித்து ஆராய வேண்டும் எனக் கோரி, விசாரணையை தள்ளிவைக்க விஷால் தரப்பு கேட்டுக் கொண்டது. பின்பு வழக்கு விசாரனை ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.