Skip to main content

பாரதவிலாஸை 25 முறை பார்த்தேன்... 'சிவாஜி'ன்னா எனக்கு உயிர்... ரசிகையின் நினைவலைகள்...

Published on 01/10/2019 | Edited on 01/10/2019

 

sivaji ganesan birthday 08




நடிகர் சிவாஜி கணேசனின் 92வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இன்று கொண்டாடினர். பிறந்தநாளையொட்டி சென்னை அடையாரில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார், பிரபு, பேரன் விக்ரம் பிரபு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள், திரையுலகினரும் சிவாஜி மணிமண்டபத்தில் அவரது திருவுருப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


 

sivaji ganesan birthday



ஆளும் கட்சி, எதிர் கட்சியைச் சேர்ந்தவர்கள், பிரபலங்கள் வந்து சென்ற பின்னர் சிவாஜி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர் அவரது ரசிகர்கள். அவர்களில் சிலரை நாம் சந்தித்தோம்.

 

sivaji ganesan birthday


''சிவாஜின்னா எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். சிவாஜி படம் ஒரு படம் கூட தவறமாட்டோம். பார்த்துவிடுவோம். மனோகரா, பராசக்தி, பாகப்பிரிவினை, வசந்தமாளிகை என சொல்லிக்கொண்டே போகலாம்'' என்றார் சுசீலா. ''பாரதவிலாஸ் படத்தை மட்டும் 25 முறை பார்த்தேன். சிவாஜின்னா எனக்கு உயிர். ஒவ்வொரு வருடமும் சிவாஜி பிறந்த நாளன்று அவரது சிலைக்கு வந்து மரியாதை செலுத்துவேன். சென்னை மந்தைவெளி என்பதால் இடையில் அடிக்கடி இந்த மணிமண்டபத்திற்கு வருவேன். காங்கிரஸ் கட்சிக்காக ஜீப்பில் ஓட்டுக் கேட்டுக்கொண்டு வந்தபோது அவரை நேரில் பார்த்திருக்கேன்'' என்றார் லலிதா. 

 

sivaji ganesan birthday



இவர்கள் நம்மிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு தனியார் பேருந்தில் இருந்து ஆண்கள், பெண்கள் என 50 பேர் இறங்கினர். அவர்களிடம் நாம் பேசும்போது, ''வேலூர் மாவட்டம், ஆற்காடு ஒன்றியத்தில் உள்ள இராமநாதபுரம் கிராமத்தில் இருந்து வருகிறோம். வேலூருக்கு அவர் அப்ப அடிக்கடி வருவார். அதனால எங்களுக்கு அவருடன் நெருக்கமாக பழக வாய்ப்பு ஏற்பட்டது. அவரது பிறந்த நாளன்று கடந்த 30 வருடமாக சென்னைக்கு வருகிறோம். முன்பு அவரது வீட்டில் அவரை சந்தித்து வாழ்த்து சொல்லுவோம். அவர் இறந்த பிறகு கடற்கரையில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வந்தோம். இப்போது மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தி வருகிறோம்.
 

sivaji ganesan birthday

                                                                                 பூபதி


நேற்றே எங்களின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் சார்பாக, பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு, பென்சில், பெண்களுக்கு புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினோம். இதற்காக நாங்கள் யாரிடமும் உதவி கேட்பதில்லை. நாங்கள் எல்லோரும் கூலி வேலை செய்து வருகிறோம். சிவாஜி பிறந்த நாளுக்காக ஒவ்வொரு வருடமும் ஒன்று கூடுவோம். செலவுகளை பிரித்துக்கொள்வோம் என்றனர் பூபதி, ஜி.பழனி, ரவி, சின்னபையன், ஆர்.பாண்டு, சுப்பிரமணி ஆகியோர். 
 

sivaji ganesan birthday



இதேபோல் விருதுநகரில் இருந்து ஏழு பேர் சிவாஜி மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தினர். அவர்களில் அந்தோணி நம்மிடம், ஒவ்வொரு வருடமும் சிவாஜி பிறந்த நாளன்று சென்னை வருவோம். சிவாஜி வீட்டுக்கு சென்று அங்கு அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அங்கிருந்து நேராக இங்கு வந்துவிடுவோம். எனது 15 வயதில் இருந்து நான் சிவாஜிக்கு ரசிகராக இருக்கிறேன். இப்போது எனக்கு வயது 68. விருதுநகருக்கு அவர் வந்திருந்தபோது பார்த்திருக்கிறோம். சிவாஜி கணேசனைப்போல் நடிகர் யாரும் கிடையாது. இனிமேல் யாரும் வரப்போவதும் கிடையாது. ஒவ்வொரு படத்திலும் முத்திரை பதித்துள்ளார். எல்லா வயதினருக்கும் பிடித்த நடிகர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் எல்லோருக்கும் பிடித்த நடிகர். விருதுநகரில் சிவாஜி பிறந்த நாளில் முதியோர்கள், வசதியற்றவர்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்குவோம். விருதுநகர் பக்கத்தில் முத்துராம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகள் 20 பேருக்கு தலா ஒரு செட் உடைகள் கொடுப்பேன் என்றார். 

 

sivaji ganesan birthday

 

எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தான் மதிக்கும் நடிகர் மறைந்தாலும் இத்தனை வருடங்களுக்கு பிறகும் அவரது திருவுருவச்சிலைக்கு மரியாதை செலுத்த சென்னைக்கு வருவதும், அவரது நினைவாக நலத்திட்ட உதவிகள் செய்வதும் வழக்கமாக வைத்துள்ள இவர்கள்தான் உண்மையான ரசிகர்கள்...

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி பலியான வழக்கு; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Shocking information that came out on A case where a girl was incident on her birthday

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி., கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி, விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமி மான்வி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறுமி மான்வி சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால், மான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் வைரமுத்து சந்திப்பு!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Vairamuthu meeting with Tamil Nadu Chief Minister M.K.Stalin

தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் இன்று (01.03.2024) கொண்டாடப்பட்டது. இதற்காகப் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள், உணவு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தி.மு.க. தலைமை சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

அதே சமயம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் என். கண்ணையா ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

அதேபோன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பல்வேறு தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Vairamuthu meeting with Tamil Nadu Chief Minister M.K.Stalin

மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி. பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே... தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன்” எனக் குறிப்பிட்டு காணொளி ஒன்றையும் இணைத்திருந்தார். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை கவிப்பேரரசு வைரமுத்து நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.