Skip to main content

டாஸ்மாக் வரி 4 ரூபாய் பெட்ரோல் மீதான வரி 20 ரூபாய் என்னக் கொடுமை சார் இது!!!

Published on 30/04/2018 | Edited on 30/04/2018

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக் பீருக்கு 4 ரூபாய் 36 பைசாவாக கலால் வரியை விதிக்கிறது. 1 லிட்டர் வீதம் இது விதிக்கப்படுவதால் புல் பீரான 650 மில்லிக்கு இன்னும் குறையும். ஆனால் 1 லிட்டர் பெட்ரோலுக்கு தமிழக அரசு விதிக்கும் மதிப்பு கூட்டு வரி (VAT)  20 ரூபாய். அதுவும் 34 சதவீதம் மதிப்பு கூட்டு வரி விதிக்கும் மாநிலம். சரக்குக்கு குறைந்த வரியும் பெட்ரோலுக்கு அதிக வரியும் விதித்திருக்கும் ஒரே தென்னிந்திய மாநிலம் தமிழ்நாடு.

petrol

 

 

இன்று நாடு முழுவதும் புகைந்து கொண்டு இருக்கும் பிரச்சினை பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான். 2017-க்கு முன்னர் எவ்வித பிரச்சினையும் இன்றி சுமூகமாக போய் கொண்டிருந்தது பெட்ரோல், டீசல் விலை. மத்திய அரசின் மானியத்தினால் பெட்ரோல், டீசல் விலை மக்களை பாதிக்காத அளவில் இருந்தது. பாரதிய ஜனதா ஆட்சி மத்தியில் அமைந்ததும் 2017 ஜூன் மாதம் 16 முதல் மாறும் எரிபொருள் விலை (Dynamic Fuel Pricing) என்ற புதிய முறை அமல்படுத்தப்பட்டது. அதாவது தினமும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்கேற்ப பெட்ரோல், டீசல் விலையில் மாறுதல் ஏற்படும். நாடு முழுவதும் உள்ள 58,000 பெட்ரோல் பங்குகளில் காலை 6 மணிக்கு அன்றைய பெட்ரோல், டீசல் விலை மாறுதலடையும். இது ஒன்றும் இந்திய அரசு கண்டுபிடித்த விலை கொள்கையல்ல. சர்வதேச அளவில் பரவலாக நடைமுறையிலிருக்கும் விலை கொள்கைதான். சர்வதேச அளவில் அமலில் இருக்கும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு போல தான் இதுவும். இப்பொழுது பிரச்சினை இந்த புதிய விலை நிர்ணய கொள்கையில் இல்லை. இந்த விலை கொள்கையால் பெரிய தொகையாக பெட்ரோல், டீசல் மானிய செலவீனம் தடுக்கப்பட்டது. இது நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லதுதான். ஆனால் பிரச்சினையே இந்த பெட்ரோல், டீசல் மேல் விதிக்கப்படும் மத்திய, மாநில வரி விதிப்பு முறைதான்.

ஒரு லிட்டர் பெட்ரோல் விலையானது எண்ணெய் நிறுவனம் நிர்ணயிக்கும் விலை, மத்திய அரசின் வரி, மாநில அரசின் வரி சேர்ந்தே நிர்ணயிக்கப்படுகின்றது.

இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலையும் கப்பல் போக்குவரத்துக்கான கட்டணமும் சேர்த்து சுத்திகரிப்பு செய்யப்பட்டு உற்பத்தி செய்யப்படும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 35.65 பைசாவாக எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. இப்போது இந்த பெட்ரோல் மீது மத்திய அரசின் கலால் வரி லிட்டருக்கு ரூ. 19.48 பைசா விதிக்கப்படுகிறது. தமிழக அரசு  மதிப்பு கூட்டு வரியாக லிட்டருக்கு 20 ரூபாய் விதிக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபாடுக்காக விதிக்கபடும் வரி லிட்டருக்கு 25 பைசாவும்  விற்பனை கமிஷன் லிட்டருக்கு ரூபாய் 3.60 ஆக மொத்தம் சேர்ந்து 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 78.98 ஆகும். இந்த விலை நிச்சயம் அதிகப்படியான விலைதான். இந்த விலையினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். அன்றாட பயணசெலவும் உணவு பெருட்கள் விலையும் அதிகரிக்க பெட்ரோல், டீசல் விலை மிக முக்கிய காரணம்.

பிரச்சினை இதுமட்டுமல்ல சர்வதேச கச்சா எண்ணெய் விலை இன்னும் ஏறும். ஏறிக்கொண்டே போகும். அப்போது இந்தியா என்ன  செய்யபோகிறது. ஒரே நாடு, ஒரே வரி, என்று முழங்கி மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவந்துவிட்டது.   ஆனால் பெட்ரோல், டீசல் மட்டும் ஜி.எஸ்.டி வரி விதிப்பில் கொண்டு வராமல் இருக்கிறது. இந்த விஷயத்தில் வரிவிதிப்பின் நேர்மை எங்கு போனது. பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வந்தால், 12 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பில் பெட்ரோல் விலை 38.10 ரூபாயாக இருக்கும்.  18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பில் பெட்ரோல் விலை இருக்கும். 40.05 ரூபாயாக இருக்கும், 28 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பில் பெட்ரோல் விலை 43.44 ரூபாயாக இருக்கும். மது விற்பனைக்கு ஜி.எஸ்.டி வரியில் சலுகை காட்டும் மத்திய அரசு மக்களின் முக்கிய தேவையும் பிரச்சினையுமான பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வருவதில் என்ன தயக்கம். டாஸ்மாக் விற்பனையில் சராசரியாக 26,200 கோடி வசூலிக்கும் தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பை குறைப்பதனால் பெரிய பாதிப்பு ஒன்றுமில்லை. இதை எல்லாம் செய்யாமல் நீங்கள் மக்களுக்காக பேசும் பேச்சு வீண் பேச்சு தான். மக்களும் அதை விரும்பவில்லை.

 

 

Next Story

“விதிமீறலில் ஈடுபட்ட டாஸ்மாக் பார்” - குரல் கொடுத்த குடிமகன்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Tasmac Bar Irregular  Citizen Speaks Out

டாஸ்மாக் பாரில் மது அருந்தியபடியே நம்மைத் தொடர்புகொண்ட ஒருவர், “அண்ணே.. போதையெல்லாம் இறங்கிப்போச்சு..” என்று பேசினார். ‘கலப்படச் சரக்கா? என்ன விஷயம்?’ என்று கேட்டோம். “அதெல்லாம் இல்ல. டாஸ்மாக்ல 21 வயசுக்கு குறைவா உள்ளவங்களுக்கு சரக்கு விற்கக் கூடாதுன்னு சட்டம் சொல்லுது. ஆனா இந்த விருதுநகர் பார்ல (கடை எண் 11881) டவுசர் போட்ட சின்னப் பையனை வேலைக்கு வச்சிருக்காங்க. சிறுவன் தான் டேபிள் டேபிளா போயி பாட்டில வச்சிக்கிட்டிருக்கான். அவன் சின்னப் பையன்ங்கிறதுனால சரக்கடிக்க வந்தவங்க ஆளாளுக்கு அவனை விரட்டி வேலை வாங்குறாங்க. கண்டபடி திட்டுறாங்க.

பாக்குறதுக்கு பரிதாபமா இருக்கு. குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்க சட்டம் இருக்கு. டாஸ்மாக் சட்டம் வேற இருக்கு. ஆனா பாருங்க சட்டமீறலா இங்கே அநியாயம் நடக்குது. மனசு பொறுக்காமத்தான் ஒருத்தர்கிட்ட நக்கீரன் நம்பரை வாங்கி உங்ககிட்ட பேசுறேன். நான் ஒரு குடிமகன்தான். ஆனாலும் எனக்கும் மனசாட்சி இருக்குல்ல. அந்தப் பையனோட எதிர்காலத்த நெனச்சா ரொம்ப வேதனையா இருக்கு. உங்க வாட்ஸ்-ஆப் நம்பருக்கு போட்டோ எடுத்து அனுப்பிருக்கேன் சார்.” என்று நா தழுதழுக்கப் பேசினார்.

Tasmac Bar Irregular  Citizen Speaks Out

மது அருந்தினாலும் ஒரு பொறுப்புள்ள இந்தியக் குடிமகனாக நடந்துகொண்ட அந்த நபர், நம்மிடம் தன் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. விருதுநகர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரவிச்சந்திரனை தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னோம். “உடனே அங்கே போய் பார்த்து விசாரிச்சு நடவடிக்கை எடுக்கிறேன்.” என்று உறுதியளித்தார். 

Next Story

பேருந்து நிலையத்தில் மது கடத்தல்; மூன்று பெண்கள் கைது

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Liquor smuggling at bus station; Three women were arrested

மதுபான பாட்டில்களை கடத்திய பெண்கள் 3 பேர் கைது செய்யப்பட்டது நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மூன்று பெண்கள் சந்தேகத்திற்கிடமாக மூன்று பைகளுடன் நின்றுகொண்டிருந்தனர். அப்போது  அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாரை பார்த்த அப்பெண்கள் அவசர அவசரமாக ஆட்டோ ஒன்றில் ஏறி தப்பிக்க முயன்றனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் மூன்று பேரையும் பிடித்து அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்ததில் அந்த பைகளில் மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக மூன்று பேரையும் கைது செய்த போலீசார் முழுமையாக சோதனை செய்ததில் 300க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களும், சாராயமும் இருந்தது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பெண்களையும் கைது செய்ததோடு, இந்த மதுபாட்டில் கடத்தல் தொடர்பாக அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகையில் மூன்று பெண்கள் பேருந்து நிலையம் வழியாக மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.