Skip to main content

அண்ணாமலையும் அதிமுக உறவும்; நடைபயணமும் குற்றச்சாட்டும் - ராமசுப்பிரமணியன் விளக்கம்

Published on 08/08/2023 | Edited on 08/08/2023

 

 Ramasubramanian Interview

 

இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் குறித்து மூத்த அரசியல் விமர்சகர் முனைவர். ராமசுப்பிரமணியன் நம்முடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்.

 

ராகுல் காந்திக்கு எதிரான குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த பிறகும் ராகுல் காந்தி மிகவும் நிதானமாகவே பேசினார். என்ன காரணத்துக்காக அவருக்கு இவ்வளவு பெரிய தண்டனை வழங்கப்பட்டது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. அதற்கான சரியான காரணங்களை சூரத் நீதிமன்றமும், குஜராத் உயர்நீதிமன்றமும் வழங்கவில்லை. குஜராத் உயர்நீதிமன்றமும் இப்படிப்பட்ட தீர்ப்பை வழங்கியது துரதிர்ஷ்டவசமானது. அதை நான் எதிர்பார்க்கவில்லை. 

 

ஆனால் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எளிய மக்களுக்கு நீதிமன்றத்தின் மேல் இருக்கும் நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறது. இனி ராகுல் காந்தி எம்.பியாக தொடரலாம். அனைவரும் வரவேற்கக் கூடிய தீர்ப்பு இது. காங்கிரஸ் கட்சிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இந்த தீர்ப்பு வலு சேர்க்கும். இந்தியா என்கிற கூட்டணியின் பெயருக்கு எதிராக இவர்கள் வழக்கு தொடுக்கிறார்கள். ஆனால் டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா என்று பல்வேறு விஷயங்களுக்கு இவர்கள் இந்தியாவின் பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பல்வேறு கம்பெனிகளின் பெயர்களிலும் இந்தியா என்பது இருக்கிறது.

 

அதிமுகவின் சீனியர் தலைவர்களை அண்ணாமலை கேலியாகப் பேசுகிறார். அண்ணாமலையால் அதிமுகவுடன் ஒரு நல்ல உறவை வைத்துக்கொள்ளவே முடியாது. அவருடைய நடைபயணமும் வெற்றிகரமாக முடிய வாய்ப்பில்லை. கூட்டப்பட்ட கூட்டம் தான் அவருக்கு வருகிறது. மக்களின் ஏற்பு அவருக்கு இல்லை. ஊடகங்களின் தாக்குதலுக்குப் பிறகு இப்போது தான் அவர் ஒரு நாளைக்கு நான்கு கிலோமீட்டர்கள் நடக்கிறார். அவர் பேசும் பேச்சுக்கள் நாராசமாக இருக்கின்றன. தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய படத்தை இவர்கள் நடைபயணத்தில் பயன்படுத்தியதாக ஒரு சர்ச் பாதிரியார் குற்றம் சுமத்தியுள்ளார். 

 

இப்போது ஹரியானாவிலும் இவர்கள் மதக்கலவரத்தை ஏற்படுத்துகின்றனர். இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளைத் தாக்குகின்றனர். தேர்தல் முடியும் வரை இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் பிரச்சனை இருக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. இது தேச ஒற்றுமைக்கு நல்லதல்ல. பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், அவர்களுடைய கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூட இந்தியா கூட்டணிக்கு தான் ஆதரவளிப்பார்கள். இது ஒரு சர்வாதிகார ஆட்சி என்கிற உணர்வு அனைவருக்கும் ஏற்படும். 

 

தமிழ்நாட்டில் தமிழுக்கு ஆதரவாக இருப்பதுபோல் நடித்துவிட்டு, இந்தி திணிப்பில் பாஜக மீண்டும் மீண்டும் இறங்குவதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழர்களுக்கு எப்போதும் தமிழ் மொழி மீது அதீத பற்று இருக்கும். இதற்காக மற்ற மொழிகளை நாம் வெறுக்கவில்லை. ஒரு மொழியை மட்டும் திணிப்பதை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும். அதுதான் இந்திய ஒருமைப்பாட்டுக்கு நல்லது.

 

 

 

 

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.