Skip to main content

எடப்பாடி அ.தி.மு.க.வை சீரழித்துவிட்டாரா?

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

"மே 23-க்குப் பிறகு என்ன நடக்கும்?' என இந்தியா முழுவதும் வாக்காளர்கள் காத்திருக்கின்றனர். அவர்களைவிட பதற்றத்துடன், என்ன நடக்கப்போகிறதோ என்ற கவலையுடன் காத்திருக்கின்றனர் அ.தி.மு.க. தொண்டர்கள்.  அதற்குக் காரணம், அ.தி.மு.க.வில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை அடைந்துள்ளதுதான்.  திருப்பூர் மாவட்ட மந்திரி உடுமலை ராதாகிருஷ்ணனிடமிருந்து மாவட்டச் செயலாளர் பதவியை சில மாதங்களுக்கு முன்பு பறித்து, அதனை பொள்ளாச்சி ஜெயராமனிடம் அளித்தார் எடப்பாடி. ஆல் பவர்புல் மந்திரியான எஸ்.பி.வேலுமணியின் சிபாரிசால் நடைபெற்ற இந்த மா.செ.க் கள் மாற்றத்திற்குப் பிறகுதான் பொள்ளாச்சி  ஜெயராமனின் மகன் பிரவீன் சம்பந்தப்பட்ட காமக்கொடூரக் கதைகள் வெளிவந்தன. அந்தக் கதைகள் வெளியே தெரிந்ததற்குக் காரணம் உடுமலைதான். 

 

eps



அதுமட்டுமல்ல... "பொள்ளாச்சி பாராளுமன்றத் தொகுதி தேர்தல் வேலைகளிலும் உடுமலை பங்கெடுக்கவில்லை' என தேர்தல் முடிந்ததும் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் மீது ஒரு பெரிய புகார் கடிதமே வாசித்தார். இதனால் கடுப்பான எடப்பாடி, உடுமலையைக் கூப்பிட்டு கண்டித்தார். இதனால் மூடு அவுட்டான உடுமலை, சூலூர் தொகுதி இடைத்தேர்தல் வேலைகளில் ஆர்வம் காட்டவில்லை. டெல்லிக்குப் போன எஸ்.பி.வேலுமணி அங்கிருந்து பறந்துவந்து சூலூர் தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கெடுத்தார். பக்கத்தில் உள்ள உடுமலையில் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் சூலூர் கூட்டத்தில் தலைகாட்டவில்லை. 

 

velumani



உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு என அமைச்சரவையில் ஒரு நட்பு வட்டாரம் உண்டு. அந்த அமைச்சர்களெல்லாம் அவருடன் மாலை முதல் நள்ளிரவு வரை அவரது அரசாங்க வீட்டில் நடக்கும் கொண்டாட்டங்களில் பங்கேற்பார்கள். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுச்சூழல் கே.சி.கருப்பணன், வேலூர் மாவட்ட மந்திரி கே.சி.வீரமணி ஆகியோர்தான் நெருக்கமான தோஸ்துகள். எடப்பாடி, உடுமலையைக் கடிந்துகொண்டதால் இந்த நட்புவட்டாரமும் எடப்பாடியின் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டது.  எல்லோரும் தங்களுக்குள் பேசிக்கொள்வதெல்லாம்  "மே 23 முடியட்டும், அதற்குப் பிறகு எடப்பாடியை ஒருகை பார்க்கலாம்' என்பது தானாம். இந்த அமைச்சர்களுக்கு நெருக்கமான வட்டாரத்தைச் சேர்ந்தவர்களே இதைச் சொல்கிறார்கள்.

இவர்கள்தான் இப்படியென்றால் உடுமலை ராதாகிருஷ்ணனை, எடப்பாடியிடம் போட்டுக் கொடுத்த எஸ்.பி.வேலுமணி, ஒரு சூப்பரான நகர்வை மேற்கொண்டிருக்கிறார். வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட ஏரியாவில் ஆசிரமம் வைத்திருப்பவர்தான் ஜக்கி வாசுதேவ். அவரிடம் ஒரு சீக்ரெட் சிட்டிங் மீட்டிங் ஒன்றை நடத்தியிருக்கிறார் எஸ்.பி.வேலுமணி. "எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகளில் அ.தி.மு.க.வினர் அதிருப்தியடைந்துள்ளார்கள். இந்தத் தேர்தலில் ஓட்டுக்காக கொடுக்கப்பட்ட பணத்தில் பாதிக்கு மேல் அ.தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு கொடுக்கவில்லை. அந்தப் பணம் அ.தி.மு.க. ஆட்சியைப் பயன்படுத்தி சம்பாதிக்கப்பட்ட ஊழல் பணம். இந்தப் பணத்தை வாக்காளர்களுக்குக் கொடுத்தாலும் யாரும் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்கமாட்டார்கள் என கட்சிக்காரர்களே தங்கள் பையில் நிரப்பிக்கொண்டார்கள். அந்தப் பணத்தை தொகுதி எம்.எல்.ஏக்கள், போட்டியிட்ட எம்.பி. வேட் பாளர்கள் என யாராலும் தட்டிக்கேட்க முடிய வில்லை. அமைச்சர்கள் பொறுப்பில் வழங்கப்பட்ட அந்தப் பணம் சரியாக விநியோகம் ஆனதா என எடப்பாடியும் கேட்க முடியவில்லை. அந்த அளவிற்கு அ.தி.மு.க.வை எடப்பாடி சீரழித்து விட்டார். இனி அவரை நம்பி அரசியல் செய்ய முடியாது, எனவே உங்கள் டெல்லி செல்வாக்கின் மூலம் என்னை தமிழக முதல்வராக்குங்கள். நான் அனைத்தையும் சரிசெய்கிறேன்' என எஸ்.பி. வேலுமணி போட்ட டீலை ஜக்கி வாசுதேவும் ஆமோதித்துள்ளார்'' என்கிறார்கள் கொங்கு மண்டல அ.தி.மு.க.வினர்.

"அதுமட்டுமல்ல... ஜூனியர் அமைச்சர்களான பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன் தொடங்கி... செல்வாக்குமிக்க சி.வி.சண்முகம், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, சீனியர் தலைவர்களான வைத்திலிங்கம், நத்தம் விசுவநாதன், போக்குவரத்து விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் உட்பட தேர்தலில் சரியாக வேலை செய்யவில்லை என்ற புகாருக்குள்ளாகாத அமைச்சர்களே இல்லை. அவர்களை ஒன்றும் செய்ய முடியாமல் எடப்பாடி தவித்து வருகிறார். 
 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.