Skip to main content

உளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி!

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

மே 23-ல் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், காங்கிரஸ் முயற்சியில் நடக்கவிருக்கும் ஆட்சி மாற்றத்தை தடுக்கவும் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார் மோடி. காங்கிரசும் பல வகைகளில் காய்களை நகர்த்தியபடி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வின் தேர்தல் பேரணி வன்முறைக்குப் பிறகு, பீகாரில் இருந்த மோடியிடம்  அமித்ஷா பேச, அவர் கூறிய ஆலோசனையின்படி பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் ராஜ்நாத்சிங், நிதின்கட்கரி, பியூஷ்கோயல், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்களோடு அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. "பாதுகாப்புப் படை யினர் மட்டும் இல்லாது போயிருந்தால் பேரணியில் நான் கொல்லப்பட்டிருப்பேன்' என அதிர்ச்சி விலகாமல் விவரித்திருக்கிறார் அமித்ஷா. இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எடுத்த முயற்சியில், மேற்கு வங்கத்தில் மட்டும் தேர்தல் பிரச்சாரத்தை ஒரு நாள் முன்னதாகவே முடித்துக்கொள்ள உத்தரவிட்டது இந்திய தேர்தல் ஆணையம். 
 

modi amithsha



பா.ஜ.க. தரப்பில் விசாரித்தபோது, தேர்தல் நடந்து முடிந்துள்ள தொகுதிகள் குறித்து மத்திய உளவுத்துறையும் அந்தந்த மாநில பா.ஜ.க.விடமிருந்தும் வந்த ரிப்போர்ட்டுகளுடன் நிலவரங்களை முழுமையாக இந்த கூட்டத்தில் ஆராய்ந்திருக்கிறார்கள். தனிப் பெரும்பான்மைக்கான இடங்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்துள்ளனர். தோழமை கட்சிகளின் வெற்றி குறித்தும் திருப்தி இல்லை. ஆனாலும், பா.ஜ.க. ஆட்சி என்பதில் அமித்ஷா உறுதிகாட்டிய நிலையில், "80 இடங்களுக்குள் காங்கிரஸ் சுருண்டுவிட்டால் மூன்றாவது அணியை உருவாக்க கடுமையாக போராடுவார் ராகுல்காந்தி. அதனை நாம் உடைக்க வேண்டும். காங்கிரசை தூக்கிப் பிடிக்கும் மாநில கட்சிகளில் தி.மு.க.தான் அதிக ஆர்வம் காட்டுகிறது. உளவுத்துறையின் ரிப்போர்ட்டின்படி, காங்கிரஸ் ஆதரவிலிருந்து மு.க.ஸ்டாலினை விலக வைத்தாலே காங்கிரஸ் முயற்சியை உடைப்பதில் 50 சதவீத வெற்றி நமக்கு கிடைத்து விடும்' என தெளிவுபடுத்தியிருக்கிறார் ராஜ்நாத்சிங். 

 

soniya



ஸ்டாலின்-சந்திரசேகரராவ் சந்திப்பின் விபரங்களை அறிந்து கொள்வதில் சோனியாவும், ராகுலும் ஆர்வமாக இருந்தனர். சோனியாவின் ஆர்வம் சந்திரபாபு நாயுடு வழியாக  ஸ்டாலினுக்குத் தெரியவர, நாயுடுவை சந்திக்க துரைமுருகனை அவர் அனுப்பி வைத்தார். இந்த சந்திப்புகள் குறித்து அறிவாலய வட்டாரங்களில் விசாரித்த போது, ஸ்டாலினிடம் சந்திரசேகரராவ், "புதிய பிரதமரை தேர்வு செய்வதில் மாநில கட்சிகளின் கைகள்தான் ஓங்கும். குறிப்பாக, தென் மாநிலங்களின் முக்கியத்துவம் அதிகமாக இருக்கும். தென் மாநிலத்தை சேர்ந்தவர்தான் பிரதமராகவோ அல்லது துணை பிரதமராகவோ வர வேண்டும்.   ஆந்திராவில் தனிப்பட்ட முறையில் நான் எடுத்த சர்வே கூட, சந்திரபாபு நாயுடுவுக்கு சாதகமாக இல்லை. ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவு  உள்ளது. தெலுங்கானாவிலுள்ள 17 இடங்களையும் எனது கட்சி கைப்பற்றிவிடும். அதேபோல தமிழகத்தில் தி.மு.க. போட்டியிடும் 20 இடங்களிலும் நீங்கள்தான் ஜெயிப்பீர்கள். ஜெகன்மோகன் ரெட்டியுடன் கர்நாடகாவின் குமாரசாமியையும் நம் பக்கம் கொண்டுவந்துவிடலாம். ஆக, இந்த 4 மாநிலங்களும் சேர்ந்தால் நாம் சொல்பவர்தான் பிரதமர். காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும் சூழல் உருவானால் அதனை நீங்கள் ஆதரிப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், மூன்றாவது அணியை காங்கிரஸ் உருவாக்கினால் அதற்கு ஆதரவு தராதீர்கள். மாறாக, நான் உருவாக்கும் மூன்றாவது அணிக்கு நீங்கள் வாருங்கள். துணை பிரதமர் பதவி தி.மு.க.வுக்கு கிடைக்கவும் வாய்ப்புண்டு' என வலை வீசினார்.
 

stalin



அதற்கு ஸ்டாலின், "காங்கிரஸ் கூட்டணியில் இருந்துகொண்டு அதற்கு மாறாக மூன்றாவது அணி என்ற முடிவை எடுப்பது சரியாக இருக்காது' என சொல்லியிருக்கிறார். அதற்கு ராவ், "பிரதமர் ரேசில் காங்கிரசுக்கு இணையாக மம்தாவும் மாயாவதியும் இருக்கிறார்கள்.  அவ்வளவு எளிதாக காங்கிரசை ஜெயிக்க விடமாட்டார்கள். அந்த சமயத்தில், தென் மாநிலங்களில் நமது வெற்றி பெரியதாக இருக்கும் போது மாயாவதி-மம்தா போன்றவர்கள் நமது ஆதரவை பெற முயற்சிப்பார்கள். அதனால், ஆப்ஷனை இரு பக்கமும் ஓப்பனாக வைத்திருங்கள்' என தெளிவுபடுத்தியிருக்கிறார். 

நாயுடு மூலம் ஸ்டாலின்-சந்திரசேகரராவ் சந்திப்பு விவரங்களைத் தெரிந்துகொண்ட சோனியாவுக்கு திருப்தி என்கிறது டெல்லி வட் டாரம். அதேநேரத்தில், மே 23-ந்தேதி டெல்லியில் நடக்கும் கூட்டத்துக்கு சந்திரசேகரராவையும்  அழைத்து சோனியா எழுதிய கடிதம், சந்திரபாபு நாயுடுவுக்கு அதிருப்தியை தந்துள்ளதாம். "ராவ் அழைக்கப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை' என சோனியாவிடம் பஞ்சாயத்தை கூட்டியிருக்கிறார்.  அதற்கு சோனியாகாந்தி, காங் கிரஸ் கூட்டணி கட்சிகளையும் ஆதரவு கட்சிகளையும் உடைக்க சந்திரசேகரராவை பா.ஜ.க. பயன்படுத்துவது போல நாமும் மாற்றுத் திட் டத்தில் இறங்க வேண்டுமென்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினர். குறிப்பாக,  நம் கூட்டணியிலுள்ள தி.மு.க.வை உடைக்க மோடி திட்டமிடுகிறார். அதேபோல பா.ஜ.க. ஆதரவாளர்களாக இருக்கும் ஒடிசா முதல்வர் நவின் பட்நாயக்கையும் ஆந்திர ஜெகன்மோகன் ரெட்டியை யும் நம் பக்கம் இழுத்து பா.ஜ.க. திட்டத்தை உடைக்கலாமென காங்கிரஸ் தலைவர்கள் யோசனை தெரிவித்தனர். இதற்கான ப்ளான் ப்ரியங்காவை வைத்து உருவாக்கப்பட்டது. 

இதற்கிடையே காங்கிரஸ் கூட்டணியிலுள்ள கட்சிகளுடன் ஒரு ஆலோசனை கூட்டத்தை 21-ந்தேதியும், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மற்றும் பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளுடன் ஒரு கூட்டத்தை 23-ந் தேதியும் கூட்டுவதற்கு காங்கிரஸ் தலைமை ஆலோ சித்திருக்கிறது. இதற்கான கடிதங்களை சம்பந்தப் பட்ட கட்சிகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் சோனியாகாந்தி. மேலும், தேர்தல் முடிவுகள் வரு வதற்கு முன்பாக, நாயுடு தலைமையில் ஒருங் கிணைக்கப்பட்ட 21 கட்சிகளுடன் ஜனாதிபதியை சந்தித்து, பெரும்பான்மைக்கு குறைவாக அதிக இடங்களில் ஜெயித்த கட்சி என்கிற முறையில் எந்த கட்சியையும் ஆட்சி அமைக்க அழைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தவும், அதனையும் மீறி அழைத்தால் பெரும்பான்மைக்கான ஆதரவு கடிதங்களை பெற்றுத்தர சம்பந்தப்பட்ட கட்சிக்கு அதிக நாட்கள் அவகாசம் தரப்படக் கூடாது என வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளது காங்கிரஸ். எதிர்க்கட்சிகளின்  தொடர்ச்சியான-வேகமான நகர்வுகள் மோடி-அமித்ஷா டீமை அப்செட்டாக்கியுள்ளது. 
 

Next Story

“பிரதமருக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லையே?” - சித்தராமையா தாக்கு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Siddaramaiah says The Prime Minister doesn't even have this basic knowledge?

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “ முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

காங்கிரஸ், வாக்கு வங்கி அரசியலுக்காக பட்டியலின,பழங்குடியின,பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறித்து, பிறருக்கு வழங்கும் ஆட்டத்தை ஆடியது. பின்னர், கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்ற பா.ஜ.க, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீட்டிலிருந்து காங்கிரஸ் அரசு உருவாக்கிய இஸ்லாமிய இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

Siddaramaiah says The Prime Minister doesn't even have this basic knowledge?

பிரதமர் மோடி இந்த சர்ச்சை பேச்சுக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, “கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு மாற்றியதாக பிரதமர் கூறியது அப்பட்டமான பொய். இது அறியாமையிலிருந்து உருவானது. தோல்வி பயத்தில் இருந்து பிறந்த அவரது விரக்தியின் அறிகுறியாகும். நமது நாட்டின் வரலாற்றில் எந்த தலைவரும் பிரதமரின் அலுவலகத்தை இவ்வளவு கீழ் நிலைக்கு இழிவுபடுத்தியதில்லை.

பொறுப்பான பதவியில் இருப்பதால், பிரதமர் நரேந்திர மோடி இந்த பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அல்லது, தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலின மற்றும் பழங்குடியின இட ஒதுக்கீடுகளை இஸ்லாமியர்களுக்கு வழங்கப் போவதாக காங்கிரஸ் எங்கே கூறியுள்ளது? காங்கிரஸின் கீழ் எந்த மாநில அரசு இது போன்ற ஒரு கொள்கையை அமல்படுத்தியுள்ளது?

சமூக மற்றும் பொருளாதார ஆய்வறிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடுகளில் திருத்தங்கள் செய்ய முடியும். மேலும், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை மாற்றியமைக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. இத்தகைய திருத்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் தேவை. ஒரு பிரதமருக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லாதது நம் நாட்டிற்கு உண்மையிலேயே சோகமானது” எனக் கூறினார். 

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.