Skip to main content

மூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது..! பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..!

Published on 30/11/2020 | Edited on 03/12/2020

 

ddd

 

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி, கடந்த ஐந்து நாட்களாக, பஞ்சாப் விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், டெல்லியில் நுழைவதைத் தடுக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டு வீசி, தடியடி நடத்தினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு, எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  

 

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார்.

 

அப்போது அவர், விவசாயிகள் எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைத்துக்கொள்ளலாம். விலை உயர்ந்த பிறகு விற்கலாம், அப்படியான ஒரு நல்ல காரியத்தை நாங்கள் செய்திருக்கிறோம் என்று மோடி சொல்லி வருகிறார். 

 

உண்மையில் விவசாயி இருப்பு வைக்க முடியாது. பெரிய வியாபாரிகள்தான் இருப்பு வைத்துச் சம்பாதிப்பார்கள். இதனை, பா.ஜ.க தலைவர்கள் உள்பட மோடி வரை அனைவரும் மறுத்தார்கள். பெரம்பலூரில் உள்ள குடோனில் வெங்காயத்தை டன் கணக்கில் பதுக்கி வைத்ததைப் பறிமுதல் செய்ததோடு நான்கு பேரை கைது செய்துள்ளனர். இதற்கு பா.ஜ.க என்ன சொல்கிறது?

 

செப்டம்பரில் சட்டத்தை நிறைவேற்றினார்கள். மூன்று மாதங்கள்கூட ஆகவில்லை, அதற்குள் வெங்காயத்தை யார் இருப்பு வைத்தார்கள் என்று தெரிய வந்திருக்கிறதே?. 

 

ஒரு விவசாயி தன்னுடைய பொருளை எங்கே வேண்டுமானாலும் கொண்டு சென்று யாரிடம் வேண்டுமானாலும் விற்கலாம் என்கிறார்கள். எந்த ஒரு விவசாயியும் தனிப்பட்ட முறையில் அதுபோல் செய்வது நடைமுறையில் சாத்தியமே கிடையாது. 

 

விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல், கரும்பு எதுவாக இருக்கட்டும், உடனே அதனை விற்க வேண்டும், அந்த காசை வாங்கி கடனை அடைக்க வேண்டும், குடும்பச் செலவு செய்ய வேண்டும், மறுபடியும் சாகுபடி செய்ய வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். இதுதான் யதார்த்தமான நிலைமை. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குப் பொருளை வாகனங்கள் மூலம் கொண்டு சென்று விற்பது என்பது சாத்தியமே கிடையாது. அதேபோல் இருப்பு வைப்பதும் சாத்தியமில்லை. 

 

விலை குறையாமல் இருப்பதற்கு வியாபாரிகளும், விவசாயிகளும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஒப்பந்தம் செய்யும்போது குறிப்பிடப்பட்டுள்ள தொகையைக் கொடுக்கவில்லை என்றால், புகார் செய்து அதனை வசூல் செய்யலாம் என்று சட்டம் சொல்கிறது. 

 

cnc

 

நடைமுறையில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம், கரும்பு விவசாயி கரும்பை உற்பத்தி செய்து ஆலைகளுக்குத்தான் கொடுக்க வேண்டும். ஆலைதான் கரும்பின் விலையைத் தீர்மானிக்கிறது. அரசாங்கம் அதனுடன் கூடுதலாகக் கொடுப்பதை தீர்மானிக்கிறது. ஆனால், அந்தத் தொகைகளை விவசாயிகள் பெற முடியவில்லையே. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆலைகளிலும் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய பாக்கித் தொகை கோடிக்கணக்கான ரூபாய் உள்ளது. அப்படியென்றால் அவர்கள் சொல்லும் மூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது. 

 

கடந்த நாடாளுமன்றத் தேர்தல், அதற்கு முந்தைய நாடாளுமன்றத் தேர்தல், மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க வெற்றிபெறுவதற்கு கார்ப்பரேட் முதலாளிகள்தான் பெரிய உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த கார்ப்பரேட் முதலாளிகள் பலமடைய வேண்டும் என்பதற்காக, நன்றி விசுவாசத்தோடு, அரசாங்கத்தின் சட்ட ரீதியான உதவிகளைக் கொண்டுவருவதற்கு, பா.ஜ.க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்தார் அழுத்தமாக. 

 

 

Next Story

டெல்லி மேயர் தேர்தல் ரத்து; பா.ஜ.க.வுக்கு எதிராக ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Aam Aadmi struggle for Canceled Delhi Mayoral Election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், டெல்லி மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (26-04-24) நடைபெற இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். டெல்லியில் உள்ள மேயரைத் தேர்ந்தெடுக்க 10 எம்.பி.க்கள், 14 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 250 கவுன்சிலர்கள் 274 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இதில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதிகபட்சமாக 138 வாக்குகள் தேவை. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட 151க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற இருந்தது. இதனால், டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலை ஆளுநர் அலுவலகம் ரத்து செய்யப்படவுள்ளதாக டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கையில், ‘தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால் டெல்லி மேயர் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து மேயர் சபையில் போராட்டம் நடத்தி வருகின்றது.

இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறுகையில், “ பட்டியலின சமூகத்தைத் தடுக்க இவர்கள் சதி செய்கிறார்கள். இந்த முறை, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்தான் டெல்லி எம்சிடியின் மேயராக வர இருந்தது. ஆனால் தேர்தலை ரத்து செய்ததன் மூலம், அவர் தனது பட்டியலின விரோத மனநிலை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்ததற்கு மற்றொரு சான்றைக் கொடுத்துள்ளனர்” எனப் பேசினார். தற்போது மேயர் ஷெல்லி ஓபராயின் பதவிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story

“இதை செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ் அப் எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 WhatsApp warning May have to leave India

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். 

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார். 

இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை.  இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து  என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர்.