Skip to main content

இன்னுமா டெண்டர் விடவில்லை? எடப்பாடி பழனிசாமி மகனுக்கு செக் வைக்கும் திமுக... கரோனா நேரத்தில் மிரள வைக்கும் ஊழல்!

Published on 12/06/2020 | Edited on 12/06/2020

 

admk


தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை சாலைகளை பராமரிப்பதற்கு 50 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்கள் நெடுஞ்சாலைத்துறையில் தயாரானது. இதுபற்றி எடப்பாடியின் உதவியாளர் மணி என்பவரின் பெயரைக் குறிப்பிட்டு ஒரு புகார் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மூலம் உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது.
 


தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினரும், வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ இதுகுறித்து விளக்கினார். "பொதுவாக 50 கோடி ரூபாய் மதிப்புள்ள 100 கோடி ரூபாய் டர்ன்ஓவர் உள்ள காண்ட் ராக்டர்கள் எடுப்பார்கள். இதனை முதல்வர் அலுவலகத்தில் உள்ள அவரது உதவியாளர் மணி, 500 கோடி ரூபாய் டர்ன் ஓவர் உள்ள காண்ட்ராக்டர்கள்தான் இந்த டெண்டரை எடுக்க முடியும் என மாற்றுகிறார். மொத்தம் 1,400 கோடி ரூபாய்க்கு விடப்பட்ட இந்த டெண்டரை இரண்டு காண்ட்ராக்டர்கள் மட்டுமே எடுக்கும் வகையில் டெண்டர் கண்டிஷன்களை மணி மாற்றுகிறார்.

இதை எதிர்த்து தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கோர்ட்டுக்குச் செல்கிறார். பொதுவாக இதுபோன்ற டெண்டர் விஷயங்களில் கோர்ட் தலையிடாது. ஆனால் 50 கோடி ரூபாய் வரக்கூடிய தனித் தனிப் பணிகளை இணைத்து அதை 500 கோடி ரூபாய் மதிப்புள்ள காண்ட்ராக்டர்கள் எடுப்பதற்கு ஏற்ற வகையில் டெண்டர் விவரங்களை வெளியிட்டது அப்பட்டமாக தெரிந்தது. அதில் முதல்வர் அலுவலகத்தின் தலையீடு உள்ளது என்பதைப் பற்றி தெளிவான வாதங்களை நாங்கள் முன்வைத்தோம். இந்த டெண்டருக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து அரசிடம் விளக்கத்தை கேட்டுள்ளது. இது கரோனா காலம் 1,400 கோடி ரூபாயில் அவசரம் அவசரமாகச் செலவு செய்து சாலை போடுவதற்கான அவசியம் என்ன? அந்த 1,400 கோடி ரூபாயை எத்தனையோ வெண்டிலேட்டர்கள் வாங்கலாம். கரோனா தடுப்பு உடைகள் வாங்கலாம்'' என்கிறார் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ.
 

dmk


முதல்வரின் துறையான நெடுஞ்சாலைத்துறை அவசரப்படுவதற்குக் காரணம், அவரது மகன் மிதுனை களத்தில் இறக்கத்தான். அவருக்காகத்தான் தஞ்சாவூர் டெண்டர் ரெடியானது. அதில் கோர்ட் மூலம் அடிவாங்கிய எடப்பாடியின் மகன், அடுத்தபடியாக கோவையில் கால்பதித்தார். கோவை அவினாசி ரோட்டில் உள்ள கோல்டுவின் என்கிற இடத்தில் இருந்து உப்பிலிபாளையம் வரை 14 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலம் அமைக்க ஒரு டெண்டர் கோரப்படவிருக்கிறது. 13.07.2020 அன்று வெளியிடப்படும் இந்த டெண்டரின் மதிப்பு 1,069 கோடி ரூபாய். மொத்தம் 10 கி.மீ. மேம்பாலமாக அமையப்போகும் இந்த சாலையில் ஒரு கி.மீ. கட்டுவதற்கு 106 கோடி ரூபாய் செல வாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 


இந்த டெண்டரை ஐதராபாத்தைச் சார்ந்த கே.என்.ஆர். கன்ஸ்ட்ரக்சன் லிமிடெட் என்கிற கம்பெனிக்கு வழங்க வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் மற்ற ஒப்பந்ததாரர்கள் கலந்துகொள்ள வேண்டாம், இது முதல்வரின் மகன் மிதுன் மூலமாக ஐதராபாத் நகரில் பேசி முடிக்கப்பட்டது என இந்த டெண்டரை நிர்வாகம் செய்யும் மேற்பார்வை பொறியாளர் சாருமதி என்பவர் ஒப்பந்ததாரர்களுக்கு தெரிவித்துவிட்டதாக நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி கோயம்புத்தூர் நகரத்தில் உள்ளவர்களிடம் கேட்டபோது, இந்தப் பாலத்திற்கு இன்னுமா டெண்டர் விடவில்லை என ஆச்சரியத்துடன் கேட்துடன், உப்பிலிபாளையம் பாலம் அவினாசி ரோடு, திருச்சி ரோடு ஆகியவற்றில் ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி ஆச்சரியப்படுத்தினார்கள்.

இந்த கே.என்.ஆர். கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்தைப் பற்றி ஐதராபாத்தை தலைநகராகக் கொண்ட தெலங்கானா மாநிலத்தில் விசாரித்தபோது, இந்த நிறுவனத்திற்கு எதிராக சி.பி.ஐ. ஊழல் வழக்குப் பதிவு செய்திருப்பதாக அங்கிருக்கும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தார்கள். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மேம்பாலங்கள் கட்டிய ஒப்பந்தக்காரர்களைக் கேட்டபோது, இன்றைக்கு இருக்கும் கரோனா சூழ்நிலையால் கட்டுமானப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது உண்மை. ஆனாலும், ஒரு கி.மீ. மேம்பாலம் கட்டுவதற்கு 106 கோடி ரூபாய் என்பது மிக மிக அதிகம். அதிகபட்சம் ஒரு கி.மீ. மேம்பாலம் கட்ட 50 கோடி என்ற அடிப்படையில் 10.கி.மீ.க்கு 500 கோடி ரூபாய் போதும். 500 கோடி ருபாய் வேலைக்கு 1069 கோடி ரூபாய் என மதிப்பிடுவது நிச்சயமாக பெருங்கொள்ளைதான் என்கிறார்கள்.
 

http://onelink.to/nknapp


இந்த 500 கோடி ரூபாய், டெண்டர் விடப்படும் ஜூலை 13ஆம் தேதியே கைமாறிவிடும். அதிலும் இதுபோன்ற ஊழல் மலிந்த திட்டங்களை கையாள்வதில், கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக் சன்ஸ் என்கிற ஐதராபாத் நிறுவனம் திறமையானது. அதைக் கண்டறிந்துதான் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது என்கிறார்கள் விவரமறிந்தோர். டெண்டர் ஒப்பந்தம் தொடங்கி தேர்தல் களம் வரை மிதுனை நம்புகிறாராம் முதல்வர்.

இதுபற்றி கருத்தறிய கே.என்.ஆர். கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்திடமும், முதல்வர் மகன் மிதுனிடமும் தொடர்பு கொண்டோம். அவர்கள் பதில் அளிக்கவில்லை. இதுபோல மொத்தம் பத்தாயிரம் கோடி ருபாய்க்கு நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் நடந்ததாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தளவுகூட இல்லாமல் அரசியல் களத்தில் வாரிசுகள் அனுபவம் பெற முடியுமா?

படம் : ஸ்டாலின்

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.