Skip to main content

தேர்தலுக்கு பிரசாந்த் கிஷோரின் பிளான் இதுதானா?

Published on 22/12/2020 | Edited on 22/12/2020

 

mamata

 

இன்னும் ஒருசில மாதங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான பிரச்சாரங்களை அந்தந்த மாநிலங்களில் போட்டியிடும் கட்சிகள் தீவிரமாக தொடங்கிவிட்டன. இந்நேரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தேர்தல் வியூக வல்லுநராக செயல்படும் பிரசாந்த் கிஷோர், நேற்று ட்விட்டரில் ஒரு பதிவிட்டு பரபரப்பைக் கிளப்பினார். 2021ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜக 99 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றிவிட்டால் தனது தொழிலை விட்டுவிடுவதாகத் தெரிவித்திருந்தார். இதன்பின் பாஜக தரப்பில் மூத்த தலைவர்களும் பிரசாந்த் கிஷோரின் இப்பேச்சுக்கு எதிர்க்கருத்து தெரிவித்தனர். ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி இது பெரும் விவாதத்தையும், திரிணாமூல் காங்கிரஸ் மீண்டும் பெரியளவில் வெற்றிபெறுமா என்கிற கேள்விக்கான பதிலையும் தேடவைத்துள்ளது. 

 

இந்தமுறை மேற்குவங்கத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெறும் என்கிற அளவிற்கு யோசிக்கவைக்க முதல் காரணமாக இருப்பது, கடந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக பிடித்த இரண்டாம் இடம்தான். அதுவரை மேற்கு வங்கத்தில் தேர்தல் களம் என்றாலே திரிணாமூல் காங்கிரஸ், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இக்கட்சிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியாகப் பார்க்கப்பட்ட வேளையில் திடீரென அனைவருக்கும் சர்ப்ரைஸ் எண்ட்ரீ கொடுத்தது பாஜக. இதற்கு முந்தைய 2014 தேர்தலில் இரண்டு இடங்களை மட்டுமே பிடித்திருந்த பாஜக அடுத்த தேர்தலில் இரண்டாம் இடத்தை பிடித்தது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. குறிப்பாக மேலே குறிப்பிடப்பட்ட மூன்று கட்சிகளில் இரண்டு கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சி. ஆமாம், 2014ஆம் ஆண்டு தேர்தலில் 17 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த ஒரு கட்சி, அடுத்த ஐந்து வருடங்களில் 40 சதவீத வாக்குகளுடன் 18 தொகுதிகளில் வென்று, ஏற்கனவே அங்கு கோலோட்சிகொண்டிருந்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு வளர்ந்திருப்பது மட்டுமல்லாமல், அவர்களுடைய வாக்குகளைப் பிரித்தது போன்ற பல காரணிகள் அக்கட்சிகளுக்கு அதிர்ச்சியாக இருந்தன. 

 

இவைதான் தற்போதைய மேற்கு வங்க ரேஸில் பாஜகவுக்கு பெரும் ஊக்கத்தைக்கொடுத்து ஓட வைத்துக்கொண்டிருக்கிறது. பாஜகவின் இந்த அசுர வளர்ச்சிக்குப் பின்னால் ஒரு நீண்ட கால கதை அடங்கியிருக்கிறது. அதில் ஆர்.எஸ்.எஸ் பெரும் பங்காற்றியிருக்கிறது. கடந்த பத்து வருடங்களில் ஆர்.எஸ்.எஸ். பள்ளிக்கூடங்கள் மேற்கு வங்கத்தில் பல திறக்கப்பட்டு, அவர்களுடைய கொள்கைகளை மாணவர்களுக்குள்ளும் அவர்களுடைய குடும்பத்திற்குள்ளும் சைலண்டாக விதைத்து வந்தது. அந்த மாநில கிராமங்களில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகளின் புழக்கம், மக்களுடன் மக்களாக கலந்து அவர்கள் மேற்கொண்ட கட்சி வளர்ப்பு என அனைத்தும் இன்றைய பாஜக வளர்ச்சியின் அடித்தளம். இதுபோன்ற மைக்ரோ மேனேஜிங் யுக்தியைக் கையாண்டுதான் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இந்தியா முழுவதும் வளர்கிறது. அதே டெக்னிக்கைதான் மேற்கு வங்கத்திலும் கையாண்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், மேற்குவங்கத்தில் 27 சதவீத இசுலாமியர்களின் வாக்கு என்பது திரிணாமூல் காங்கிரஸுக்கானது என்பதைத் தெரிந்துகொண்ட பாஜக, இந்து வாக்குகளை நாம் கைப்பற்றிடவேண்டும் என்ற நோக்கத்தோடு பிரச்சாரத்தைத் தீவிரமாக்கியது. அரசியல் கட்சிகள் என்றாலே உள்கட்சி பூசல் நிச்சயம், அப்படி பூசலில் சிக்கி புகைச்சலில் இருந்த பல திரிணாமூல் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பாஜகவுக்கு ஓட்டம் எடுத்தனர். சிலர் திரிணாமூல் கட்சிக்குள் இருந்துகொண்டே பாஜகவுக்கு விசுவாசத்தைக் காட்டினர். இதுபோன்ற சின்னப்பிள்ளைத்தனமான காரணமெல்லாம் தேர்தல் முடிவுகளின் போது சொல்லப்பட்டது. இதுபோன்ற பல அரசியல் காரணங்களும், பத்து வருட பாஜகவின் உழைப்பும், காங்-கம்யூ மீதான மக்களுக்கிருந்த கோபமும்தான் பாஜக இரண்டாம் இடத்தை பிடிக்கக் காரணமாக இருந்தது. 

 

ஆனால், இன்னும் ஒருசில மாதங்களில் பலரும் எதிர்பார்க்கும் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற இவைபோதுமா? ஒரு பக்கம் சிறுகசிறுக பாஜக வளர்ந்துகொண்டிருக்கிறது என்றாலும், 2019 மக்களவை தேர்தலுக்குப் பின் பாஜகவின் வாக்கு வங்கி சதவீதம் பல இடங்களில் சரிந்தும் வருகிறது. 2019-பின் தேர்தல்களில் பாஜக வெற்றிபெற்றிருக்கலாம் ஆனால், முன்பைவிட வாக்கு சதவீதங்கள் குறைந்துகொண்டுதான் செல்கிறது. 2018 ஆம் ஆண்டு நடந்த பல்வேறு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்கள், 2019 மக்களவை தேர்தல் ஆகியவற்றிற்கு இடையே பாஜகவின் பொது வாக்கு வங்கி வளர்ச்சி 17 சதவீதமாக இருந்தது. ஆனால், மக்களவை தேர்தல் முடிந்த அடுத்த ஒரு வருடத்தில் பாஜகவுக்குக் கிடைத்த பொது வாக்கு வங்கி 13 சதவீதமாகக் குறைந்தது. மேற்கு வங்கத்தில் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றிபெற வேண்டுமானால் மக்களவை தேர்தலைவிட அதிகம் உழைக்க வேண்டும்.

 

அதாவது அந்த தேர்தலில் பெற்ற வாக்கு வங்கி சதவீதத்துடன் 2 சதவீத பொது வாக்குகளைத் தன்வசப்படுத்தினால்தான் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றிபெற முடியும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், பாஜகவின் பொது வாக்கு வங்கி கடந்த ஒரு வருடத்தில் கனிசமாக குறைந்து வருவதைப் பார்க்கும்போது பொது வாக்குகளைத் தன்வசப்படுத்தாமல் விட்டுவிட்டால் அது திரிணாமூல் காங்கிரஸுக்கு மற்றுமொரு இமாலய வெற்றியைத் தரும். ஏனென்றால் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாக்கு வங்கி 27 சதவீதமும் பாஜகவுக்குத்தான் சென்றது. ஆனால், மம்தாவுக்கான 44 சதவீத வாக்குகள் அப்படியேதான் இருக்கிறது. ஏற்கனவே வைத்திருக்கும் வாக்கு வங்கியுடன் பொது வாக்குகளும் அதிகம் கிடைக்கப்பெற்றால் மேற்கு வங்கம் மீண்டும் மம்தாவின் கட்டுப்பாட்டில்தான். 

 

இது நடந்துவிடக் கூடாது என்றுதான் பாஜகவின் மூத்த தலைவர்களான ஜே.பி. நட்டா, அமித்ஷா உள்ளிட்டவர்கள் மேற்கு வங்கத்தில் அடிக்கடி கூட்டம் நடத்துகின்றனர். இன்னும் தேர்தல் நெருங்க நெருங்க பெங்காலியில் பேசிக்கொண்டே பிரதமரும் பிரச்சாரத்தில் இறங்கிவிடுவார். பொதுவாக பெங்காலிகள் தங்களின் மொழி, கலாச்சாரம் போன்றவற்றை மத அரசியலுக்காக விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பவர்கள் அல்ல, அவர்களின் தனிச்சிறப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். மாநில சுயாட்சி குறித்த புரிதல் இருப்பவர்களாகவே பெரும்பாலும் இருக்கின்றனர் வங்கத்து மக்கள். இதைதான் தனது பிரச்சார யுக்தியாகவும் மம்தா கையாள்கிறார். மேற்கு வங்கத்தில் தற்போதைய நிலை என்னவென்று பார்த்தால் இரண்டு கட்சி தொண்டர்களும் போரில் ஈடுபடுவதுபோல அடிதடி கைகலப்பில் நித்தம் ஈடுபடுகிறார்கள். இரண்டு வருடங்களில் இந்த இரண்டு கட்சிகளிலுமிருந்து 40க்கும் மேற்பட்ட அரசியல் பிரமுகர்கள் கொலைகளும் செய்யப்பட்டுள்ளனர். இந்தமாதிரி சென்றுகொண்டிருக்கும் தேர்தல் போக்கில் கடைசி நேரத்தில்கூட கணிப்புகள் மாறலாம், ஆனாலும், தனது தொழிலையே பந்தயம் கட்டுமளவுக்கு பிரசாந்த் கிஷோர், மம்தாவின் வெற்றியில் உறுதியாக இருக்கிறாரென்றால், அதற்கு, சரியும் பாஜகவின் பொது வாக்குவங்கி சதவீதமும்,மம்தாவின் ஆளுமையுமே பின்னணியாக இருக்கிறது. இவை இரண்டையும் மனதில்வைத்தே தேர்தலுக்கான திட்டங்களை தீட்டி வருகிறார் பிரசாந்த் கிஷோர். 
 

 

 

 

 

Next Story

‘அக்பர் - சீதா’ சர்ச்சை; சிங்கங்களுக்கு சூட்டப்பட்ட புதிய பெயர்கள்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
New names given to lions on 'Akbar - Sita' Controversy

மேற்கு வங்க மாநிலத்தில் சிலிகுரி உயிரியல் பூங்கா ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பூங்காவிற்கு, கடந்த 12 ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவிலிருந்து இரண்டு சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு ‘அக்பர்’ என்றும் 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு ‘சீதா’ என்றும் முன்னரே பெயரிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த இரண்டு சிங்கங்களையும் ஒரே கூண்டில் அடைக்க உயிரியல் பூங்கா நிர்வாகம் முடிவு செய்ததாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து, ‘சீதா’ மற்றும் ‘அக்பர்’ சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநில விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘முகலாய மன்னரின் பெயரான அக்பர் என்ற பெயரையும் ராமாயணத்தில் வரும் சீதாவின் பெயரையும் சிங்கங்களுக்கு வைத்து ஒரே இடத்தில் வைக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்து மத வழக்கங்களில் சீதா தெய்வமாக கொண்டாடப்படுகிறார். எனவே, அக்பர் உடன் சீதாவைத் தங்க வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல். இதனால் அந்தச் சிங்கங்களின் பெயர் மாற்றப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா அமர்வில் கடந்த 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “சிங்கத்துக்கு அக்பர் என்று பெயர் வைப்பதை சீதா மட்டுமல்ல நானும் ஆதரிக்கவில்லை. இந்து, கிறிஸ்துவர், இஸ்லாமியர், மத போராளிகள், மரியாதைக்குரியவர்கள். எனவே இது போன்ற பெயர்களை இனி விலங்குகளுக்கு வைக்க வேண்டாம். எனவே, சர்ச்சைகளைத் தவிர்க்க இரண்டு சிங்கங்களுக்கும் வேறு பெயர்களை வைக்க வேண்டும்” என்று கூறி மாநில அரசிற்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, திரிபுரா உயிரியல் பூங்காவில் இருந்த சிங்கங்களுக்கு அக்பர், சீதா பெயர் வைக்கப்பட்டதற்காக, அம்மாநிலத்தின் தலைமை வனப் பாதுகாவலர் பிரபின் லால் அகர்வாலை திரிபுரா அரசு இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டது.

இந்த நிலையில், அக்பர் - சீதா பெயரால் சர்ச்சையில் சிங்களுக்கு புதிய பெயரை வைக்க மேற்கு வங்க அரசு பரிந்துரை செய்துள்ளது. அதில், அக்பர் என்ற ஆண் சிங்கத்திற்கு ‘சூரஜ்’ என்ற பெயரும், சீதா என்ற பெண் சிங்கத்திற்கு ‘தயா’ என்றும் புதிய பெயர்களை மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் மேற்கு வங்க அரசு பரிந்துரைத்துள்ளது.

Next Story

ராம நவமி ஊர்வலத்தில் கலவரம்; பா.ஜ.க கடும் குற்றச்சாட்டு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJP strongly accused on mamata banerjee on Riots at Ram Navami Procession

நாடு முழுவதும் நேற்று (17-04-24) ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

அந்த வகையில், மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத்தின் சக்திபூர் பகுதியில் ராம் நவமி உத்சவ் உஜ்ஜபன் கமிட்டி சார்பாக நேற்று ஊர்வலம் நடத்தினர். அப்போது, அந்த ஊர்வலத்தின் மீது சிலர் வீட்டின் மாடிகளில் இருந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் போது, 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கல்வீச்சு தாக்குதல் நடந்த அந்த பகுதிக்கு விரைந்த போலீசார், அங்கிருந்த கும்பல்களை கலைக்க தடியடி நடத்தியும், புகை குண்டுகளை வீசியும் நிலைமையை தன் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து, கலவரம் நடந்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராம் நவமி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியே காரணம் என்று அங்குள்ள பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து மேற்கு வங்க பா.ஜ.க மாநிலத் தலைவர் சுவேந்த அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ கடந்த ஆண்டு ஸ்ரீராம நவமி ஊர்வலங்கள் தல்கோலா, ரிஷ்ரா மற்றும் செரம்பூர் ஆகிய இடங்களில் தாக்குதலுக்கு உள்ளானது போல், ​​இந்த ஆண்டும் மம்தா காவல்துறை ராம பக்தர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது.

நிர்வாகத்திடம் இருந்து உரிய அனுமதி பெற்ற அமைதியான ராம நவமி ஊர்வலம், சில குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், மம்தாவின் காவல்துறை  குற்றவாளிகளுடன் சேர்ந்து, ஊர்வலம் திடீரென முடிவடைவதை உறுதி செய்வதற்காக ராம பக்தர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளது. இது மட்டுமின்றி, மாணிக்யஹார் மோரில் உள்ள சனாதானி சமூகத்தைச் சேர்ந்த கடைகளை  கொள்ளையடிப்பதையும் மம்தாவின் காவல்துறை தடுக்க முடியவில்லை. 

ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதற்கு மம்தா பானர்ஜியே காரணம். அவரின் ஆத்திரமூட்டும் பேச்சின் காரணமாகவே மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ராம நவமி ஊர்வலங்கள் சீர்குலைக்கப்பட்டன். எனவே, மேற்கு வங்கத்தில் மத விழாக்களை அமைதியான மற்றும் குற்றச் சம்பவங்கள் இல்லாமல் கொண்டாட, மாநில அரசு மாற்றப்பட வேண்டும். மேலும், ராம பக்தர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.