Skip to main content

ராகுல் பிரதமராவதை கட்சிகள் எதிர்க்கின்றனவா?

Published on 21/12/2018 | Edited on 21/12/2018
stalin

 

ராகுலை பிரதமராக முன்மொழிவதாக ஸ்டாலின் பேசியதற்கு எதிர்ப்பு வலுக்கிறது என்று ஒரு பத்திரிகை செய்தி போடுகிறது. யாரெல்லாம் எதிர்த்தார்கள் என்றால் காங்கிரஸ் கூட்டணியிலேயே இல்லாத அகிலேஷ் எதிர்ப்புத் தெரிவித்தாராம். தொடக்கத்திலிருந்தே பிரதமர் வேட்பாளரை தேர்தல் முடிவுக்கு பிறகே முடிவு செய்யலாம் என்று கூறிவரும் மம்தா எதிர்ப்பு தெரிவித்தாராம்.

 

ஹய்யோ, ஹய்யோ என்று வடிவேலு மாதிரி தலையில்தான் அடித்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் திமுக நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியபோது, கலைஞர் பாணியில் திமுக சார்பில் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதாக ஸ்டாலின் பிரகடனம் செய்தார்.

 

அவருடைய அறிவிப்பை கூட்டணியில் உள்ள எல்லாக் கட்சிகளும் ஏற்கவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியே தனது பிரதமர் வேட்பாளர் என்று ராகுலை முன்மொழியாத நேரத்தில், துணிந்து ஸ்டாலின் அறிவித்ததுதான் முக்கியத்துவம் பெற்றது.

 

அவர் அறிவித்தவுடனே, மேடையில் இருந்த பினராயியோ, சந்திரபாபு நாயுடுவோ மறுத்துப் பேசவில்லை. அவர்களுக்கும் ஸ்டாலின் கருத்தில் உடன்பாடு இருக்காதுதான். குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரதமர் வேட்பாளர் என்ற விவகாரத்துக்குள்ளேயே நுழைய மாட்டார்கள். அதேசமயம், திமுகவின் கருத்தை அவர்கள் எதிர்க்கவில்லை. ஏனெனில் அது திமுகவின் கருத்து மட்டுமே என்று அவர்களுக்குத் தெரியும்.

 

rahul gandhi


 

இப்போதைக்கு காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளில் தேர்தல் முடிந்தவுடன் பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யலாம் என்ற கருத்துடைய கட்சிகள் என்று பார்த்தால், மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸும், கம்யூனிஸ்ட்டுகளும்தான். உத்தரப்பிரதேசத்தைப் பொருத்தமட்டில் சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜும் அணி அமைத்து போட்டியிட முடிவு செய்திருக்கின்றன. அவர்கள் காங்கிரஸ் கூட்டணியில் வர மாட்டார்கள். அதேசமயம், உத்தரப்பிரதேசத்தில் அவர்களுடைய அணியை காங்கிரஸ் ஆதரிக்கும் என்று ராகுல் கூறியிருக்கிறார்.

 

தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளும் எத்தனை இடங்களைப் பெறுகின்றன? தனியாக அணி அமைக்க விரும்பும் மாநிலக் கட்சிகள் எத்தனை இடங்களைப் பெற்றிருக்கின்றன? பாஜக எத்தனை இடங்களை பெற்றிருக்கிறது என்பதையெல்லாம் பார்த்தபிறகு பிரதமர் தேர்வு குறித்து பேச்சே நடத்த முடியும்.

 

ஆனாலும், அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் காங்கிரஸ் தலைவர் ராகுலையே திமுக பிரதமர் வேட்பாளராக ஆதரிக்கும் என்பதைத்தான் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். ஸ்டாலின் முன்கூட்டியே பிரதமர் வேட்பாளர் என்று ராகுலை அறிவித்ததும் அவருடைய அறிவிப்பு நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியதும் பாஜக ஆதரவு ஊடகங்களையும், திமுக எதிர்ப்பு ஊடகங்களையும் கதறவைத்திருக்கிறது என்பதே நிஜம்.

 

நிச்சயமாக, நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு சாதகமான சூழலையே ஏற்படுத்தி இருக்கின்றன. தேர்தல் முடிந்தவுடன் காங்கிரஸ் வெற்றிபெற்ற மாநிலங்களில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது மக்கள் ஆதரவை அதிகரிக்கவே செய்யும். காங்கிரஸ் முடிவைத் தொடர்ந்து பாஜகவும் சலுகைகளை அறிவிக்கத் தொடங்குகிறது. ஆனால், அது மக்கள் மத்தியில் காங்கிரஸுக்கே சாதகமாக மாறும். காங்கிரஸ் வெற்றி பெற்றதால் பாஜக பயந்து செய்கிறதே தவிர, மனமுவந்து செய்யவில்லை என்று சாதாரண மக்கள்கூட எளிதில் புரிந்துகொள்வார்கள்.

 

ஸ்டாலின் இன்னொரு விஷயத்தை அந்த மேடையில் அறிவித்தார். அதாவது, இப்போதுள்ள கட்சிகளுடன் மேலும் கட்சிகள் காங்கிரஸ் அணியில் இணையும் என்றார். அவருடைய அந்த வார்த்தைகள் இப்போது பலிக்கத் தொடங்கியுள்ளன. பாஜக கூட்டணியிலிருந்து அடுத்தடுத்து கட்சிகள் வெளியேறுவது இதை உறுதிப்படுத்துகிறது.