Skip to main content

வெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 16/09/2019 | Edited on 16/09/2019

முதல்வர் எடப்பாடியின் வெளிநாடு பயணம் மூலமாக எட்டாயிரம் கோடி முதலீடுகள் வந்துள்ளன, அவரது பயணம் பெரும் வெற்றி' என ஜெ., ஜெயிலிலிருந்து திரும்பி வந்தபோது அளித்த வரவேற்பை போல பிரம்மாண்டமான வரவேற்பை அ.தி.மு.க.வினர் அளித்தது போல காட்சிகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. உண்மையில் எடப்பாடி முதலீடுகளை கொண்டு வந்தார் என நிரூபிப்பாரேயானால் அவருக்கு பாராட்டு விழா நடத்த தயார்' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சொல்ல, "ஸ்டாலின் எப்பவுமே என்னை எதிர்க்கத்தான் செய்வார்' என முதலமைச்சர் எடப்பாடி பதில் சொன்னார். இந்நிலையில் எடப்பாடி, வெளிநாடுகளில் முதலீட்டு ஒப்பந்தம் செய்து கொண்ட கம்பெனிகள் எவை என நக்கீரன் ஆய்வில் இறங்கியது.
 

eps



அந்த பட்டியலில் முதலில் வந்தது, ரீ வேச்சூர் எல்எல்சி (REVATURE -LLC) என்கிற கம்பெனி. இது ஒரு வேலைவாய்ப்பு வழங்கும் கம்பெனி. இந்த கம்பெனி மூலம் தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தமிழகத்தில் இயங்கும் சர்வதேச கம்பெனிகளுக்கு புதிய வேலைவாய்ப்புகளுக்கு தகுதியான நபர்களை தரவும்... ஆயிரம் கோடி ரூபாய் டாலர்களில் முதலீடு செய்யப்போவதாக செப்டம்பர் 3-ம் தேதி நியூயார்க் நகரில் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி முன்னிலையில், தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த கம்பெனி எப்படிப்பட்ட கம்பெனி என இணைய தளங்களில் தேடினோம். இது ஒரு வேலைவாய்ப்பு அளிக்கும் கம்பெனி என்பதால் இந்த கம்பெனி பற்றி என்ன விமர்சனம் வந்துள்ளது என ஆராய்ந்தோம்.

 

admk



இது ஒரு ஊழல் கம்பெனி. இந்த கம்பெனி பற்றி கூகுளில் ஏராளமான விமர்சனங்கள் வந்துள்ளன. அதை பரிசோதித்து பாருங்கள். இவர்கள் ஒரு வேலை என சொல்வார்கள். இன்னொரு வேலை செய்ய வைப்பார்கள். நீங்கள் அவர்கள் சொல்லும் வேலையை செய்யாமல் போனால் உங்களுக்கு 20,000 டாலர் அபராதம் விதிக்கப்படுகிறது. இது ஒரு ஏமாற்று வேலை என்கிறது. இந்த அமெரிக்க கம்பெனியுடன் எடப்பாடி எப்படி ஒப்பந்தம் செய்தார் என்பது ஒரு தனிக்கதை. எடப்பாடியின் ஆல் இன் ஆல் செயலாளராக இருப்பவர் விஜயகுமார் ஐ.ஏ.எஸ். விஜயகுமாருக்கு நெருக்கமானவர் தகவல் தொழில்நுட்பத் துறையில் முதன்மைச் செயலாளராக இருக்கும் சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ். இவரது சொந்த வெப்சைட்டை பாருங்கள். ரீ வேச்சூர் (Revature) பற்றி தெரியும்'' என்றார்கள்.

 

admk



www.santhoshbabu.org/family என்கிற அவரது இணையதள பக்கத்திற்கு சென்றோம். "எனது மகன் நிதின் சந்தோஷ் ஒரு பி.இ. பட்டதாரி. தகவல் தொழில் நுட்பத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற அவர், ரீவேச்சூர் டெக்னாலஜி கம்பெனியில் சோதனைப் பொறியாளராக வேலை பார்க்கிறார்'' என சந்தோஷ் பாபு குறிப்பிட்டுள்ளார். அவரது மகன் வேலை, செய்யும் கம்பெனி. அதுவும் ஊழல் கம்பெனி என அமெரிக்கர்கள் விமர்சனம் செய்யும் கம்பெனியுடன் சந்தோஷ்பாபு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம் முன்னிலையில் ஆயிரம் கோடி முதலீடு ஒப்பந்தம் போட்டிருக்கிறார் என சொல்லி சிரிக்கிறார்கள் தொழிலதிபர்கள்.

 

admk



அடுத்த நிறுவனம் அக்வில் சிஸ்டம்ஸ் (AQUILL SYSTEMS) என்கிற கம்பெனி. அது எப்படிப்பட்ட கம்பெனி என ஆராய்ந்தோம். www.glass door.co.in என்கிற விமர்சன வெப்சைட்டில் இந்த கம்பெனியில் ஒரேயொரு ஆள்தான் வேலை செய்கிறார். அவரே முதலாளி, அவரே தொழிலாளி. வெறும் லெட்டர் பேடு கம்பெனி என்கிற விமர்சனம் காணப்படுகிறது. இது லெட்டர் பேடு கம்பெனி என்றால்... 50,000 கோடி ரூபாய் தமிழகத்தில் முதலீடு செய்ய எடப்பாடி ஒப்பந்தம் போட்ட மேற்கு வங்கத்தில் இயங்கும் கம்பெனியான ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் கம்பெனி யார் அமெரிக்காவுக்கு வந்தாலும் ஓர் ஒப்பந்தம் போடும். கடந்த மாதம் அமெரிக்காவுக்கு வந்த இலங்கை அமைச்சர்களிடம் ஒன்றரை லட்சம் கோடியில் ஹால்டியா கம்பெனி ஒரு ஒப்பந்த அறிவிப்பில் கையெழுத்திட்டது.

ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கான ரூபாய் முதலீடு செய்ய இது பிரிட்டீஷ் பெட்ரோலியம் போல மிகப்பெரிய நிறுவனம் அல்ல. எல்லாம் ஏமாற்று வேலை என்கிறார்கள் அமெரிக்க தொழிலதிபர்கள். மற்றொரு கம்பெனி Jean Martin என்கிற கம்பெனி. இது ஏற்கனவே சென்னையில் இயங்குகிறது. சென்னை சிறுசேரியில் தமிழக அரசு கொடுத்துள்ள வாடகை கட்டிடத்தில் வெறும் 50 பேர் வேலை செய்யக்கூடிய கம்பெனி. அடுத்து Jugo Health என்கிற கம்பெனி. இதுவும் சென்னையில் இயங்கக்கூடிய கம்பெனி. பக்கவாதம் வந்து கை, கால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கென இந்த நிறுவனம் ஒரு கருவி மூலம் சிகிச்சை அளிக்கிறது. ஒருமுறை இந்த கருவியில் சிகிச்சை பெற்றால் நரம்பு நீட்டமடையும். அதற்கு ஒரு நோயாளிக்கு நூறு ரூபாய் கட்டணத்தை சென்னையில் உள்ள அலுவலகத்தில் வசூல் செய்யக் கூடிய கம்பெனி.


மொத்தம் 200 தொழிலதிபர்களை நியூயார்க் நகரில் எடப்பாடி சந்தித்தார். பதினோரு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதில் பதினோரு கம்பெனிகள் பங்கேற்றன. 2,000 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெற்றார் எடப்பாடி என தமிழக அரசு அறிவித்துள்ள நியூயார்க் நகர தொழிலதிபர் சந்திப்பில் இடம்பெற்ற கம்பெனிகள் தான் இவை.

இந்த கம்பெனிகள் எல்லாம் தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலாளர் சந்தோஷ்பாபு, முதல்வரின் உதவியாளர் கிரிதரன், முதல்வரின் செயலாளர் விஜயகுமார் ஐ.ஏ.எஸ். ஆகியோருக்கு நெருக்கமானவை. அமெரிக்கா சென்ற முதல்வர், முதலீட்டை ஈர்த்தார் என்பதை பறைசாற்ற இம்மூவரும் தங்களுக்கு நெருக்கமான சென்னையைச் சேர்ந்த கம்பெனிகளின் அமெரிக்க பிரதிநிதிகளை வரவழைத்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் கோட்சூட் போட்டு எடப்பாடியுடன் நிற்க வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுக்க வைத்துள்ளார்கள்'' என சொல்லும் தொழிலதிபர்கள், "இந்த கம்பெனிகளுடன் தமிழக அரசு ஒப்பந்தம் போட்டது என்றால் அதன் இன்னொரு பிரதி அவர்களிடம் தர வேண்டும்.

நியூயார்க் நகரில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பில் போடப்பட்ட ஒப்பந்தத்தை அப்படியே மூட்டையாக கட்டிக்கொண்டு சென்னைக்கு கொண்டு வந்துவிட்டார்கள். இத்தனைக்கும் பத்து வருடத்திற்குள் ஒப்பந்தம் போட்ட கம்பெனிகள் தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். பத்து வருடத்தில் சம்பந்தப்பட்ட கம்பெனிகள் முதலீடு செய்யாவிட்டால் தமிழக அரசு கேள்வி கேட்க முடியாது. அப்படிப்பட்ட பல்லில்லாத ஒப்பந்தத்தில் எந்த பயனும் இல்லை. அதை தூக்கிக் கொண்டு வந்து விட்டார்கள்'' என்கிறார்கள் தொழிலதிபர்கள்.

உண்மையில் தமிழகத்தில் முதலீடு செய்ய வருபவர்களிடம் லஞ்சம் பெறுவதற்கென்று தனியாக ஒரு அலுவலகம் நடத்திக் கொண்டிருக்கிறது செல்வாக்குமிக்க அமைச்சர் வட்டாரம். அதை மூடினாலே தமிழகத்தில் தொழில் வளரும் என்கிறார்கள் முதலீட்டாளர்கள். "இல்லை... இல்லை லண்டன் கிங்ஸ் மருத்துவமனையில் உள்ளதைப் போல் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொண்டு வருவேன். அந்த மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் திறப்பேன். இது என் பயணத்திற்கு கிடைத்த வெற்றி' என்கிறார் முதல்வர் எடப்பாடி. இது மட்டுமல்ல அமெரிக்கா பாணியில் கால்நடை பண்ணை அமைப்பது உட்பட எதுவுமே நடக்காது என அவநம்பிக்கையை விதைக்கிறார்கள் தொழில்துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வெளிநாட்டு விசிட்டும் அதில் நடைபெற்ற அனைத்தும் கோட் சூட் கோல்மால் என்கிறார்கள் கோட்டை தரப்பினர்.

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.