Skip to main content

தமிழனுக்கு மதம் இருக்கிறதா...அரசியல் சூழ்ச்சி...கீழடி தரும் அதிர்ச்சி தகவல்!

Published on 26/09/2019 | Edited on 26/09/2019

இந்திய வரலாற்றை வடக்கின் பார்வையிலிருந்தே எழுதிவந்த ஆய்வாளர்கள் தெற்கு நோக்கித் திரும்பவேண்டும் என்பதைப் பன்னெடுங்காலமாக வலியுறுத்தி வரப்பட்ட நிலையில், ஹரப்பா, ராகிகடி புதைபொருள் ஆய்வுகள் வரிசையில் அதனை உறுதியாக மெய்ப்பித்திருக்கிறது கீழடி. சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ளது பள்ளிச்சந்தைப் புதூர். இங்குள்ள உழவுநிலமான மண்மேட்டில் தொல்லியல் எச்சங்கள் பலமுறை கண்டெடுக்கப்பட்ட நிலையில், 2015-ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சிப் பணிகளை தொடங்கியது மத்திய தொல்லியல் துறை. அது நடத்திய மூன்றுகட்ட ஆய்வுகளில் கீழடியில் வாழ்ந்த தமிழர்களின் நாகரிகம் கி.மு.3-ம் நூற்றாண்டு என கணிக்கப்பட்டது. ஆனால், மத்திய தொல்லியல் துறையின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்த தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, நான்காம் கட்ட ஆய்வை 2018-ல் கையிலெடுத்தது மாநில தொல்லியல் துறை.

 

keeladi



தமிழகத்தில் நிலவிய சங்ககால பண்பாட்டு வரலாற்று ஆய்வில் மாபெரும் திருப்புமுனையாக இந்த ஆய்வு அமையுமென்று அதுவரை யாரும் எதிர்பார்க்கவில்லை. கீழே தோண்டத்தோண்ட தமிழரின் பெருமையை மென்மேலும் உயர்த்தி இருக்கிறது கீழடி. வைகை நதிக்கரை நாகரிகமாக கீழடியில் வசித்துவந்த தமிழரின் நாகரிகம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், அதாவது 2,600 ஆண்டுகள் பழமையான சிறப்பம்சங்களைக் கொண்டிருந்ததையும் இந்த ஆய்வு உறுதிப் படுத்துகிறது.

 

research



சிந்துச் சமவெளி நாகரிகம் தொல்தமிழர் நாகரிகம் என்பதை சர்வதேச ஆய்வாளர்கள் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆய்வுகள் வழியாக உறுதிப்படுத்தினர். அதை ஆரிய நாகரிகமாக சித்தரிக்க எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியையும், வரலாற்று தொன்ம ஆதாரங்கள் முறியடித்து வருகின்றன. குறிப்பாக ஹரியானா மாநிலம் ராகிகடியில் எடுக்கப்பட்ட 4,500 ஆண்டுகள் பழமையான மனித எலும்புக்கூடுகளின் மரபணு ஆய்வு முடிவு, ஸ்டெப்பி புல்வெளிப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்துவந்த ஆரியர்களின் மரபணுக்களோடு ஒத்துப் போகவில்லை என்பதை உறுதிசெய்தது. மேலும், இந்தியா முழுமைக்கும் பரந்துவிரிந்த நிலப்பரப்பில் வாழ்ந்த, ஆரியர்களுக்கு முற்பட்ட மனிதர்களின் மரபணுவாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் விவாதிக்கப்பட்டன.

 

keeladi



இந்நிலையில், உலக அரங்கில் தமிழர்களுக்குக் கிடைத்திருக்கும் புதிய பலமாக கீழடி அகழாய்வு முடிவுகள் பார்க்கப்படுகின்றன. சங்ககாலத் தமிழரின் வைகை ஆற்று நாகரிகத்தில் வேளாண் சமூகமாக, நகர நாகரிகமாக, வளமும் செழுமையுமாய் நம் மூதாதையர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கீழடியில் கிடைத்துள்ளன. அகழாய்வு நடந்த பகுதி தொழில்நகரமாக இருந்திருக்கிறது. நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், சுட்ட செங்கற்களும், சுண்ணாம்பும், கூரை ஓடுகளும் கொண்டு எழுப்பப் பட்டவை. பூச்சுக்காக பயன்படுத்தப்பட்ட சுண்ணாம்புச் சாந்தில் 97 சதவீதம் சுண்ணாம்பு இருந்ததுதான் இத்தனை ஆண்டுகாலம் அவை நிலைத்திருந்ததற்கான காரணம்.

இந்தியாவிலேயே மிகவும் பழமையான சிந்துச் சமவெளி பண்பாட்டின் வரிவடிவங்களின் நீட்சியாகவும், தமிழ் பிராமி எழுத்துகளின் முன்னோடியாகவும் கீறல்கள் எனப்படும் வரிவடிவங்கள் பார்க்கப்படுகின்றன. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பானை ஓடுகளில் இந்தக் கீறல்கள் இடம்பெற்றிருப்பதும், அவை சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துகளோடு ஒத்துப்போவதும் இந்தியா முழுமைக்கும் தொல்தமிழர் நாகரிகம் பரவிக் கிடந்ததற்கான சான்றுகளுக்கும், பார்வைக்கும் வித்திடுகின்றன. அதுபோக, சங்ககாலத்தில் புலவர்கள் மட்டுமின்றி, எளிய மக்களும் எழுத்தறிவு பெற்றிருந்ததற்கான ஆதாரங்களாக அவை விரிகின்றன.


வைகை நதிக்கரை நாகரிகத்தில் வேளாண் சமூகமாகவும், கால்நடைத் தொழிலை முதன்மையாகக் கொண்டும் செழுமையாக வாழ்ந்திருக்கிறார்கள் தமிழர்கள். அங்கு கிடைத்த உயிரினங்களின் எலும்புகளில் வெட்டுத் தழும்புகள் இருப்பதன்மூலம், உணவுக்காக அவற்றைப் பயன்படுத்தியதும் தெரியவருகிறது. திமிலுள்ள காளை, பசு, காட்டுப்பன்றி, வெள்ளாடு, எருமை, மயில் போன்ற உயிரினங்களாகவே அவை இருப்பதாலும், ஆரியம் தன் புராணங்களில் முன்வைக்கும் குதிரை இல்லாதபடியாலும், இது ஆரியம் நுழைவதற்கு முந்தைய நாகரிகம்தான் என்பதை நிறுவ இயலும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கீழடி அகழாய்வில் சுடு மண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 650-க் கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருட்கள், 35 காதணிகள், அணிகலன்கள், தங்கம், செம்பு, இரும்பு போன்ற உலோக தொல்பொருட்கள் கிடைத்துள்ள போதிலும், மத வழிபாட்டுக்கான எந்தவித ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆரியர்களின் வேத நாகரிகத்துக்கு மாறான, தனித்துவமிக்க இயற்கை சார்ந்த சமூகமாக தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதையே கீழடியும் உண்மையாக்குகிறது. இதன்மூலம், எந்தவொரு மத அடையாளத்தையும் தமிழர்கள் கொண்டிருக்கவில்லை என்பது உறுதியாகிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகள் எழுதப்படுவதற்கு முன்பே அந்த வாழ்க்கை முறையைத் தமிழர்கள் கடைப்பிடித்திருப்பதும் தெரிய வருகிறது.

தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்யும் இந்தப் பணியை சிறப்புடன் மேற்கொண்டு ஆய்வு முடிவுகளை வெளியிடுவதில் முனைப்பு காட்டிய தமிழக தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., தீராத எழுத்துப்பணியின் மூலம் முறையான அகழாய்வு மேற்கொள்ள வலியுறுத்திவந்த சு.வெங்க டேசன் எம்.பி., அகழாய்வுக்கான நிலத்தை வழங்கியவர்கள் என எல்லோருடைய மதிப்பையும் இன்னும் பல படிகள் கூட்டியிருக்கிறது கீழடி. தமிழகத்தின் மீதான மத்திய அரசின் போக்குகளைக் கண்டுகொள்ளாமல் விட்டாலும், கீழடி விவகாரத்தில் உறுதியாக நின்ற தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் பாராட்டப்படுகிறார்.

பெருமையும் தொன்மையும் மிக்க ஆய்வுக்காக தன் விளைநிலத்தை வழங்கிய பேராசிரியர் கரு.முருகேசன், மத்திய தொல்லியல் துறை ஆய்வில் பல அரிய தகவல்களை வெளிக் கொண்டு வந்த டாக்டர் அமர்நாத், அவரை அந்தப் பணியிலிருந்து மாற்றி, அகழாய்வு பணிகளை முடக்க முயன்ற மத்திய அரசின் சதித்திட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்து வென்ற வழக்கறிஞர் கனிமொழிமதி என இந்த ஆய்வுக்கு வலுச்சேர்த்தவர்கள் ஏராளம்.

கீழடியில் ஐந்தாம் கட்ட ஆய்வு தொடங்கவுள்ள நிலையில், அருகிலுள்ள பகுதிகளிலும் ஆய்வுப் பணி நீட்டிக்கப்பட இருக்கிறது. வைகை நதிக்கரை மட்டுமின்றி ஏற்கனவே ஆய்வுக்குட்பட்ட அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர் ஆகிய பகுதிகளிலும், கடலுக்குள் மூழ்கிய பூம்புகார் பகுதியையும் ஆய்வு செய்யும்போது, தொல்தமிழர் பண்பாட்டு அடையாளம் இன்னும் பல மடங்கு வெளிப்படுவதுடன், இந்தியா முழுவதும் திராவிட அடையாளங்கள் நிறைந்திருந்த காலமும் உறுதியாகும்.

இதுவரை கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை அங்கேயே அருங்காட்சியம் அமைத்து பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளாக தென்னை மரங்களால் பாதுகாக்கப்பட்ட பண்பாட்டு மேட்டைக் கிளறி, மேலே கொண்டுவரப்பட்ட தமிழரின் பெருமையை அதிகார பலத்தின் கரங்களுக்கு இரையாகக் கொடுத்து விடக் கூடாது என அனைத்து தரப்பும் வலியுறுத்துகின்றன.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.