Skip to main content

ஓபிஎஸ் தம்பியின் பதவி பறிப்பு...அமைச்சர்களின் சதி வேலை...கடுப்பில் ஓபிஎஸ்!

Published on 23/09/2019 | Edited on 23/09/2019

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக ஓ.ராஜா செயல்பட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது மதுரை ஐகோர்ட். ஓ.ராஜாவின் இந்த பதவிப் பறிப்புக்குப் பின்னால் அமைச்சர்களின் சதி இருப்பது அம்பலமாகியுள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தல் மூலம் அரசியலில் குதித்த ஓ.ராஜா, அத்தேர்தலில் வெற்றி பெற்று பெரியகுளம் நகர்மன்றத் தலைவர் ஆனார். இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு நடந்த ரோசி நகர் தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, மதுரை ஆவின் தலைவர் ஆனார்.

 

admk



இந்நிலையில், கடந்த மாதம் 22-ம் தேதி  110 விதிமுறையின்படி தேனி, தர்மபுரி, கரூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய 6 பால் உற்பத்தி சங்கங்களை பிரித்து தனி யூனியனாக செயல்படும்' என முதல்வர் அரசு ஆணை வெளியிட்டார். அதனால், மதுரை ஆவினிலிருந்து தேனி மாவட்டம் ஆவின் தனியாக பிரிக்கப்பட்டது. தேனி ஆவின் தலைவராக ராஜாவும், துணைத் தலைவராக செல்லமுத்து உட்பட 17 பேர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தனர். இந்த இடைக்கால குழு தேர்வு செய்யப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது. சங்கத்துக்கு தேர்தல் நடத்தி, வெளிப்படையாக உறுப்பினர்கள், தலைவரை தேர்வு செய்ய வேண்டும். அதுவரை இடைக்கால குழு செயல்பட தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று பழனிசெட்டிபட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தலைவர் அமாவாசை தொடர்ந்த வழக்கில், ஓ.ராஜா உள்பட 17 பேர் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர் நீதிபதிகள் சிவஞானம், தாரணி.

 

admk



இது குறித்து அமாவாசை,  போலியான ரிக்கார்டுகளை தயார் செய்துதான் ரோசி நகர் தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ராஜா. அதை ரத்துசெய்ய வேண்டும் என ஏற்கனவே ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறேன். அது நிலுவையில் இருக்கும்போதே, அண்ணன் ஓ.பி.எஸ். துணைமுதல்வராக இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, தேனி ஆவின் தலைவராகிவிட்டார். ஆதாரங்களுடன் கோர்ட்டில் சமர்ப்பித்ததால்தான் ராஜா தலைவராக செயல்பட தடை விதித்திருக்கிறது' என்று ராஜா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறுகிறார். 


ராஜா விவகாரம் குறித்து மாவட்ட பொறுப்பில் உள்ள சில ர.ர.க்களிடம் பேசியபோது, ‘மதுரையில் ஓ.ராஜா கால் வைக்கக்கூடாது என்று அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார், ராஜேந்திர பாலாஜி மூவரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், மதுரை ஆவின் தலைவர் ஆனதோடு அல்லாமல் பதவி ஏற்ற சில மாதங்களிலேயே மதுரை ஆவினில் உள்ள 60-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்காக நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் கணிசமான தொகையைப் பார்த்து வசூல்ராஜா ஆனதால் மூன்று அமைச்சர்களும் டென்ஷனின் உச்சத்திற்கே போனார்கள். அவர்கள் மூவரும் எடப்பாடியிடம் பொங்கியதால்தான், மதுரையில் இருந்து தேனி பிரிக்கப்பட்டு அதற்கு தலைவர் ஆக்கப்பட்டார் ராஜா.

மதுரை பதவியை பறித்த அமைச்சர்களுக்கு எதிராக, மாநில அளவில் பதவியை பிடித்து காட்டுகிறேன் என்று மார்தட்டியுள்ளார் ராஜா. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் மூலம் இம்மாதம் இறுதிக்குள் 23 யூனியனில் இருந்து மாநில தலைவர் பதவியை நியமிக்க இருக்கிறார்கள். இதில் தலைவராகிவிட்டால் சைரன் வண்டியில் பவனி வரலாம் என்று முட்டிமோதிக்கொண்டிருக்கிறார் ராஜா. இந்த விசயம் தெரிந்ததும், ஆவின் மாநிலத் தலைவர் பதவிக்கு வரக்கூடாது என்று சைலன்டாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அமைச்சர்கள் மூவரும் என்கிறார்கள்.

அமாவாசை சொல்லும் குற்றச்சாட்டுகள் குறித்தும், அமைச்சர்களின் சதி குறித்தும் கேட்க ஓ.ராஜாவை தொடர்புகொண்டபோது, "கோர்ட் தடை விதித்ததை பற்றி கோர்ட்டில் தான் கேட்க வேண்டும். என்கிட்ட எதுக்கு கேக்குறீங்க?''’என்று கேட்டவாறு அதற்குமேல் பேச விரும்பாமல் லைனை துண்டித்துவிட்டார்.
 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.