Skip to main content

“ஓ.பி. ரவீந்தரநாத் தேர்தலில் போட்டியிட முடியாது” - தங்க தமிழ்செல்வன் தடாலடி

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

OP Ravindranath cannot contest elections says Thanga Tamilselvan

 

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்தரநாத் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், இந்த வெற்றியை எதிர்த்து மிலானி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். மேலும், அந்த வழக்கில் தனது சொத்து விவரங்கள் உள்படப் பல விஷயங்களை வேட்பு மனுவில் ரவீந்தரநாத் மறைத்திருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அவருடைய வெற்றி செல்லாது என்று தீர்ப்பு அளித்திருக்கிறது. மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாள் அவகாசம் கொடுத்திருக்கிறது. அந்த தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்செல்வனை நாம் சந்தித்து பேட்டி கண்டோம். அதில் சில கேள்வி பதில்களைத் தொகுத்துள்ளோம்.

 

2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ரவீந்தரநாத் வெற்றி செல்லாது என்று மிலானி என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இதனையடுத்து உயர்நீதிமன்றம் அவருடைய வெற்றி செல்லாது எனவும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாள் அவகாசம் கொடுத்திருப்பதையும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

முறைகேடாகத் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற ஒரே நபர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்தரநாத் தான். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அத்துமீறி கொள்ளையடித்த பணத்தை வைத்து வெற்றி வாகை சூடியதால் தான் அவருடைய வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்கள். அந்த வழக்கிற்கு நான் சாட்சியாக சென்றேன். அங்கு, இவர்கள் முறைகேடாக பணம் கொடுத்ததற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்றும் அதிகாரிகளை மதிக்காமல் அமைச்சர்கள் ஒன்று கூடி  தன் இஷ்டத்திற்கு செயல்பட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கூறினேன். அதுமட்டுமல்லாமல் இந்த தேர்தலில் இவர்கள் பல முறைகேடுகள் நடத்தியிருக்கிறார்கள். அதனால், ரவீந்தரநாத்துடைய வெற்றி செல்லாது என்ற கருத்தையும் முன்வைத்தேன். அதன் அடிப்படையில், இப்பொழுது உயர்நீதிமன்றத்தில் ரவீந்தரநாத்தின் வெற்றி செல்லாது என்ற தீர்ப்பு வந்திருக்கிறது. இந்த தீர்ப்பு காலம் கடந்து வந்தாலும் இதை நான் பாராட்டுகிறேன்.

 

தேர்தல் நேரத்தில் தேர்தல் அதிகாரிகளிடம் இந்த முறைகேடு பற்றி புகார் அளித்தீர்களா?

அந்த சமயத்தில் அனைத்து புகாரையும் கொடுத்தேன். ஆனால், அந்த புகாரை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையில் அன்றைக்கு அதிகாரிகள் இல்லை. அதன் அடிப்படையில் தான் இந்த வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.

 

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரவீந்தரநாத் பதவி விலக வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

சென்னை உயர்நீதிமன்றம் இந்த வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், இவர்கள் உச்சநீதிமன்றம் சென்றால் கூட இந்த வெற்றி செல்லாது என்று தான் கூறுவார்கள். ஒருவேளை அப்படி சொன்னால் மீண்டும் இவரால் தேர்தலில் போட்டியிட முடியாது.

 

மறுதேர்தல் நடப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

இன்னும் 8 மாத காலங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் என்ற சூழலில் மறுதேர்தல் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை.

 

8 மாதம் கடந்து நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் நீங்கள் களம் காண்பீர்களா?

நாடாளுமன்றத் தேர்தலில் யார் போட்டியிட வேண்டும் யார் போட்டியிடக் கூடாது என்பது தலைமை தான் முடிவு செய்யும்.

 

ஓ.பன்னீர்செல்வத்திற்காக பிரதமர் மோடி நேரடியாக அந்த தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த செல்வாக்கின் அடிப்படையில் தான் ரவீந்தரநாத் வெற்றி பெற்றார் என்று அதிமுகவினர் கூறுகிறார்களே?

அந்த செல்வாக்கில் தான் முறைகேடு நடந்தது என்று உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்திருக்கிறது. அந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன்.


 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.