Skip to main content

கரோனாவை விட கொடியவர்கள் இவர்கள்... பொள்ளாட்சி வழக்கின் குற்றவாளிகளை இப்படித்தான் செய்தார்களா..? - 'நக்கீரன்' ஆசிரியர் கேள்வி!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020

 

g


கரோனா வந்ததில் இருந்து ஆளாளுக்கு மணியம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். நாம் நினைக்கிறோம், தமிழ்நாட்டுக்கு ஒரு இ.பி.எஸ். தான் இருக்கிறார் என்று. உண்மை அப்படி அல்ல, ஒவ்வொரு மாவட்டத்துக்கும், ஒவ்வொரு ஊருக்கும் ஒரு இ.பி.எஸ். இருக்கிறார்கள். அவர்கள் வைத்ததுதான் சட்டமாக இருக்கின்றது. அது ஒரு இன்ஸ்பெக்டராக இருக்கட்டும், எஸ்.பி.யாக இருக்கட்டும், ஆட்சியராக இருக்கட்டும், அவர்கள் எடுப்பதுதான் முடிவாக இருக்கின்றது. மக்களாக இருக்கும் நாம் என்ன பாவம் செய்தோம். ஒரு பக்கம் கரோனா நம்மை கொல்கிறது. மூன்று நாட்களில் கரோனா ஒழிந்துவிடும் என்று கூறிய முதல்வர் தற்போது கடவுளிடம் பாரத்தைப் போட்டுவிட்டு ஒதுங்கிவிட்டார். 

 

நம்மைவிட்டு கரோனா எப்போது போகும் என்று தெரியவில்லை. அதைவிட பெரிய கரோனா யார் என்றால் சில போலிஸ்காரர்கள். நான் அனைத்து போலிஸ்காரர்களையும் சொல்லவில்லை. சிலர் இருக்கின்றார்கள். சில போலிஸ்காரர்கள் ஆங்காங்கே கொடூரன்களாக இருக்கிறார்கள். உதாரணத்துக்கு 2018ஆம் ஆண்டு திருச்சியில் ஒரு சம்பவம் நடைபெற்றது. ராஜா என்பவர் தன்னுடைய கர்ப்பிணி மனைவியை அழைத்துக்கொண்டு இரண்டு சக்கர வாகனத்தில் செல்கிறார். அவரிடம் ஹெல்மட் இல்லை என்ற காரணத்திற்காக அவர்களைத் துரத்திச் சென்று உதைத்ததில் அந்தக் கர்ப்பிணிப் பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். மக்கள் எல்லாம் போராடுகிறார்கள், அதற்குப் பயந்து ஒரு வழக்கு போட்டார்கள். கொஞ்ச நாள் உள்ளே இருந்துவிட்டு அந்த ஆள் சட்டை காலரை தூக்கிவிட்டுக் கொண்டு தற்போது வெளியே வந்துவிட்டார். 

 

கோவையில் இதே மாதிரி ஒரு சம்பவம் நடைபெற்றது. கடை விற்றுக் கொண்டிருந்த அம்மாவிடம் காவலர்கள் கடையை மூடு என்று சொன்னார்கள். கூட்டம் அதிகம் இருந்த அந்த நேரத்தில் அந்த அம்மாவின் மகன் காவலர்களைப் பார்த்து ஏதோ கூறியுள்ளான். இதனால் அவனை மாடு அடிப்பதைப் போல் காவலர்கள் அடித்தார்கள். அந்த வீடியோவை நாம் அனைவரும் பார்த்திருப்போம். காவலர்களுக்கு மனசாட்சியே இருக்காதா? அவர்களுக்கும் குடும்பம், அக்கா, தங்கைகள் இருக்கத்தானே செய்கிறார்கள். அப்படி, என்ன அதிகாரம் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். இந்த ஊரடங்கு நேரத்தில் அதனைக் காவலர்கள் தான் நடைமுறை படுத்த வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காக இப்படி அராஜகம் செய்ய வேண்டுமா?

 

பொள்ளாட்சி வழக்கில் குற்றவாளிகள் மீது இவ்வளவு அக்கறையை காவலர்கள் காட்டினார்களா, லத்தியை கண்ட இடத்தில் வைத்து அடித்தார்களா, துன்புறுத்தினார்களா என்றால் அப்படி எதுவுமே இல்லை.  ஏனென்றால் அது இவர்கள் பார்வைக்குத் தவறில்லை. ஆனால் தூத்துக்குடி வியபாரிகள் பென்னீக்ஸ் மற்றும் ஜெயராஜ் தண்டனைக்குரிய குற்றவாளிகளாக இவர்களுக்குத் தெரிகிறார்கள். என்ன குற்றம் செய்தார்கள். ஊரடங்கு நேரத்தில் 5 நிமிடம் கடையைக் கூடுதலாகத் திறந்துவிட்டார்கள். இதுதான் அவர்கள் செய்த குற்றம். வேறு பெரிதாக எதுவும் செய்யவில்லை. அவர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று இரவு 7 மணியில் இருந்து அதிகாலை 1.30 மணி வரை அடித்துள்ளார்கள். 

 

அவர்களுடைய அம்மா காவலர்களிடம் கதறி இருக்கிறார்கள். ஆனால் அது எதையும் அவர்கள் கேட்கவில்லை. 'போலீஸ் பிரண்ட்ஸ்' என்று ஒவ்வொரு காவல்நிலையத்திலும் சிலர் இருப்பார்களாம். அவர்களும் சேர்ந்து இவர்களைத் தாக்கி இருக்கிறார்கள். அவர்கள் அடிக்கும் சத்தம் வெளியே தெரு முழுவதும் கேட்டுள்ளது. வலியில் அவர்கள் அலறி உள்ளார்கள். ஒருத்தரும் உதவிக்கு வரவில்லையே என்று அந்த அம்மா மறுகுகிறார்கள். அடிப்பவர்கள் யாரும் அவர்களிடம் இரக்கமே காட்டவில்லை. அப்படி என்ன தப்பு செய்துவிட்டார்கள் அவர்கள் இருவரும்? இந்த ஊரடங்கு நேரத்தில் மக்களிடம் கேளுங்கள் கரோனா கொடியதா அல்லது ஊரடங்கில் போலிஸ்காரர்கள் செய்வது கொடூரமா என்று, அவர்கள் காவலர்களைக் கைகாட்டுவார்கள். அந்த அளவுக்கு அவர்களின் செயல்பாடுகள் உள்ளன. இதற்கெல்லாம் அவர்கள் நிச்சயம் பதில் சொல்ல வேண்டிவரும் என்பது மட்டும் உண்மை.

 

 

Next Story

துணை ராணுவப்படையினரின் வாகனம் விபத்து; கால் துண்டான நிலையில் வீரர்களுக்கு சிகிச்சை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Accident involving paramilitary personnel on the national highway

ஆவடி துணை ராணுவப் பயிற்சி மையத்தை சேர்ந்த 71 துணை ராணுவ வீரர்கள் (சி.ஆர்.பி.எப்) கர்நாடக மாநிலம்  ஷிமோகாவில்  பயிற்சி முடித்து விட்டு மீண்டும் நேற்று 5  இராணுவ வாகனத்தில் ஆவடி பயிற்சி மையத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம்  பகுதியில் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துணை இராணுவ வீரர்கள் ஓட்டி வந்த வாகனம், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 சி.ஆர்.பி.எப் வீரர்கள் படுகாயமடைந்தனர். மேலும் வாகனத்தை ஓட்டிச்சென்ற ரிஜோ மற்றும் சின்னதுரையின் கால் வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கி துண்டானது.

Accident involving paramilitary personnel on the national highway

அதனை தொடர்ந்து நீண்ட நேர போரட்டத்திற்கு பிறகு இருவரையும் லாரியின் இடிபாடுகளிலிருந்து சக வீரர்கள் மற்றும் பொதுமக்கள்  மீட்டு அவர்களை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு தலைமை காவலர் ராமசந்திரன் மற்றும் காவலர் வல்லவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து காரணமாக பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

திருச்சியில் 4 இடங்களில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Rs 9 lakh confiscated at 4 places in Trichy

தமிழகத்தில் அடுத்த மாதம் 19-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க திருச்சி மாவட்டத்தில் 81 பறக்கும் படைகள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர நிலையான கண்காணிப்பு குழுவும் 14 சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11.45 மணியளவில் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பெரமங்கலம் பஸ் நிறுத்தத்தில் பறக்கும் படை அதிகாரி வினோத் குமார் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில் ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் சிக்கியது. கீரிப்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்த தொகையை எடுத்து சென்றுள்ளார். அதைத்தொடர்ந்து கைப்பற்றப்பட்ட ரூ. 3 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் மணச்சநல்லூர் தாசில்தாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதேபோன்று மன்னார்புரம் பஸ் நிறுத்தத்தில் ஒருவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் பணமானது பறக்கும் படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு திருச்சி மேற்கு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் கத்தரிக்காய் சாலையில் பிரபு தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டை திருமயம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் லால்குடியில் இருந்து குமுலூர் நோக்கி தனது காரில் 50 ஆயிரத்து 500 பணத்தினை உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற போது பிடித்தனர். அதனைத் தொடர்ந்து லால்குடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ சிவசுப்பிரமணியன் தாசில்தார் முருகன், தேர்தல் துணை வட்டாட்சியர் கார்த்திகேயன் ஆகியோரிடம் பறக்கும் படைத்தலைவர் பிரபு ஒப்படைத்தார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் வெங்கங்குடி பேருந்து நிறுத்தம் அருகே, காரில் சாக்லேட் மற்றும் குளிர்பானங்கள் மொத்த விற்பனை செய்யும், மண்ணச்சநல்லூர் ராஜாஜி நகரை சேர்ந்த மூக்கன் (வயது 48) என்பவரிடமிருந்து 4,50,000 ரூபாய் ஆவணங்கள் இல்லாத ரொக்கப் பணத்தை பறக்கும் படை அதிகாரி சித்ராதேவி தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.