Skip to main content

அன்று குளம் மீட்பு... இன்று பனைத்திருவிழா... சொந்த செலவில் அசத்தும் கிராம இளைஞர்கள்!

Published on 04/12/2020 | Edited on 06/07/2021

 

youth

 

 

அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின் என்கிறார் வள்ளுவர். ‘தக்க தருணம் அறிந்து ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயலென்று ஏதும் உண்டா' என்பது இதற்கான விளக்கம். இக்குறளுக்கான ஆகச்சிறந்த உதாரணமாக விளங்குகிறது இந்த இளைஞர்படையும் அவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டு வரும் இந்த ஊரின் மூத்தோர்படையும்.

 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் பிள்ளையார்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது நூர்சாகிபுரம் என்ற குக்கிராமம். இக்கிராமத்தில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. சமூக வலைதளமான வாட்ஸ்அப் வாயிலாக இரண்டரை ஆண்டுகளுக்கு முன் இந்த ஊர் இளைஞர்களால் துவங்கப்பட்ட 'தூய்மை நூர்சாகிபுரம்' என்ற குழு மரம் நடுதல், குளம் குட்டைகளைத் தூர்வாருதல், கிணற்றைச் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் முழுவீச்சுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது பனை விதைப்புத்திருவிழா என்ற ஒரு நிகழ்வை நடத்த இருப்பதாக நமக்குத் தகவல் கிடைத்தது. அந்த ஊரை நோக்கி ஒரு விசிட் அடித்தோம்.

 

அடுத்த சில ஆண்டுகளில் பெருமரமாக எழுந்து நிற்கக்கூடிய செடிகளை வழியெங்கும் ஆங்காங்கே காணமுடிந்தது. ஊருக்குள் நுழைந்ததும் வருவோரை வரவேற்கும் விதமாக காமராஜர் சிலை ஒன்று இருந்தது. அதைத் தாண்டி பயணப்பட்டு பனை விதைப்புத்திருவிழா நடைபெறும் இடத்தை வந்தடைந்தோம்.

 

 

village

 

 

கடப்பாரை, மண்வெட்டிகளைச் சுமந்துகொண்டு இளைஞர்கள் நடைப்பயணமாகவும், பனை விதைகளை மூட்டை கட்டி எடுத்துக்கொண்டு சிறுவர்கள் சைக்கிள் பயணமாகவும் உற்சாகமாகப் புறப்பட்டார்கள். கண்மாய் கரைகள், சாலையோரங்கள் எனப் பரவலாக விதைக்க ஆரம்பித்தார்கள். புதர் மண்டிக்கிடந்த கரையோரங்களில் சில சிறுவர்கள் சிறிதும் பயமின்றி இறங்கியேறினார்கள். இடையிடையே தேநீரும், தின்பண்டங்களும் அவர்களுக்குள் பரிமாறிக்கொண்டதைப் பார்க்க முடிந்தது. மொத்தம் நான்கு நாட்கள் நடந்த நிகழ்வில் ஆயிரம் பனைவிதைகள் விதைக்கப்பட்டன.   

 

அந்த ஊரின் இந்து தொடக்கப் பள்ளி ஆசிரியரான ஜஸ்டின் தங்கராஜன் இது குறித்து நம்மிடம் பேசுகையில். "பனைமரம் என்பது தமிழர்களின் பாரம்பரியத்தோடு தொடர்புடையது. ஆனால், இன்று அவை அழிவின் விளிம்பில் உள்ளன. இதை மீட்டெடுக்க நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டோம். கடந்த முறை எந்த மெனக்கெடலும் இல்லாமல் நண்பர் ஒருவர் மூலமாக கிடைத்த பனைவிதைகளை விதைத்தோம். அதில் கிட்டத்தட்ட 30 விதைகள் துளிர்விட்டுள்ளன. அது எங்களுக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தது. அதைப் பார்க்கும் போது எங்கள் ஊரில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமானதைப்போல உணர்கிறோம். ஆகையால், முறையாகத் திட்டமிட்டு இதை ஒரு நிகழ்வாக நடத்த இம்முறை முடிவெடுத்தோம். எங்கள் ஊரைச் சேர்ந்த து.அர்ஜுனன் என்பவர் ஆயிரம் விதைகளை எங்கள் குழுவிற்கு நன்கொடையாக வழங்கினார். அப்படித்தான் இந்த நிகழ்வு தொடங்கியது" என்கிறார்.

 

 

palm
                                                   துளிர்விட்டுள்ள பனை 

 

பொதுவாக மரம் நடும் விழாக்கள் பலவற்றை நாம் பார்த்திருப்போம். சாலை ஓரங்களில் நட்டு அதற்கு வேலி அமைப்பார்கள். அதன்பிறகு அது கவனிப்பற்றுக் காய்ந்துவிடும். சாதாரண என்ஜிஓ-க்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்களின் பிறந்தநாளுக்காக நடத்தப்படும் விழாக்கள் வரை இதுதான் யதார்த்தம். ஆனால், இவையனைத்தில் இருந்தும் இந்த இளைஞர்கள் குழு வேறுபட்டு நிற்கிறது. சாலை ஓரங்களில் விதைக்கப்பட்ட விதைகள், சாலையிலிருந்து 6 முதல் 7 அடி தள்ளியே விதைக்கப்பட்டன.

 

இது குறித்து நாம் கேட்ட போது, "எதிர்காலத்தில் காலத்தின் கட்டாயமாக சாலை விரிவாக்கம் செய்யப்பட வேண்டிவரும். நாங்கள் இன்று மரம் நடுவதே எங்கள் எதிர்காலச் சந்ததியினருக்குப் பயன்படவேண்டும் என்றுதான். ஆகையால், சாலையிலிருந்து சற்று தள்ளியே விதைக்கிறோம். அடுத்து வரும் தலைமுறைகளின் காலத்தில் இவையனைத்தும் சாலையையொட்டிய மரங்களாக ஓங்கி உயர்ந்து நிற்கும்" எனத் தொலைநோக்கோடு விளக்குகிறார் ஜஸ்டின் தங்கராஜன்.

 

நான்கு நாட்கள் நிகழ்வின்போது, ஒவ்வொரு நாளும் வேறுவேறு இளைஞர்கள், பெரியவர்கள், சிறுவர்களைப் பார்க்க முடிந்தது. மேலும், நிகழ்வு நடந்து கொண்டிருந்த போதே ஒருவர் 'அண்ணா.. எனக்கு ஆன்லைன் கிளாசுக்கு டைம் ஆச்சு...' என விடைபெற்றுச் சென்றார். இது குறித்து நாம் கேட்டதற்கு, "இன்று ஒருவர் வந்து வேலை செய்வார். மறுநாள் அவருக்கு வேறு ஏதாவது வேலை இருக்கும். அதனால் அவரால் வர முடியாது. இவர்தான் பங்கெடுத்தார், இவர் பங்கெடுக்கவில்லை என்று நாம் கூற முடியாத அளவிற்கு அனைவருமே தங்கள் பங்களிப்பை அளித்துவிடுவார்கள்" என்கிறார் இயற்கை ஆர்வலரும் ஆட்டோ ஓட்டுநருமான அய்யம்பெருமாள்.

 

மேலும், சிறுவர்கள் உற்சாகமாகப் பங்கெடுப்பது குறித்து அவரிடம் கேட்கையில், "பொதுவாக பனையிலிருந்து முழுமையான பலனை அனுபவிக்க 3 தலைமுறைகள் காத்திருக்க வேண்டும். இன்று நாம் நடும் விதைகள் மூலம் நமக்கு எந்தப் பயனும் கிடைக்காது என்பது இந்தச் சிறுவர்களுக்கும் தெரியும். எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் நாம் உழைக்க வேண்டும் என்று அவர்களுக்கு வழிகாட்டியுள்ளோம். அவர்களும் இதில் உற்சாகமாகப் பங்கெடுக்கிறார்கள். இந்த முறை விதைப்பின் போது முதல்முறையாக நம் மாநில மலரான செங்காந்தள் மலர் எங்கள் ஊரில் பூத்திருப்பதைப் பார்த்தோம். அது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது. ஒவ்வொரு முறையும் இது போன்று கிடைக்கும் அனுபவமும், மகிழ்ச்சியும்தான் அடுத்த முறை அனைவரையும் ஆர்வமுடன் பங்கெடுக்க வைக்கிறது. பனை மட்டுமல்ல நிறைய மரம் வகைகள் நட்டுள்ளோம். குறிப்பாக பறவைகள் தங்களின் புகலிடத்திற்கு விருப்பமான தேர்வாகக் கருதும் மகிழம், இலுப்பை, குதிரைப்பிடுக்கன் போன்ற நம் மண்ணிற்குரிய மரங்களையும் நட்டுவருகிறோம். அவையெல்லாம் பெரிய மரமாகும்போது இந்தப் பகுதி பறவைகள் நிறைந்த பகுதியாக இருக்கும். எங்கள் ஊர் கிராமம் என்பதால் ஆடுமாடுகள் நிறைய உள்ளன. அவை செடிகளைக் கடித்துவிடாமல் இருக்க குழந்தையைப் பாதுகாப்பதுபோல பாதுகாத்து வருவோம். நாங்கள் நட்ட செடிகளில் சில செடிகள் கொஞ்சம் பெரிதாக வளர்ந்துள்ளன. அதைப் பார்க்கும் போது நம்மால் நடப்பட்ட மரம் என்று கொஞ்சம் பெருமையாகவும் இருக்கிறது என உணர்வுப்பூர்வமாகவும், பல்லுயிர்ப்பெருக்கம் சார்ந்த சூழலியல் கருத்து வீச்சோடு விவரித்தார்.

 

இயற்கை சார்ந்த பல்வேறு பணிகளில் ஈடுபடுகிறார்களே, இதை எப்படித் தங்களுக்குள் திட்டமிட்டு செயல்படுத்துகிறார்கள் என நமக்குள் எழுந்த கேள்விக்கு, "இதில் திட்டமிட என்ன இருக்கிறது. மழைக்காலம் ஆரம்பிக்கும் முன் ஓடைகளின் வாய்க்கால்களைச் சீர் செய்தல், தூர்வாருதல் போன்ற பணிகளில் ஈடுபடுவோம். பருவமழை ஆரம்பித்த பின் தோண்டுவதற்கு எளிமையாகத் தரை இருக்கும். அப்போது மரம் நடுதல் போன்ற பணிகளில் ஈடுபடுவோம். அந்த நேரத்திற்கேற்ற சூழல்படி அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதுதான்" என இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட திருக்குறளுக்கு வலுசேர்க்கும் விதமாகப் பதிலளித்தார் பஞ்சாலைத் தொழிலாளியும், இயற்கை ஆர்வலருமான தீ.ராஜா.

 

'பூமி என்பது கடந்த தலைமுறை நமக்கு அளித்த சொத்து அல்ல, அது எதிர்காலத் தலைமுறையிடம் இருந்து நாம் பெற்ற கடன்' என்பதை நன்குணர்ந்து அவர்களுக்கு வட்டியும் முதலுமாக அதைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற முனைப்போடு களப்பணியாற்றி வரும் இந்த இளைஞர்படையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

 

 

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.