Skip to main content

திமுகவுக்கு கடிவாளம்? மோடியின் மாஸ்டர் ப்ளான்! - ஆளுநர் நியமனமும் அதிரடி பின்னணியும்!

Published on 11/09/2021 | Edited on 11/09/2021

 

Modi's plan for dmk.. History of TamilNadu new Governor RN Ravi

 

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், தற்போது பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வந்துசேரும் முன்னரே அவரைப் பற்றிய சர்ச்சைகள் தமிழ்நாடு வந்தடைந்து விட்டன.


ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி எனும் ஆர்.என்.ரவி பிஹார் தலைநகரான பாட்னாவில் கடந்த 1952-ம் ஆண்டில் பிறந்தவர். இவருக்கு லக்ஷ்மி எனும் மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கின்றனர். இயற்பியல் துறையில் பட்டமேற்படிப்பை முடித்த ரவி, பத்திரிகை துறையில் பணியாற்ற வேண்டும் என விரும்பினார். சில காலம், பத்திரிகையாளராக இருந்த ரவிக்கு, 1976-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாகும் வாய்ப்பு கதவைத் தட்டியது. அதையடுத்து, கேரள பேட்சில் ஐபிஎஸ் ஆகப் பணியாற்றிய ரவி, சுமார் பத்தாண்டுக்காலம் அங்கு பணியாற்றினார். அதனால், கேரள அரசியலின் ஆழ அகலத்தை அளந்தவர், அண்டை மாநிலமான தமிழகத்தின் தட்பவெப்பத்தையும் உள்வாங்கிக் கொண்டார். அதைப்போல, இந்தியாவின் பல மாநிலங்களிலும் பணியாற்றியுள்ளார்.

 

Modi's plan for dmk.. History of TamilNadu new Governor RN Ravi


ஆர்.என்.ரவியின் திறமையைக் கண்டுணர்ந்த மத்திய அரசு, அவரை சிபிஐ அதிகாரியாகப் பணியில் அமர்த்தியது. சில காலத்திலேயே உளவுத்துறைக்குப் பணிமாற்றம் பெற்றார். இந்த காலகட்டத்தில், வடகிழக்குப் பகுதிகளில் இயங்கிவந்த தீவிரவாதக் குழுக்களை ஒடுக்கும் பணியில் சிறப்பாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இது போன்ற பல குறிப்பிடத்தக்கச் செயல்களால், உளவுத்துறை கூடுதல் இயக்குநராகப் பணிஉயர்வுப் பெற்றார். பிறகு, 2012-ம் ஆண்டு இப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற ரவிக்கு 2014-ல் புதிய பொறுப்பு ஒன்று தேடிவந்தது. உபயம் பிரதமர் நரேந்திர மோடி.


ஆம், பிரதமராக மோடி பொறுப்பேற்றுக் கொண்டதும் நம்பிக்கைக்குரிய தளபதியாக அஜித் தோவலை தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக பணியில் அமர்த்தினார். ரவிக்கு ஏற்கனவே அறிமுகமான அஜித் தோவல், இப்போது ரவியைக் கூப்பிட்டுப் பேசினார். விளைவு, பிரதமர் அலுவலக கூட்டுக் குழுவின் தலைவரானார் ஆர்.என்.ரவி. அப்போது கொழுந்துவிட்டு எறிந்த நாகலாந்து பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு ரவியை நாகாலாந்து அனுப்பிவைக்க முடிவெடுத்தது மோடி அரசு. கடந்த, 2014 ஆகஸ்ட் 29-ம் தேதி, நாகாலாந்து கிளர்ச்சிக் குழுக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் இந்திய அரசின் சிறப்புப் பிரதிநிதியாக ஆர் என் ரவி நியமிக்கப்பட்டார்.

 

Modi's plan for dmk.. History of TamilNadu new Governor RN Ravi

 

இதுவரை சுமுகமாகச் சென்றுகொண்டிருந்த ரவியின் கிராஃபில், இப்போதுதான் சர்ச்சைகள் சூழத்தொடங்கியது. வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர் போன்ற பகுதிகளில் வாழும் 'நாகா' இன மக்களை ஒன்றுதிரட்டித் தனி நாடாக உருவாக்க வேண்டும் எனும் கோரிக்கை அம்மக்கள் மத்தியில் மிக நீண்ட நாட்களாக இருந்துவருகிறது. இதனால், அப்பகுதியில் பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. ஆயுதம் தாங்கி நடமாடி வரும் இவர்கள், தனி அரசாங்கமே நடத்தி வருகின்றன. இதனால், போராட்டக் குழுக்களுடன் இந்திய அரசு மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்தது. பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இருதரப்புக்கும் மத்தியில் 1997-ம் ஆண்டு சண்டை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. ஆனால், பல குழுக்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. ஆனாலும், நாகாலாந்தில் மட்டும் தனிநாடு கோரிக்கை உயிர்ப்புடன் இருந்துவருகிறது. இது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்துவந்தது.


இந்த நிலையில்தான், ஆர். என். ரவி சிறப்புப் பிரதிநிதியாக நாகாலாந்து செல்கிறார். நாகா இன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய போராட்டக் குழுவான தேசிய சோஷலிஸ்ட் கவுன்சிலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். விளைவாக, பிரதமர் மோடியின் இல்லத்தில், 2015-ம் ஆண்டு இருதரப்பு ஒப்புதலுடன் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம், அரசாங்கத்தின் தலைவலிக்கு 'சண்டுபாம்' தடவும் என எதிர்பார்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2018-ல் தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகர் பதவியும், 2019-ல் நாகலாந்து மாநில ஆளுநர் பதவியும் ஆர்.என்.ரவி வசம் வந்துசேர்ந்தது. ஆனாலும், அதன் பிறகும் நாகா குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அரசின் பிரதிநிதியாக அவரே இருந்து வந்தார். இந்த நிலையில்தான், "நாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் நிறைய மாற்றங்களை ரவி செய்துவிட்டார். அவர் காட்டும் ஒப்பந்தம் போலியானது. அவரை பேச்சுவார்த்தை குழுவில் இருந்து அகற்ற வேண்டும்" எனக் கோரியது தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில். 

 

Modi's plan for dmk.. History of TamilNadu new Governor RN Ravi


இதனால், அதிருப்தியடைந்த ஆளுநர் ரவி, "நாகாலாந்தில் ஆயுதக் குழுக்களின் கொட்டம் அதிகரித்துவிட்டது. அவர்கள் மறைமுக அரசாங்கமே நடத்திவருகின்றனர். இனி, ஆளுநராகிய என்னைக் கேட்காமல் எந்த அதிகாரியையும் ட்ரான்ஸ்ஃபர் செய்யக்கூடாது" எனக் கூறினார். இதனால், பாஜக வுடன் கூட்டணியில் இருந்த அம்மாநில அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, ஆளுநர் ரவியைச் சந்தித்த நாகாலாந்து முதல்வர் நெஃபியூ ரியோ, இது உண்மையல்ல என விளக்கம் கொடுத்தார். கிளர்ச்சிக் குழுக்களுடன் ஏற்பட்ட மோதலால், இதுவரை ஒப்பந்தத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தேங்கிக் கிடக்கிறது. போராட்டக் குழுக்களின் மீதான இந்தத் திடீர் விமர்சனத்தால் ரவியை முக்கியப் போராட்டக் குழுக்களும் புறக்கணித்தன. அவர், மத்தியஸ்தராக இருக்கும் வரை பேச்சுவார்த்தைக்கு வரமாட்டோம் என முரண்டு பிடித்தன.


இன்னொரு பக்கம், மத்திய அரசு சார்பில், நாகாலாந்து அரசுக்கு ஒதுக்கப்பட்ட டெல்லி பங்களாவை காலி செய்யாமல் இழுத்தடித்து வந்ததாக ஆர் என் ரவி மீது காத்திரமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பிரதமர் அலுவலகக் கூட்டுக் குழுவின் தலைவரான போது, அவருக்கு டெல்லியில் உள்ள 'டோனி நியூ மோதி பேக்' குடியிருப்பு வளாகத்தில், அரசு சார்பில் வீடு ஒதுக்கப்பட்டது. ரவி, கடந்த 2018-ம் ஆண்டு, புலனாய்வுத் துறையில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு இந்த இடத்தைக் காலி செய்யுமாறு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படுள்ளது. ஆனால், அதைப் பெரிதாகப் பொருட்படுத்தாத ரவி, தொடர்ந்து அதே பங்களாவில் வசிக்க அனுமதி கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். நாகலாந்து ஆளுநரகாப் பொறுப்பேற்ற பிறகும் கூட இந்த இல்லத்தை அவர் காலி செய்யவில்லை. நாகாலாந்து மாநில ஆளுநருக்கு என துக்ளக் சாலையில் தனியாக வீடு ஒதுக்கப்பட்டும் அவர் இந்த பங்களாவை காலி செய்ய மறுத்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.

 

Modi's plan for dmk.. History of TamilNadu new Governor RN Ravi


ஆர்.என். ரவி பங்களாவுக்கு இன்னும் கிட்டத்தட்ட 64 லட்சம் வாடகைப் பணம் செலுத்தவில்லை. இதனால், அரசுக்குச் சொந்தமான இடத்தில் வசிக்கும், அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் சட்டம், 1971 இன் கீழ் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, விசாரணைக்காக எஸ்டேட்ஸ் இயக்குநரகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தில் ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியானது. போராட்டக் குழுக்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் குளறுபடி, அரசு பங்களாவை காலி செய்வதில் இழுபறி, கூட்டணிக் கட்சிகளுடனேயே மோதல் எனப் பல சர்ச்சைகளில் பேசப்படுகிறார் ஆர்.என்.ரவி. 


இந்த நிலையில், தமிழக ஆளுநராக ரவியை நியமித்ததன் மூலம், நாகலாந்து பிரச்சனையில் சுமுகத் தீர்வு காணவும் தமிழக ஆளுங்கட்சியான திமுகவை கட்டுக்குள் கொண்டுவரவும், மோடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிகின்றன. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்க்குக் குறிவைக்கும் மோடியின் திட்டம் பலிக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

 


 

Next Story

“பெண்கள் தாலியை இழக்க நேரிடும்” - சித்தராமையா மகன் பரபரப்பு கருத்து

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Siddaramaiah son If BJP comes to power, women will lose their thali

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் தேர்தல் பரப்புரையில் பேசியது தற்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

Siddaramaiah son If BJP comes to power, women will lose their thali

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தை கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார்.

இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. ஆனால், பாஜக ஆதரவாளர்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பேசிய பழைய வீடியோ ஒன்றை கட் செய்து சமூக வலைத்தளங்களில் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் தங்கள் தாலியை இழக்க நேரிடும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் மகனுமான யதீந்திரா சித்தராமையா பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

Siddaramaiah son If BJP comes to power, women will lose their thali

கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் மகனும், கர்நாடகா எம்.எல்.ஏவுமான யதீந்திரா நேற்று (22-04-24) மைசூரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “பிரதமர் மோடி ராஜஸ்தானில் இஸ்லாமியர்கள் குறித்து மிகவும் இழிவாக பேசியுள்ளார். மத உணர்வைகளை தூண்டும் வகையில் பேசியிருக்கிறார். தேர்தல் ஆணையம் ஏன் கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கிறது என்று தெரியவில்லை. 70 ஆண்டுகளாக பல்வேறு கட்சிகள் ஆட்சி செய்துள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் எந்த ஒரு இந்துக்களுக்கும் அநீதி ஏற்படவில்லை.

பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்துப் பெண்கள் தங்களது தாலியை இழப்பது மட்டுமல்லாமல், அனைத்து தாய்மார்களும் தங்கள் கணவனை இழக்க நேரிடும். பெண்கள் எந்த மதத்தையும் பொருட்படுத்தாமல் கணவன் மற்றும் குழந்தைகளை இழக்க நேரிடும். பா.ஜ.க நாட்டில் வகுப்புவாத வன்முறையை உருவாக்குகிறது. அவர்கள் மக்களை மத அடிப்படையில் போராட வைக்கிறார்கள். போராடுவதன் மூலம் மக்கள் தங்கள் உயிரை இழக்கிறார்கள். அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களைப் பெற்று, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தவில்லை.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.