Skip to main content

இயற்கையைப் பாதுகாக்கும் இயற்கை வழிபாட்டு கோவில் காப்புக்காடுகள்!

Published on 04/08/2020 | Edited on 04/08/2020

 

Kapukadu

 

தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் இயற்கை சூழலைப் பாதுகாக்கும் சூழலியல் மண்டலங்களாக இயற்கை வழிபாட்டு கோவில் காப்புக்காடுகள் பல அமைந்துள்ளன.

 

மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை ஏரி, குளம், கண்மாய், ஏந்தல் என பலவற்றை வெட்டி அதில் தேக்கி வைத்தனர் நம் முன்னோர்கள். மாதம் மும்மாரி மழை பொழிய ஊர் தோறும் கோவில்களையும், அவற்ற சுற்றி காடுகளையும், தமிழர்கள் உருவாக்கி வைத்தனர். இதனால் கோவில்களும், வழிபாடுகளும், காடுகளும், நீர்ப்பாசனமும் இயற்கை சார்ந்ததாகவும், அதை பாதுகாப்பதாகவும் இருந்தன. மருத்துவக் குணமுள்ள பல மூலிகை தாவரங்களைப் பெருக்கவும், இயற்கை சூழலைப் பாதுகாக்கவும் தமிழர்கள் பழங்காலக் கோவில்களைச் சுற்றி காடுகளை உருவாக்கினர். இத்தகைய காடுகள் காப்புக்காடுகள் எனப்படுகின்றன.

 

Kapukadu

 

அடர்ந்த காட்டுப்பகுதியில் மரங்களின் கீழ் உருவாக்கப்பட்ட தமிழர்களின் ஆதி ஆலயங்கள், பின் மண் தளிகளாகவும், செங்கல் தளிகளாகவும், குடைவரை கோவில்களாகவும், கற்றளிகளாகவும் காலத்துக்கு ஏற்ப உருமாற்றம் பெற்றன.

 

இதுபற்றி தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழக தொல்லியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது, தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில் காடுகள் அவ்வூர்களின் இயற்கையைப் பாதுகாக்கும் சூழியல் மண்டலங்களாகவே உருவாக்கப்பட்டன. இக்காடுகள் பருவமழையை வரவழைத்தல், மருத்துவ மூலிகைகள் தருதல், பறவைகள், விலங்குகளின் வாழ்விடம் என பலவித பயன்பாடுகளை நமக்கு வழங்குகின்றன. இக்கோவில் காடுகளில் உள்ள மரங்களை மக்கள் புனிதமாக கருதுவதால், அவற்றை கோவில் பணிகளுக்காக கூட வெட்டுவதில்லை. பல இடங்களில் இதை ஊர்க் கட்டுப்பாடாகவே பின்பற்றுகிறார்கள். கோவிலில் பொங்கல் வைக்க, தானாக உடைந்து விழும் குச்சிகளையே பயன்படுத்துகின்றனர். இவை இயற்கையைப் பாதுகாக்க நம் முன்னோர்கள் உருவாக்கிய வழிமுறைகள் ஆகும்.

 

ஐயனார், காளி ஆகிய தெய்வங்களுக்குரிய கோவில்கள், மரங்கள் சூழ்ந்த காப்பு காடுகள் கொண்டதாகவே இன்றும் இருக்கின்றன. மேலும் பெரிய கோவில்களில் நந்தவனம் என்ற பெயரிலும் மரங்கள் நிறைந்த காடுகள் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக பெருங்கோவில்களில் தலவிருட்சமாக மரங்கள் வளர்க்கும் வழக்கமும் வந்திருக்கிறது. கேரளாவில் பல சாஸ்தா மற்றும் காளி கோவில்கள் காப்பு காடுகளால் உருவாகியுள்ளன.

 

இத்தகைய கோவில்கள் காவு எனப்படுகின்றன. கா, காவு என்ற சொல்லுக்கு சோலை என்பது பொருள். காவுக்கோவில் அமைந்த பகுதிகளில் உருவான ஊர்களும் கோவில் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. இப்போதும் அங்கு பழமை மாறாமல் இக்காடுகளும், அவற்றின் மூலிகைகளும் பாதுகாக்கப்படுகின்றன.

 

Kaapukadu

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல கிராமக்கோவில்கள், முக்கியமாக ஐயனார், காளி கோவில்கள், உகாய், ஆதண்டை, ஆத்தி, மணிபூவந்தி, தாழை, நாட்டுவீழி, சங்கஞ்செடி உள்ளிட்ட பல மூலிகை தாவரங்கள் சூழ்ந்து காணப்படுகின்றன. சில ஐயனார் கோவில்களில் உள்ள மூலிகைகள் மருந்தாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பார்த்திபனூர் அருகில் கீழ்ப்பெருங்கரை ஐயனார் கோவில், நரிப்பையூர் செவக்காட்டு ஐயனார் கோவில், போகலூர் முல்லைக்கோட்டை முனீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் 20க்கும் மேற்பட்ட மிஸ்வாக் எனப்படும் உகாய் மரங்கள் கோவிலைச் சுற்றி காவல் நிற்கின்றன. ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியான மாவட்டம் என அழைக்கப்பட்டாலும் பல அரியவகை மரங்கள் இங்கு செழித்து வளர்ந்து வருவதை இன்றும் பல கிராமக் கோவில்களில் காணமுடிகிறது.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் காடுகள் சூழ்ந்த ஆலயங்களை கொம்படி ஆலயங்கள் என அழைப்பதாகக்கூறிய தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டன் மேலும் கூறியதாவது, கந்தர்வக்கோட்டை ஒன்றியம் மங்கனூர், நத்தமாடிப்பட்டி கிராம எல்லையில் உள்ள வீசிக்காடு, கீழவாண்டான்விடுதி சிவனார் திடல், குன்றாண்டார்கோவில் ஒன்றியம் பெரம்பூர் வாட்டாருடையார் கோவில், வளத்தாரப்பன் கோவில் சிட்டை, அன்னவாசல் ஒன்றியத்திலுள்ள வெள்ளாஞ்சாறு புலிக்குத்தி அய்யனார் கோவில் காடு, திருமயம் ஒன்றியத்திலுள்ள மலையடிப்பட்டி கிராமத்திலுள்ள குருந்தடி அய்யனார் பாதுகாக்கப்பட்ட‌ வனப்பகுதி, மல்லாங்குடி பிடாரி அய்யனார் கோவில் காடு, திருவரங்குளம் ஒன்றியம் நெமக்கோட்டை கோவில் காடு, செரியலூா் கிராமத்தில் ராக்காச்சி அம்மன் கோயில் காடுகள், ஆலடியான்கோயில் காடுகள், கருப்பாயி அம்மன்கோயில் காடுகள், நெடுவாசல் கிராமத்தில் வவ்வால்களின் சரணாலயமாக திகழும் வெள்ளைச்சாமி கோயில் காடு, கீரமங்கலம் கூத்தப்பெருமாள் கோயில் காடு என இம்மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான கோவில் காடுகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு குருந்தமரம், வெப்பாலை, உசிலை, வீரமரம், நெய்க்கொட்டான், வெள்வேலம், காட்டத்தி, கிளுவை உள்ளிட்ட பல்வேறு மர வகைகள் இக்காடுகள் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

 

இலங்கை கதிர்காமம் முருகன் கோயில் அருகிலுள்ள யாளக்காட்டில் ஆயிரக்கணக்கான உகாய் மரங்கள் வளர்ந்துள்ளதாக தெரிவித்த இலங்கை வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம் மேலும் கூறியதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தில் மாமங்க ஈஸ்வரம், மண்டூர் கந்தசுவாமி கோயில், செட்டிபாளையம் கண்ணகி அம்மன் கோயில், களுதாவளை பிள்ளையார் கோயில், கோராவெளி அம்மன் கோயில் ஆகியவையும், அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு திரௌபதி அம்மன் கோயில், மடத்தடி மீனாட்சி அம்மன் கோயில், உகந்தை முருகன் கோயில், தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோயில் ஆகியவையும், திருகோணமலை மாவட்டத்தில் சேனையூர் நாகதம்பிரான் கோயில், கட்டைபறிச்சான் அம்மச்சி அம்மன் கோயில், பறையான்குளம் எல்லைக்காளி அம்மன் கோயில் ஆகியவையும் வடமாகாணத்தில் நகுலேஸ்வரம், செல்வச் சந்நிதி முருகன் கோயில் ஆகியவையும், கேகாலை மாவட்டத்தில் அம்பன்பிட்டிய கந்தசுவாமி கோயில் ஆகியவையும் சோலைகளின் மத்தியில் அமைந்துள்ள முக்கியக் கோயில்களாகும். இங்கு மருதமரம், மாமரம், தென்னைமரம், வேப்பமரம், பனைமரம் ஆகிய மரங்கள் வளர்ந்துள்ளன.

 

இத்தகைய கோவில் காப்புக்காடுகளை மக்கள் அனைத்து கோவில்களிலும் வளர்த்து இயற்கையை பாதுகாத்து மழைவளம் பெறலாமே!

 

 

Next Story

“தொல்லியல் துறை, அரசியல் துறையல்ல...” - மத்திய அரசுக்கு கலை இலக்கிய பெருமன்றம் கண்டனம்

Published on 26/10/2023 | Edited on 26/10/2023

 

Council of Arts and Literature condemns the central government

 

மத்தியில் ஆளும் ஒன்றிய பாஜக அரசு தொல்லியல் அதிகாரி அமர்நாத்தை தீடிரென இடமாற்றம் செய்துள்ளது அதை உடனடியாக ரத்து செய்யவேண்டுமென கோரிக்கை வைத்துள்ள தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மோடி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

இது சம்பந்தமாக கலை இலக்கிய பெருமன்றத்தின் செயலாளர் மருத்துவர் த. அறம், தலைவர் எஸ்.கே. கங்கா, பொருளாளர் ப.பா.ரமணி ஆகியோர் விடுத்துள்ள கூட்ட அறிக்கையை பொதுச்செயலாளர் த. அறம் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது. “மத்தியத் தொல்லியல் துறையின் தென்மண்டல ஆலயப் பாதுகாப்பு அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் பதவிக்காலம் முடியும் முன்பே டெல்லிக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். பொதுவாக தொல்லியல் துறையில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பணியிட இட மாறுதல் செய்யப்படும். ஆனால், இரண்டு ஆண்டுகள் முடியும் முன்பே அமர்நாத் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. ஏனெனில், இந்த அதிரடி இட மாற்றத்திற்கான எந்தக் காரணத்தையும் தொல்லியல் துறை தெரிவிக்கவில்லை. 

 

2015ல் மத்தியத் தொல்லியல் துறையின் தென் மண்டல அகழாய்வுப் பிரிவுக் கண்காணிப்பாளராக இருந்தபோது அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாய்வுக்கான அனுமதியை வழங்கினார். இந்தக் கீழடி ஆய்வு இந்தியத் தொல்லியல் துறை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது என்பதை உலகமே நன்கறியும். இந்த ஆய்வின் மூலம் 2600 ஆண்டுகளுக்கு முன்பே ஓர் அற்புதமான நகர நாகரிகம் கீழடியில் தழைத்தோங்கி இருந்திருக்கிறது என்ற பேருண்மை உலகிற்கு வெளிச்சமாகியது.

 

மத்திய தொல்லியல் துறையில் ஒரு அகழ்வாராய்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது, அது நிறைவுறும் முன்பே, அதன் பொறுப்பு அதிகாரியை மாற்றுவது மரபு இல்லை. இந்த மரபை மீறி, கீழடி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த காரணத்தாலேயே, அந்த அகழ்வாய்வுப் பணி நடந்து கொண்டிருக்கும் போதே, அவசரகதியில் அமர்நாத் அசாம் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்பதும், கீழடி ஆய்வுப் பணிகள் முடக்கப்பட்டன என்பதும் நாடறிந்த உண்மை.  பல்வேறு போராட்டங்களுக்குப் பின்தான் மீண்டும் கீழடி அகழ்வாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன என்பதும், கீழடி ஆய்வு அறிக்கை நீதிமன்ற உத்தரவின் பிறகே வெளியிடப்பட்டது என்பதும் நாம் அறிந்ததே. எனவே கீழடி ஆய்வில் ஒன்றிய அரசு பாரபட்சமான அணுகுமுறையை கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.

 

2021 அக்டோபரில் சென்னையில் உள்ள மத்தியத் தொல்லியல் துறையின் ஆலயப் பாதுகாப்புக் கண்காணிப்பாளர் பணி இடமாற்றம் செய்யப்பட்ட அமர்நாத் கீழடி அகழ்வாய்வு குறித்த அறிக்கையைத் தயாரித்து மத்தியத் தொல்லியல் துறைக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்கினார். வழக்கம் போலவே மத்தியத் தொல்லியல் துறை அந்த அறிக்கையைக் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களில் உள்ள கல்வெட்டுகள், சிலைகள், கட்டிடக்கலை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து உண்மையான வரலாற்றை வெளியிடும் வகையில் ஆய்வு நடத்துவதற்கான அனுமதியை தமிழக அரசிடம் அமர்நாத் கோரி இருந்தார். 

 

தமிழக இந்து சமய அறநிலைத்துறை இம்மாதம் 6 ஆம் தேதி பல்வேறு நிபந்தனைகளுடன் பிராதனக் கோயில்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் பணிக்கு அனுமதி அளித்தது. இவ்வாறு கீழடி ஆய்விலும், தமிழ்நாட்டு கோவில்களின் வரலாற்றை ஆவணப்படுத்துவதிலும் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்த அதிகாரியான அமர்நாத் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது ஒன்றிய அரசின் உள்நோக்கத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறது. ஓர் அறிவியல் துறையாகச் செயல்பட வேண்டிய தொல்லியல் துறையில் ஒன்றிய அரசின் தூண்டுதலால், மத்தியத் தொல்லியல் துறையும் அரசியல் உள்நோக்கத்தோடு அமர்நாத்தை இடமாற்றம் செய்திருப்பது மிகுந்த கண்டனத்திற்கு உரியது.

 

எனவே பதவிக்கால முடியும் முன்பே அநீதியாக செய்யப்பட்ட இந்த இடமாற்ற உத்தரவை மத்தியத் தொல்லியல் துறை  உடனடியாகத் திரும்பப் பெற்று மீண்டும் அதே பணியிடத்தில் அவரைப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக்கொள்கிறது. மேலும் தொல்லியல் துறை ஓர் அறிவியல் துறை என்பதைக் கருத்தில் கொண்டு, அத்துறை நடவடிக்கைகளில் மூக்கை நுழைத்து அரசியல் பண்ணும் போக்கினை ஒன்றிய பாஜக மோடி அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது” எனக் கூறியுள்ளார்.

 

 

Next Story

விஜயநகர மன்னர் கால வில் வீரனின் நடுகல் சிற்பம் பற்றிய வெளிவராத தகவல்கள்!

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

vijayanagara kingdom age bow warrior statue discovered in virudhunagar thirusuli area

 

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே வேடநத்தம் என்ற ஊரில் 600 ஆண்டுகள் பழமையான விஜயநகர மன்னர் காலத்தைச் சேர்ந்த வில் வீரனின் நடுகல் சிற்பம் பற்றிய வெளிவராத புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. 
 

வேடநத்தம் வீரபூசையா கோயில் அருகில் நீத்தார் நினைவுச் சின்னங்கள் உள்ள பகுதியில் பழமையான சிற்பங்கள் இருப்பதாக அவ்வூர் ஆசிரியர் பா.சிலம்பரசன் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி மாணவி வே.சிவரஞ்சனி, திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் அ.முகம்மது சகாப்தீன், சு.ஸ்ரீவிபின் ஆகியோர் அப்பகுதியை ஆய்வு செய்து இதுவரை வெளி கொண்டு வராத தகவல்களை வெளிக் கொண்டு வந்துள்ளனர்.

 

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது, "நிரை கவர்தல், மீட்டல், ஊரை எதிரிகளிடமிருந்து காத்தல், புலி, பன்றி, யானையுடன் சண்டையிடுதல், அரசனின் வெற்றிக்காக போரிடுதல் ஆகிய காரணங்களால் இறந்த வீரர்களுக்கு அவர்கள் நினைவாக நடுகற்கள் நட்டு வழிபாடு செய்வது சங்ககாலம் முதல் தமிழ்நாட்டு மக்களிடையே காணப்படும் வழக்கம். சாதாரண மக்களின் வரலாறு, வழக்காறுகளை அறிந்து கொள்ள நடுகற்கள் உதவுகின்றன.

 

vijayanagara kingdom age bow warrior statue discovered in virudhunagar thirusuli area

 

இங்கு வில் வீரன் சிற்பம், நடுகற்கள், சதிக்கல் மண்டபம் ஆகிய நினைவுச் சின்னங்கள் உள்ளன. இதில் வில் வீரன் சிற்பம் தனிச் சிற்பமாக கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 60 செ.மீ, அகலம் 26 செ.மீ, பருமன் 16 செ.மீ ஆகும். இடது கையில் வில்லைத்தாங்கி வலது கையில் ஒரு அம்பை எடுத்து அதை கீழே ஊன்றியவாறு வீரன் நிற்கிறார். வில் அவரைவிட உயரமாய் உள்ளது. வலது தோளில் உள்ள அம்பறாத்தூணியில் அம்புகள் நிறைந்துள்ளன. உறையுடன் உள்ள குறுவாளை இடுப்பில் செருகியுள்ளார்.

 

vijayanagara kingdom age bow warrior statue discovered in virudhunagar thirusuli area

 

கழுத்தில் மாலையுடன் முழங்கால் வரை ஆடை அணிந்துள்ளார். மேலாடை இல்லை. கொண்டை இடதுபக்கம் சரிந்த நிலையில் உள்ளது. கைகளில் காப்புகள், கால்களில் வீரக்கழல், நீளமாக வளர்ந்த காதில் குண்டலமும் அணிந்து காணப்படுகிறார். மீசை திருகி மேல் நோக்கியுள்ளது. வீரனின் சிற்பம் மிக அழகாக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. சிற்ப அமைதியைக் கொண்டு இது  கி.பி.14-15-ம் நூற்றாண்டு விஜயநகர மன்னர் காலத்தைச் சேர்ந்தது என்பதை மதுரை தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

இச்சிற்பம் திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் உள்ள விஜயநகர மன்னர் காலத்தைச் சேர்ந்த வில் அம்பு ஏந்திய ராம, லட்சுமணர் சிற்பங்களை ஒத்த அமைப்பில் உள்ளது. வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை போன்ற வட மாவட்டங்களில் வில் அம்பு ஏந்திய வீரன் சிற்பத்தை வேடன் கல் அல்லது வேடியப்பன் கல் என அழைக்கிறார்கள். இவ்வூர் பெயர் வேடர் நத்தம் என்பது கூட இவரைக் குறித்து அமைந்த பெயராக இருக்கலாம்.

 

இதன் அருகிலுள்ள நான்கு கால் மண்டபத்தில் கணவன் மனைவி நின்ற நிலையில் 3 அடி உயரமுள்ள ஒரு சதிக்கல் சிற்பம் உள்ளது. இதில் ஆண் வலது கையில் வாளை ஏந்தி, இடது கையை தொடையில் வைத்துள்ளார். பெண் வலது கையை உயரே தூக்கி, இடது கையில் மலர் செண்டு ஏந்தி தொடையில் வைத்துள்ளார். ஆணுக்கு இடதுபுறமும், பெண்ணுக்கு வலதுபுறமும் கொண்டை சரிந்துள்ளது. சிற்பத்தின் மேல்பகுதியில் திருவாசிகை உள்ளது. சதிக்கல் சிற்பம் கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனலாம். இதன் அருகில் மேலும் பல நடுகற்கள் உள்ளன.

 

vijayanagara kingdom age bow warrior statue discovered in virudhunagar thirusuli area

 

நுண்கற்காலத்தைச் சேர்ந்த கருவிகளும் செதில்களும் நடுகற்கள் உள்ள இடத்தில் அதிகம் காணப்படுகின்றன. கி.பி.14-ம் நூற்றாண்டில் தொடங்கிய நடுகல் வைக்கும் வழக்கம், சமீப காலம் வரை இவ்வூரில் தொடர்வது குறிப்பிடத்தக்கது" என்று கூறினார்.