Skip to main content

அ.தி.மு.க.வில் இருந்து வந்த ஐந்துமுனை அழுத்தங்கள்..! டெல்லி போட்ட அதிரடி உத்தரவு!!!

Published on 08/10/2020 | Edited on 08/10/2020

 

eps

 

அ.தி.மு.க சண்டை உச்சத்தை அடைந்தபோது சசிகலா, ஓ.பி.எஸ், எடப்பாடி என மூன்று தரப்பினரும் பா.ஜ.க.வின் கதவைத் தட்டினார்கள். அதனுடன் ஆன்மீக குருவான ஜக்கிவாசுதேவும் தொழிலதிபருமான அதானியும் அ.தி.மு.க. சண்டையில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். சசிகலா, ராஜ்நாத் சிங்கை வைத்துக்கொண்டு காய் நகர்த்தினார். எடப்பாடி பியூஷ் கோயல் மூலமாக காய் நகர்த்தினார். நரேந்திர மோடியுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத், மோடியை இருமுறை சந்தித்துப் பேசினார். அமித்ஷாவுடன் நெருக்கமாக இருக்கும் ஜக்கிவாசுதேவ், அவர் மூலமாக காய் நகர்த்தினார்.

 

இதற்கிடையே அ.தி.மு.க. சண்டையில் தொழிலதிபர் அதானியும் தலையிட்டார். சசிகலா, எடப்பாடி, ஓ.பி.எஸ். ஆகியோர் தங்களை பா.ஜ.க. ஆதரிக்க வேண்டும் எனக் கூற ஜக்கிவாசுதேவ், அமித்ஷா மூலமாக, தமிழக உள்ளாட்சித்துறை வேலுமணியை முதல்வராக்கினால் பிரச்சனை தீரும் என்று புது வியூகம் வகுத்து காய் நகர்த்தினார். அதானி தங்கமணியை முதல்வராக்கினால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்றார். இப்படி ஐந்து முனைகளில் ஐந்து விதமான கோரிக்கைகள் வந்தன.

 

ops

 

சசிகலாவை ஆதரிக்கக்கூடாது என எடப்பாடியும், எடப்பாடியை ஆதரிக்கக் கூடாது என ஓ.பி.எஸ்.சும் அழுத்தம் கொடுத்தனர். எடப்பாடியை நீக்கிவிட்டு எஸ்.பி. வேலுமணியை முதல்வராக்க வேண்டுமென ஜக்கிவாசுதேவ் அழுத்தம் கொடுத்தார். எடப்பாடியை நீக்கினால், வேலுமணியைவிட, தங்கமணி பெட்டர் சாய்ஸ். அவரை முதல்வராக்க வேண்டும் என்று அதானி அழுத்தம் கொடுத்தார். எடப்பாடி, வேலுமணி, தங்கமணி மூவருமே கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சமுதாய பேலன்ஸ் என்பது சரியாக இருக்கும் என்றும், பா.ஜ.க. மேலிடத்திடம் தெரிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. விவகாரத்தைக் கவனிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட அமித்ஷா, ராஜ்நாத்சிங், பியூஷ்கோயல் ஆகிய பா.ஜ.க. பிரமுகர்களுடன் தொழிலதிபர் அதானி, சாமியார் ஜக்கிவாசுதேவ் உள்ளிட்ட பா.ஜ.க. ஆதரவுத் தரப்பிலிருந்தும் ஒவ்வொரு விதமான அழுத்தம் பா.ஜ.க.வுக்கு வந்ததால் கடைசியில் முடிவு எடுக்கும் அதிகாரம் நரேந்திரமோடியின் கைக்குப் போய்விட்டது.

 

ஐந்து முனைகளில் இருந்து வந்த அழுத்தங்களை பரிசீலித்த நரேந்திர மோடி, சசிகலாவிற்கு ஆதரவு கொடுத்தால் அவர் நம் நம்பிக்கைக்கு உரியவராக தொடர்வாரா என்பதில் சந்தேகம் அடைந்தார். அதே நேரத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ். இருவரும் தனித்தனியாக பிரிந்து நிற்பது சரியல்ல என அவர் நினைத்தார். இதைப்பற்றிய விவாதங்களில் பா.ஜ.க.வின் தமிழக பொறுப்பாளரான புபேந்திரயாதவ் ஒரு நிலையை எடுத்து மோடியிடம் தெரிவித்தார்.

 

sasikala

 

"தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நீடிக்கும் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி நிறைய ஊழல்கள் செய்திருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் பா.ஜ.க.வின் ஆதரவுதான் என்கிற கெட்டப்பெயர் மக்கள் மத்தியில் எழுந்து நிற்கிறது. அதை தி.மு.க போன்ற எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து பேசுகின்றன. ஊழல் அமைச்சர்கள்- அதிகாரிகள் வீடுகளில் நடந்த ரெய்டுகளில் சிக்கிய ஆவணங்கள் மீது என்ன நடவடிக்கை என்ற கேள்வி சாதாரண மக்களிடமும் இருக்கிறது. அதனால், இந்த ஐந்து பேரில் யாரை நாம் ஆதரித்தாலும் அது அ.தி.மு.க.வை மட்டுமல்ல, தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என்கிற பா.ஜ.க.வின் இலக்கையும் பலவீனப்படுத்திவிடும். எனவே நாம் இந்த மோதலில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. இவர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ளட்டும். அடிச்சி... முடிச்சி... வரட்டும். அதில் யார் பலம்பெற்று வருகிறார்களோ அவர்கள் அ.தி.மு.க.வைக் கைப்பற்றட்டும். இனி பா.ஜ.க.வுடன் பேசும் அ.தி.மு.க.வினரிடம், முதலில் உங்கள் வீட்டை ஒழுங்காக வையுங்கள் எனச் சொல்லுவோம். அதுதான் இப்பொழுது பா.ஜ.க.வுக்கு நல்லது'' என்றார்.

 

spv

 

அவரது நிலையைச் சரியென ஏற்றுக்கொண்ட நரேந்திர மோடி அ.தி.மு.க.வில் சண்டையிட்டுக்கொண்டிருக்கும் ஐந்து பேரிடமும் முதலில் உங்கள் வீட்டை ஒழுங்காக வையுங்கள் என பொத்தம் பொதுவான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இப்படி, பா.ஜ.க.வின் ஆதரவு இப்போதைக்கு யாருக்கும் இல்லை எனத் தெளிவான உத்தரவு மோடியிடமிருந்து வந்ததும் அ.தி.மு.க.வில் யார் பெரியவர் என்கிற சண்டை பலம்பெற ஆரம்பித்தது.

 

சசிகலா நம்பத்தகுந்தவர் அல்ல என டெல்லியிடம் பேசிய எடப்பாடி மேல் அவர் கடும் கோபம் கொண்டார். கூவத்தூர் முகாம் நடந்தபோது, எடப்பாடியை முதல்வராகத் தேர்ந்தெடுத்த சசிகலா, ஓ.பி.எஸ். பக்கம் யாரும் போய்விடாமல் எடப்பாடியை ஆதரிப்பதற்காக அ.தி.மு.க.வின் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் 4 கோடி ரூபாய் கொடுத்தார். அதை இப்போது சுட்டிக்காட்டி, ""எடப்பாடியை முதலமைச்சராக்க நான் செலவு செய்தேன். அனைத்து முக்கியத்துறைகளையும் கைப்பற்றி ஏகப்பட்ட பணம் சேர்த்தார். இப்போது அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு என்னை எதிர்க்க துணிந்துவிட்டார்'' என தன்னிடம் பேசவந்த ஓ.பி.எஸ். ஆட்களிடம், "எடப்பாடியை எதிர்க்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள். நமது வலு என்னவென்று எடப்பாடிக்கு காட்டுவோம்'' என உத்தரவிட்டார்.

 

THANGAMANI

 

இதனால் சசிகலாவும் ஓ.பி.எஸ்.சும் அரசியல் களத்தில் இணைந்துள்ளனர். இந்த முடிவு ஓ.பி.எஸ். வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவாக மாறியது. சென்னையில் இருந்து கிளம்பி தனது பூர்வீகமான ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள பேச்சியம்மன் கோவில், திண்டுக்கல் பகுதியில் உள்ள பெருமாள் கோவில், கோயம்புத்தூரில் உள்ள ஒரு கோவில் என மூன்று கோவில்களுக்கு ஓ.பி.எஸ். விஜயம் செய்தார்.

 

ஓ.பி.எஸ். தனது அரசியல் வாழ்வில் எந்த முடிவு எடுத்தாலும் இந்த மூன்று கோவில்களுக்கு விஜயம் செய்துவிட்டுத்தான் எடுப்பார். சசிகலாவுடன் இணைந்து செயல்படுவது என்கிற முடிவை ஓ.பி.எஸ். எடுத்ததன் பின்னணியில்தான் இந்த கோவில் விசிட்டுக்கள் நடந்தது என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.


கலந்தம் என்கிற ஊரில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருந்தபோது ஓ.பி.எஸ்.ஸை. ஆர்.பி.உதயக்குமார் 3 எம்எல்ஏக்களுடன் சந்தித்தார். இதுதவிர நத்தம் விஸ்வநாதன் ஓ.பி.எஸ்.சுடன் ஒருநாள் முழுவதும் இருந்து அரசியல் நிலைமைகள் குறித்து விவாதித்திருக்கிறார். தென் மாவட்டங்களில் ஓ.பி.எஸ்.ஸின் சொந்த சமூகமான மறவர் சமூகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் ஓ.பி.எஸ்.க்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். தேவேந்திரகுல வேளாளர்களும் ஓ.பி.எஸ்.க்கு தங்களது ஆதரவை தெரிவிப்பதற்கான நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன.

 

Ad

 

சசிகலா, முக்குலத்தோர் சமுதாயத்தில் மற்ற பிரிவுகளான கள்ளர், அகமுடையார் ஆகிய சமூகத்தினரின் ஆதரவை ஒன்றாக திரட்டி வைத்துள்ளார். நாடார் இனமக்களின் ஆதரவை மனோஜ்பாண்டியன் மூலம் ஓ.பி.எஸ். திரட்ட ஆரம்பித்துள்ளார். கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வைத்திலிங்கத்தை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கின்றனர். வன்னியர்களின் ஆதரவை திரட்ட எடப்பாடி சி.வி.சண்முகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

 

அ.தி.மு.க. எல்ஏக்களுடன் சசிகலா பேசத் தொடங்கியதை அறிந்து, ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் 50 லட்ச ரூபாய் தர எடப்பாடி முடிவு எடுத்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு முதல் கட்டமாக வழங்கியுள்ளார். இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அ.தி.மு.க.வில் நடைபெறும் மோதல் நீயா? நானா? என உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளைவிட விறுவிறுப்பான இந்த ஆளுந்தரப்பு அரசியல் கிரிக்கெட் போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என ஒவ்வொரு பந்தையும் உற்றுக்கவனிக்கும் அம்பயர் வேலையை பா.ஜ.க மேற்கொண்டு வருகிறது.
 

 

 

 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.