Skip to main content

வீட்டில் தூங்கினால் கூட 'மெமோ'வா? பெரியார் பல்கலை பேராசிரியர் புலம்பல்!

Published on 05/10/2019 | Edited on 05/10/2019

வீட்டிலும், ஓடும் காரிலும் தூங்கியதற்கெல்லாம் கூடவா விளக்கம் கேட்டு மொமோ அளிப்பது? என்று பெரியார் பல்கலை பதிவாளரின் அடிப்படையற்ற நடவடிக்கையால் பேராசிரியர் ஒருவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். 


சேலத்தை அடுத்த சித்தனூரை சேர்ந்தவர் வைத்தியநாதன் (53). பெரியார் பல்கலையில் 14 ஆண்டுகளாக பொருளியல் துறை உதவி பேராசிரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 21.8.2019ம் தேதியன்று, காலை 10.10 மணியளவில், பாடம் நடத்தாமல் வகுப்பறையிலேயே தூங்கியதாக மாணவர்கள் சிலர் புகார் அளித்துள்ளதாக  சொல்லப்படுகிறது.


மாணவர்களின் புகாரை சுட்டிகாட்டியுள்ள பல்கலை பதிவாளர் தங்கவேல், பேராசிரியர் வைத்தியநாதனுக்கு விளக்கம் கேட்டு குற்றச்சாட்டு குறிப்பாணை (மெமோ) ஒன்றை அக். 3ம் தேதி அளித்துள்ளார். அக். 11ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படியும் தெரிவித்துள்ளார்.
 

 Even sleeping at home is a ‘memo’?  Periyar University Prof lament!


அந்த குறிப்பாணையில், 'பல்கலை சாசன விதிகளுக்கு முரணாக பணி நேரத்தில், அதுவும் வகுப்பு நடத்திடும் நேரத்திலேயே தூங்கி, கடமையில் இருந்து தவறியுள்ளீர்கள். இதனால், ஏன் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது?,' என்றும் அந்த குறிப்பாணையில் கேட்கப்பட்டுள்ளது.


இந்த குற்றச்சாட்டு குறிப்பாணை குறித்து நாம் பேராசிரியர் வைத்தியநாதனிடம் விசாரித்தோம்.


''குறிப்பாணையில் சொல்லப்பட்டுள்ள நாளில் நான் விடுப்பில் இருந்தேன். அன்றைய தினம் எனக்கு உடல்நலம் சரியில்லாததால், பெங்களூருவில் உள்ள நாராயணா ஹிருதாயலயா மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றிருந்தேன். சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு காரில் சென்றபோது, உடல் களைப்பால் ஓடும் காரிலேயே தூங்கினேன். மருத்துவ பரிசோதனை முடிந்து வீடு திரும்பியதும், என் வீட்டிலும் தூங்கினேன்.
 

 Even sleeping at home is a ‘memo’?  Periyar University Prof lament!


விடுப்பில் உள்ள ஓர் உதவி பேராசிரியர் வீட்டிலோ, ஓடும் காரிலோ தூங்குவது எல்லாம் குற்றமாகுமா? இதற்கெல்லாமா விளக்கம் கேட்டு மெமோ கொடுப்பார்கள்? இப்படியொரு விந்தையான செயலை உலகில் எங்கும் காண முடியாது. பல்கலை பதிவாளரின் நடவடிக்கை என்னை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது. என் மீது புகார் வந்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். அந்த புகார் நகலைக் கேட்டு பதிவாளருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்,'' என்றார் வைத்தியநாதன். 


போலி பணி அனுபவ சான்றிதழ் புகாரில் சிக்கியுள்ள தமிழ்த்துறை பேராசிரியர் பெரியசாமி, உரிய கல்வித்தகுதியின்றி பணியாற்றி வரும் மேட்டூர் உறுப்புக்கல்லூரி முதல்வர் மருதமுத்து, பெரியார் பல்கலை மேலாண்மைத்துறை உதவி பேராசிரியர் சூர்யகுமார் உள்ளிட்ட பலர் மீது குற்றச்சாட்டுகள் இருக்க, இதுவரை அவர்கள் மீது பெயரளவில்கூட விளக்கம் கோராமல் இருக்கும் பல்கலை, வைத்தியநாதன் மீது மட்டும் காழ்ப்புணர்வுடன் செயல்படுவதாக கூறுகிறார்கள் பல்கலையின் உள்விவகாரங்களை அறிந்த சிலர்.


இது தொடர்பாக சில பேராசிரியர்களிடம் பேசினோம்.


''பெரியார் பல்கலையில் தற்போது டீன் ஆக உள்ள கிருஷ்ணகுமார், போலி பில் விவகாரத்தில் ஒருமுறை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டார் வைத்தியநான். அப்போதுதான் முதன்முதலாக பல்கலை நிர்வாகத்திற்கு எதிராக செயல்படுவதாக வைத்தியநாதன் மீது, நிர்வாகம் ஒரு புகாரை கூறியது. அதன்பிறகு சுவாமிநாதன் என்பவர் துணைவேந்தராக இருந்தபோது, விதிகளை மீறி 22 உதவி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க முயற்சிகள் நடந்தன. அதைத் தட்டிக்கேட்டார். 

 Even sleeping at home is a ‘memo’?  Periyar University Prof lament!


இந்நிலையில், பல்கலை ஊழல் குறித்து முன்பு ஒரு நாளிதழில் செய்தி வந்தது. அந்த செய்தியை வைத்தியநாதன்தான் கூறியதாக உள்நோக்கத்துடன் அவர் மீது ஒருநபர் விசாரணைக்குழுவை அமைத்தார், அப்போதைய துணைவேந்தர் சுவாமிநாதன். பல்கலையில் நடக்கும் ஊழலை கண்டுகொள்ளாத, அதேநேரம் தகுதியற்ற பேராசிரியர்களாக இருந்தாலும்கூட அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் பாய்வதில்லை. ஊழல் முறைகேட்டில் ஈடுபடுவோருக்கு வைத்தியநாதன் இடைஞ்சலாக இருப்பதால், அவரை எப்படியாவது சிக்கலில் மாட்டிவிடும் திட்டத்துடன் பல்கலை நிர்வாகம் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. இப்போது அளித்துள்ள மெமோவில்கூட துளியும் லாஜிக் இல்லை,'' என்கிறார்கள் பேராசிரியர்கள்.


'மாமியார் உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம்' என்பதை மெய்யாக்கி உள்ளது பெரியார் பல்கலை. 



 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.