Skip to main content

அரசியல் சாசனத்தின் இடத்தில் மனுதர்மம்! -பா.ஜ.க. அரசை விளாசிய டி.ராஜா! 

Published on 29/07/2020 | Edited on 29/07/2020
d.raja

 

 

கரோனா ஊரடங்கு தொடர்ந்தாலும், கருத்தியல் ரீதியிலான கலந்துரையாடல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன அரசியல் இயக்கங்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் குமரி, கோவை மாவட்டங்களும், கோவை சமூக விஞ்ஞானப் பயிலரங்கமும் இணைந்து நடத்திவந்த மெய்நிகர் சந்திப்பு கூட்டத்தின் நூறாவது நாளில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, ‘இந்தியப் பாசிச சூழலில் நம் கருத்தியல் போராட்டம்’ எனும் தலைப்பில் ஆற்றிய உரை சமகாலச் சூழலில் மிக முக்கியமானது.

 

"இன்று இந்தியாவில் பாசிசம் தலைவிரித்தாடுகிறது. 2014ல் இந்தியாவில் நடைபெற்ற ஆட்சிமாற்றம், பா.ஜ.க. என்ற ஒரு கட்சியின் ஆட்சி மாற்றமல்ல. அது அடிப்படையில் குணாம்ச ரீதியிலான மாற்றத்தை குறிக்கிறது. பா.ஜ.க. அரசை ஆர்.எஸ்.எஸ். என்றொரு பதிவு செய்யப்படாத, மதவாத பாசிச கொள்கையைக் கொண்ட இயக்கம் கட்டுப்படுத்துவதுதான் அதற்கு காரணம். இன்று அரசியல் சட்ட அடிப்படைகள் தகர்க்கப்படுகின்றன. ஜனநாயகம் சிறுமைப்படுத்தப்படுகிறது. அரசியல் சட்டம் வழங்கிய குடியுரிமை சிதைக்கப்படுகிறது. தேசியம் பேசிக்கொண்டே மக்கள் மத்தியில் வெறுப்புணர்வு தூண்டிவிடப்படுகிறது.

 

ஆட்சியாளர்களின் கொள்கைகளைத் தட்டிக்கேட்டால் தேசவிரோதிகள் என்கின்றனர். உரிமை குரலெழுப்பும் மாணவர்கள், மனித உரிமை போராளிகள், உண்மைகளை வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்கள் மீது தேசவிரோத வழக்கு பாய்கிறது. அம்பேத்கர் உருவாக்கி தந்த அரசியல் சாசனத்தை மாற்றி விட்டு, அதில் மனுதர்மத்தை கொண்டு நிறுத்தும் வேலைகள் நடக்கின்றன. முதலாளித்துவத்தின் கையில் நாடு சிக்கித் தவிக்கிறது.

 

நவீனகால இந்திய முதலாளித்துவத்தில் வர்க்க போராட்டம், சாதிய கட்டமைப்பை தகர்க்கும் சமூக நீதிக்கான போராட்டம், பெண் விடுதலை போராட்டம் ஆகிய மூன்று முக்கிய பிரச்சனைகள் இருக்கின்றன. மனுதர்மத்தை முன்னிறுத்தும் ஆர்.எஸ்.எஸ். இதையெல்லாம் ஏற்காது. இந்திய பொருளாதாரம் கரோனா காலத்திற்கு முன்பே மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தது. கரோனா கெடுபிடிகள் அதை மேலும் வீரியமாக்கிவிட்டன.

 

சொந்த நாட்டுக்குள்ளே மக்கள் வாழவழியின்றி புலம் பெயர்ந்து அலைகிறார்கள். நவதாராளமய முதலாளித்துவம் என்றுமில்லாத அளவுக்கு சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளால் ஆட்டுவிக்கப்படும் ஆட்சி நடக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளும், ஆர்.எஸ்.எஸ்.-ன் இந்து ராஷ்டிரா கொள்கையோடு ஒத்துப்போகிறார்கள். மனுவும் பணமும் (Manu and Money)  கைகோர்த்து நிற்கின்றன.

 

பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஒருபுறமிருக்க, இந்தியாவின் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கிறது அரசு. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றப்படுகின்றன. தியாகங்கள் செய்து பெற்ற தொழிலாளர் உரிமைச் சட்டங்களை கேலிக்கூத்தாக்குகிறார்கள். இதையெல்லாம் கண்டித்து போராடினால் சாதிரீதியிலும், மதரீதியிலும் பிளவுபடுத்துகிறார்கள். போராடுகிறவர்கள் பெண்கள் எனில் கீழானவர்களாக நடத்துகிறார்கள்.

 

நாம் எதிர்கொள்ளும் துயரங்களை தெய்வீக விதிகள் என்றெண்ணி அடங்கிப்போக சொல்கிறார்கள். இந்துத்துவா கருத்தியலைக் கேள்வியெழுப்பி, சுயமரியாதை, முற்போக்கு பேசியவர்களைப் படுகொலை செய்கிறார்கள். மதமென்ற மாயையின் கீழ் சாமான்ய மக்களை ஒன்று திரட்டுகிறார்கள். சத்குருக்களும், சங்கராச்சாரியார்களும் சொல்லும் மதமும், சாதாரண ஏழை, எளிய மக்கள் நம்பும் மதமும் வெவ்வேறானது என்பதை உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

 

காரல் மார்க்ஸ் எனும் பெரும்ஞானி, தத்துவஞானிகள் இதுவரை உலகத்தை வியாக்கியானம் செய்துள்ளார்கள். ஆனால், இந்த உலகத்தை மாற்றுவதுதான் மிகமுக்கியமான விஷயம்’ என்றுரைத்தார். நம் இந்தியாவை மக்களுக்கானதாக மாற்ற வேண்டுமென்றால், அதற்கு சோசலிசம் மட்டுமே மாற்று. உலகின் பல இடங்களிலும், புதிய கோணங்களில் சோசலிசத்துக்கான மாற்றங்கள், இடத்திற்கேற்றாற்போல் நிகழ்ந்து வருகின்றன. அப்படியொரு மாற்றான சோசலிசத்தை நம் இந்தியாவில் கட்டுவது பற்றி நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

 

இங்குதான் கலை இலக்கியப் பண்பாட்டு தளத்தில் பெரும் சவால்கள் முன்னிற்கின்றன. இங்கே நாம் மானுட விடுதலை பற்றி பேசவேண்டும். கொள்வாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பதால் மானுடம் வென்றது என்று கம்பன் பாடுவானே… அதைத்தான் மாமேதை கார்ல் மார்க்ஸும் பேசினார். நம்முடைய அரசியல் சாசனம் மக்களாகிய நாம் என்றுதான் தொடங்குகிறது. அதில் இங்கே இந்து, முஸ்லீம், கிறித்தவன், பவுத்தன் என்று சொல்லவில்லை. பிராமணன், தலித், சூத்திரன் என்று சொல்லவில்லை. நாம் மானுடர்களைப் புரிந்துகொள்வதும், சக மானுடர்களைப் அரவணைப்பதுதான் முக்கியம்.

 

இந்திய சூழலில் பாசிச சக்திகளை முறியடிக்க, கார்ப்பரேட் முதலாளித்துவத்தை வீழ்த்த, மக்கள் விடுதலை விரும்பும் அனைத்து கருத்துடையோரும் ஒரே அணியில் திரளவேண்டும். ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். இதுவே காலத்தின் கட்டாயம்.

 

இந்திய புரட்சி என்பது பொருளாதார புரட்சி மட்டுமின்றி, முதலாளித்துவ பிரச்சனை மட்டுமின்றி, சமூக நீதிக்கான, சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் வெற்றியில் இருக்கிறது'' என விரிவாக பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மோடியின் நாய்க்குட்டிபோல் அமலாக்கத்துறை செயல்படுகிறது” - முத்தரசன்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Mutharasan criticism of BJP

புவனகிரி பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் சிதம்பரம் நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டி பானைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

அப்போது பேசிய அவர், “அமலாக்கத்துறை மோடியின் நாய்க்குட்டி போல செயல்படுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அபராதம் விதித்துள்ளனர். சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை மோடி, அமித்ஷா ஆட்டி படைக்கிறார்கள். மோடி, தேர்தலுக்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் இருக்காது என கூறுகிறார். உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை அழித்து விடுங்கள் என கூறுகிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்து பாரதிய ஜனதா கட்சியை மட்டும் வைத்துக்கொண்டு சர்வாதிகாரி போல் செயல்படுவதற்காக அனைத்து கட்சிகளையும் ஒழிக்க திட்டமிட்டுள்ளார்.

மோடியின் தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையுமே செய்யவில்லை. விவசாயிகளுக்கு ஆதார விலை, சாமிநாதன் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தற்போது கச்சத்தீவைப் பற்றி பேசுகிறார். கச்சத்தீவை கடந்த 10 ஆண்டுகளில் மீட்பதற்கான மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை அவர் யாருக்கு பேன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதனை திமுக, கம்யூனிஸ்ட் பிரச்சினையாக பார்க்காமல் பொது பிரச்சினையாக பார்க்க வேண்டும்.  மோடியிடம் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. அப்படி சமூக நீதி அவர்களுக்கு இருந்தால், இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறேன் என கூறியதால் வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்திருக்கமாட்டார்கள்.

பாஜக பத்தாண்டுகளில் செய்த தவறு கொஞ்ச நஞ்சமல்ல. சிறுபான்மை மக்களுக்கு எதிராக, சிறு குறு தொழில் நடத்துபவர்களுக்கு எதிராக, விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்கள் நிறைவேற்றினார்கள். தொழிலாளர்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வந்தார்கள்.

இதற்கு அதிமுக ஆதரவளித்தது. தற்போது ஜனநாயகத்தை காப்போம் என  ஏமாற்று வேலை செய்கிறது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பானைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இவருடன் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவாசகம்,  மாவட்டச் செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் சேகர், வட்டச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Next Story

“இந்திய அளவில் சமூக நீதி காப்பாற்றப்பட வேண்டும்” - பாஜகவை விளாசிய து.ராஜா

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cpi National Secretary D. Raja has severely criticized the BJP

தமிழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கடி வருவதற்கு வெட்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த து.ராஜா, “அகில இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது மாறி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் பாஜக நாசகார செயலில் ஈடுபட்டு வருவதால் இந்தியா ஒரு ஜனநாயக குடியரசாக நீடிக்குமா என்ற கேள்வி எழுகிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக, மக்கள் நலன் காத்திட, மாநில உரிமைகளை மதித்து செயல்படுகிற ஒன்றிய அரசாக இந்தியா தொடர்ந்து நீடிக்குமா? என்ற கேள்வியும் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் தான் இந்தத் தேர்தலை எல்லோருமே முக்கியமான தேர்தலாக கருதுகிறோம்.

பாஜகவை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும். மதவெறி பாசிசத்தை இந்தியாவில் நிலை நிறுத்த வேண்டும் எனவும், மதச்சார்பற்ற நாடு என்ற நிலையை மாற்றி மதவாத நாடாக்க முயன்று வருகிறது.  சட்ட நெறிகளை எல்லாம் அழித்து ஒழித்து விட்டு ஏற்றத்தாழ்வுகளை அப்படியே கட்டி காப்பாற்ற வேண்டும். ஆர்எஸ்எஸ் அஜண்டாவை நிறைவேற்றுகிற ஒரு கட்சியாக தான் பாஜக செயல்படுகிறது. இதற்கு பிரதமராக மோடி செயல்படுகிறார்

மோடி தமிழ்நாட்டுக்கு தற்போது அடிக்கடி வருகிறார். அவர் பிரதமர் என்ற முறையில் தேர்தல் காலத்தில் மக்களின் வாக்குகளைப் பெற வருவதற்கு வெட்கப்பட வேண்டும்.  தமிழ்நாடு பல பேரிடர்களை சந்தித்தபோதெல்லாம் மோடி வரவில்லை. தமிழ்நாட்டின் மீது அக்கறை இல்லை, நிவாரண நிதி கூட கொடுக்கவில்லை.

இந்தியாவில் முன்பிருந்ததை  விட அந்நிய கடன் அதிகரித்துள்ளது. இது பற்றி மோடி பொது வெளியில் விவாதிக்க தயாரா?  மோடி ஆட்சியில் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள். மக்களுக்கு  வளர்ச்சி இல்லை.  மோடியின் அரசு மக்கள் விரோத அரசாக நாட்டு நலனில் அக்கறை இல்லாத ஒரு அரசாக, பெரு முதலாளிகளின் எடுபிடி அரசாக மாறிவிட்டது.  மதச்சார்பின்மையை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணியில் இருக்கிற கட்சிகள் தொடர்ந்து போராடுகிறோம். இந்தத் தேர்தல் களத்தில் மக்களிடம் வாக்கு கேட்கின்றோம்.

பாட்டாளி மக்கள் கட்சி பாஜகவோடு  அணி சேர்ந்து இருப்பது பெரிய துரோகம். பாட்டாளிகள் என்று சொல்லிக்கொண்டு பாஜகவோடு சேர்வது எவ்வளவு பெரிய கொள்கை மோசடி, துரோகம் என்பதை இன்றைக்கு மக்கள் கேட்கிறார்கள்.  அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருக்கிற அதிமுக தமிழர்களின் உரிமைகளை மீட்போம் என்கிறார்கள். தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட போது இவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? மோடியை ஆட்சியில் இருந்து அகற்றவேண்டும் என்று எடப்பாடி பேசுவாரா?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தியாவை காத்திட, பாசிசத்தை வீழ்த்திட  ஸ்டாலின் அழைக்கிறேன் என்று குரல் கொடுத்து இருக்கிறார். அது அவருடைய குரல் மட்டுமல்ல,  தமிழ்நாடும் இந்தியாவும் ஒன்று பட்டு முன்னேற வேண்டும் என்று விரும்புகிற எல்லோரும் எழுப்புகிற குரல்.  இந்தியாவைக் காத்திட பாசிசத்தை வீழ்த்திட நாம் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்.  ஒன்றுபட்டு போராட வேண்டும். இந்தப் பின்னணியில் தான் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்திய அளவில் சமூக நீதி காப்பாற்றப்பட வேண்டும், ஜாதியை உடைத்து தகர்த்தெறிய வேண்டும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று  போராடுகிற முன் களப்போராளியாக தொல்.திருமாவளவன் இருக்கிறார். எனவே அவருக்கு சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் வாக்களிக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்” என்றார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, சிபிஐ மாநில கட்டுப்பாட்டுக் குழு மணிவாசகம், மாநில நிர்வாகக் குழு மருத்துவர் ரவீந்திரநாத், மாநிலக்குழு மருத்துவர் சாந்தி, மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் வி.எம் சேகர், வட்டச் செயலாளர் தமீம் முன் அன்சாரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.