Skip to main content

தி.மு.க.வின் கரோனா அரசியல்!

Published on 13/04/2020 | Edited on 13/04/2020


 

தமிழ்நாட்டில் கரோனா பற்றி முதன்முதலில் பேசிய பெரிய கட்சி, தி.மு.க. தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் கரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்ச் தொடக்கத்திலேயே வலியுறுத்தினர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு அப்போது அதனை அலட்சியப்படுத்திய நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தனது கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்குழுக்கூட்டம் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைப்பதாக அறிவித்து, கரோனா சமூக ஒழுங்குக்கு வழி வகுத்தார்.

 

mks



கொளத்தூர் தொகுதிவாசிகளுக்கும், ஊடகத்தினருக்கும் தி.மு.க. சார்பில் மருத்துவ பாதுகாப்பு கருவிகள் வழங்கப்பட்டன. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதிகளில் இதுபோல வழங்கத் தொடங்கினர். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என்கிற தி.மு.க.வின் கோரிக்கையை ஆரம்பத்தில் அலட்சியப்படுத்தியது அ.தி.மு.க அரசு. பின்னர், தி.மு.க-காங்கிரஸ்-இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்தபிறகே, சட்டப்பேரவையை ஒத்திவைக்கும் முடிவினை அ.தி.மு.க. அரசு எடுத்தது.

 

mks



கரோனா பரவலால், மார்ச் 22ல் கடைப்பிடிக்கப்பட்ட ஒரு நாள் ஊரடங்கினால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியை அறிந்த தி.மு.க., தனது சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத்தை அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலத்திற்காக வழங்குவதாக அறிவித்தது. அதன்பிறகே, 144 தடையுத்தரவை அறிவித்து, ரூ.1000 உள்ளிட்ட சிறப்புத் தொகுப்பையும் அறிவித்தது எடப்பாடி அரசு.
 

ஊரடங்கு என்பதாலும் அ.தி.மு.க.வுக்குள் தொடரும் அதிகாரப் போட்டியினாலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்த நிலையில், தி.மு.க எம்.எல்.ஏக்கள் தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அவரவர் தொகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு வாங்க வேண்டிய கருவிகளக்காக நிதி ஒதுக்கினர். தி.மு.க. எம்.பிக்களும் இதனைக் கடைப்பிடித்தனர்.

 

mm


 

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தோழமைக் கட்சிகளும் வலியுறுத்தின. இந்த செய்திகள் வெளியான நிலையில்தான், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கரோனா பரவல் தொடர்பாக செய்தியாளர்களை சந்திக்கத் தொடங்கினார். அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி அரசியல் செய்ய முடியாது என்றார். அம்மா உணவகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அரசியல் இமேஜை உயர்த்தும் வேலைகளை மேற்கொண்டார்.  

 

ddd


 

தி.மு.க.வின் மாவட்டசெயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வீடியோ காலில் பேசிய மு.க.ஸ்டாலின், அவரவர் பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ளச் செய்தார். அதுமட்டுமின்றி, தி.மு.க.வின் மருத்துவர்கள் அணி ஒருங்கிணைப்பான பணியை மேற்கொள்ளும்படி செய்தார். கரோனாவுக்கான சிகிச்சைகளே முதன்மை பெற்றுள்ள நிலையில், ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்து மற்ற நோயாளிகள் தங்களின் மாதாந்திர அல்லது வாராந்திர சிகிச்சைக்கு என்ன செய்வது என்று தவித்த நிலையில், அவர்களுக்கு தி.மு.க.வின் மருத்துவர் அணி டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா தலைமையில் ஆன்லைன் வாயிலாக சிகிச்சை முறைகளை மேற்கொண்டது.

 

mm


 

இளைஞரணி சார்பில் தொடர்பு எண்ணை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார் உதயநிதி. அதில் தொடர்பு கொண்டவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள இளைஞரணி வாயிலாக உதவிகள் அளிக்கப்பட்டன. இதில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்பட அதிகம் கவனிக்கப்படாத மக்கள் பயன் பெற்றனர். தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் பலரும் அவரவர் மாவட்டங்களில் களமிறங்கி வேலை செய்தனர். இதில் சில இடங்களில் குறைபாடுகள் இருந்தன. முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசிய ஆடியோ வைரலாக்கப்பட்டது போன்ற நெருக்கடிகள் உருவாக்கப்பட்டன.

 

mm


 

களப்பணியைத் தொடர்ந்து மேற்கொண்டால் களங்கங்கள் சுமத்துபவர்ளால் ஒன்றும் செய்யமுடியாது என்று தி.மு.க. தலைமை தொடர்ந்து இத்தகைய பணிகளை வேகப்படுத்தியது. தி.மு.க.வின் தோழமைக் கட்சியினரும் பணிகளை மேற்கொண்டனர். எம்.பி. கனிமொழி இரவோடு இரவாக சென்னையிலிருந்து தனது தூத்துக்குடிக்கு சென்று உதவிகளை மேற்கொண்டது பெருமளவில் கவனம் பெற்றது.
 

இவையெல்லாம் அ.தி.மு.க.வினரை நேரடிக் களத்திற்கு வரவேண்டிய சூழலுக்குத் தள்ளியது. ஆனாலும், தி.மு.க.வும் பொதுநல அமைப்பினரும் தன்னார்வலர்களும் களத்தில் செய்யும் பணிக்கு அ.தி.மு.க.வின் பணி ஈடாகவில்லை. அதிலும், ஆளுங்கட்சியினரிடம் மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. பல ரேஷன் கடைகளில் அ.தி.மு.க.வினர் கரைவேட்டியுடன் நின்றுகொண்டு அதிகாரம் செய்தது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

 

ggg


 

ஆளுந்தரப்பு மீது அவநம்பிக்கையும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பிற அமைப்பினர் மீது எதிர்பார்ப்பும் அடித்தட்டு மக்களிடம் உருவான நிலையில்தான், தன்னிச்சையாக யாரும் நல உதவிகள் செய்யக்கூடாது என தமிழக அரசு அறிவித்தது. இது, பேரிடர் காலத்தில் மக்களுக்கு செய்யப்படும் அநீதி என தி.மு.க தரப்பு, நீதிமன்றத்தை நாடத் தொடங்க, தனது அறிவிப்பை மாற்றி வெளியிட வேண்டிய கட்டாயத்திற்குள்ளானது எடப்பாடி அரசு.
 

ஊரடங்கை நீடிப்பதற்கு முன்பு, மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்யவேண்டும் என்றும், மருத்துவர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் எனவும் முதல்வருக்கு ஆலோசனை தெரிவித்து  எதிர்க்கட்சித் தலைவர் கடிதம் எழுதினார். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார்” என பதில் அறிக்கை தந்தார்.
 

பதிலுக்குப் பதில் தந்த ஸ்டாலின், “சந்தர்ப்பாவாத அரசியலை கூவத்தூர் தொடங்கி இன்றுவரை தொடர்வது எடப்பாடிதான்” என்றும், “மக்கள் நலனுக்காக இந்த சந்தர்ப்பத்தில் பேசாமல் எந்த சந்தர்ப்பத்தில் பேசுவது?” என்றும் கேட்டார். மேலும், அமைச்சர் விஜயபாஸ்கர் ஓரங்கட்டப்பட்டது, தலைமைச் செயலாளரை முன்னிறுத்துவது என அ.தி.மு.க.வின் உள்அரசியலையும் வெளிப்படுத்தியதுடன், ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள்-அம்மா உணவகத்தினர் குறித்து முதலமைச்சர் முன்பு என்ன சொன்னார்-இப்போது என்ன சொல்கிறார் எனப் பலவித நிலைப்பாடுகளையும் அம்பலப்படுத்தினார்.
 

அமைச்சரவைக் கூட்டம் நடத்தியும் ஊரடங்கை நீட்டிக்கும் முடிவை அறிவிக்கத் தயங்கி, மத்திய அரசு சொல்கிறபடி நடப்போம் என மாநில உரிமைகளை அடகு வைக்கும் அ.தி.மு.கவை தி.மு.க. விமர்சித்தது. மாநில நலன் கருதி எதிர்க்கட்சியாக இருந்தபோதும் பிரதமரிடம், தமிழ்நாட்டுக்கான 9000 கோடி ரூபாய் நிதியை ஒதுக்க  தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு கோரிக்கை வைத்ததை முன்னிறுத்தியது. மருத்துவர்கள்-காவல்துறையினர்-தூய்மைப்பணியாளர்களின் தொண்டினை மதிப்பதாகவும், மக்கள் நலனுக்காக அரசு எடுக்கும் முடிவுகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் தி.மு.க. தெரிவித்தது.
 

இவையெல்லாமே கரோனா காலத்து அரசியல்தான். தி.மு.க கையாண்ட இந்த அரசியல் உத்தி, அ.தி.மு.க.வை நெருக்கடியில் தள்ளி, உடனடி முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கிவிட்டது.
 

முதலமைச்சர் அனைத்துக் கட்சி கூட்டாத நிலையில் ஏப்ரல் 15ஆம் தேதி திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்துவிட்டார் மு.க.ஸ்டாலின். 
 

பேரிடர் காலத்தில் அரசியல் செய்யலாமா என்பது பொதுவான கேள்வி. தேர்தல் கால வாக்கு(றுதி) அரசியலைவிட பேரிடர் கால மக்கள் நன்மைக்கான அரசியல் கட்டாயம் தேவைதான். அந்த அரசியல் தொடரவேண்டும்.   

 


 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

தண்ணீர் தட்டுப்பாடு ; தாக்குபிடிக்குமா 'சென்னை'

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Water scarcity; Attacking 'Chennai'

கோடைகால வெயிலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும் மேற்கொண்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்கும் உப்பு சர்க்கரை கரைசல் எனும் ஓ.ஆர்.எஸ் கரைசலை ஆயத்தமாக வைத்திருக்க தமிழக சுகாதாரத்துறைக்கு அரசு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. 

கோடை காலங்களில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெயிலின் தாக்கத்தை தனித்து கொள்வதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தாண்டி மூன்றாவது காரணியாக பார்க்கப்படுவது குடிநீர் தட்டுப்பாடு. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது போன்ற செய்திகள் தென்படுவதே இதற்கான சான்று. அதேபோல் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை அதிகம் கையாளும் இடமாக சென்னை உள்ளது. பல்வேறு ஏரிகளில் உள்ள நீர் இருப்பை நம்பியே சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு நீக்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் மிக முக்கியமான ஏரி புழல் ஏரி. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது புழல் ஏரியில் இருக்கும் நீரின் அளவு 2,942 மில்லியன் கன அடி ஆகும். வினாடிக்கு 570 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 217 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்து சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சோழவரம் ஏரி. 1,080 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 118 மில்லியன் கன நீர் மட்டுமே உள்ளது. தற்போது நீர்வரத்து இல்லாத நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து 168 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  அடுத்தது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை குடிநீர் தேவையில் முக்கிய பங்காற்றுகிறது. மொத்தம் 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது நீர் இருப்பு 2,384 மில்லியன் கன அடியாக இருக்கிறது. நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 46 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னையின் அடுத்த குடிநீர் ஆதாரம் பூண்டி ஏரி. 3,231 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு 978 மில்லியன் கன அடியாக உள்ளது. இந்த ஏரிக்கும் நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 525 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டு காணப்படும் நிலை இருக்கிறது. 1,475 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு கணக்கிட முடியாத அளவிற்கு மிகவும் குறைவாக இருக்கிறது. வீராணம் ஏரியில் நீர்வரத்தும் இல்லை நீர் வெளியேற்றமும் இல்லாத சூழ்நிலை இருக்கிறது.

இப்படி மொத்தமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.75 டிஎம்சி ஆக இருக்கிறது. இதில் வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு விட்ட நிலையில் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் தற்பொழுது 6.88 டிஎம்சி நீர் மட்டுமே இருக்கிறது. வரும் கோடை காலத்தில் இந்த அளவு தண்ணீரே சென்னையின் குடிநீர் பிரச்சனையை தீர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.