Skip to main content

பயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது... திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் எடப்பாடி... அதிர்ச்சியில் ஸ்டாலின்!

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

தமிழக சட்டமன்றத்தில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தின் தொடர்ச்சியாக துறைரீதியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடந்து வருகின்றன. கடந்த 9-ந் தேதியிலிருந்து நடந்துவரும் இந்த கூட்டத்தொடர் எவ்வித விறுவிறுப்புமின்றி நகர்வதால் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலரும் நீண்ட நேரம் இருக்கையில் அமர்வதில்லை. அடிக்கடி வெளியே சென்று பொழுதுபோக்கி வருகின்றனர்.
 

admk



ஓரிரு சம்பவங்கள் தவிர எவ்வித சுவாரஸ்யமும் கடுமையான விவாதங்களும் இல்லாத நிலையில், அடுத்த முறை யார் ஆட்சி அமைப்பது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கும் கடந்த 17-ந் தேதி ஏற்பட்ட மோதல் சட்டமன்றத்தை பரபரப்பாக்கியது. இந்த மோதலின் இடையே தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபத்தை காட்டினார் எடப்பாடி.

கடந்த 17-ந் தேதி உள்ளாட்சித்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அதில் பேசிய சட்டமன்ற தி.மு.க. கொறடா சக்கரபாணி, "உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சில்களில் 243 இடங்களையும், ஒன்றிய கவுன்சில்களில் 2,100 இடங்களையும் கைப்பற்றியிருக்கிறோம். உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒட்டுமொத்தமாக தேர்தல் நடத்தியிருந்தால் நாங்கள்தான் ஜெயித்திருப்போம். நேரடியாக இருந்த மேயர் தேர்தலை எதற்கு மறைமுக தேர்தலாக மாற்றினீர்கள்? அப்படின்னா, ஜெயிக்கமாட்டோம்ங்கிற பயம்தானே! ஆனா, 2021 சட்டமன்றத்தேர்தலிலும் நீங்களே ஜெயித்து ஆட்சிக்கு வரப்போவதாகச் சொல்லுகிறீர்கள். இந்த ஆட்சி மீது மக்கள் எவ்வளவு கோபமாக இருக்கிறார்கள் என்பதை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளே காட்டியிருக்கிறது'' என்றார்.

 

dmk



அதற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளிக்க எத்தனித்த போது, தானே பதில் சொல்ல எழுந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது, "பயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது. எங்களுடைய செல்வாக்கு மக்களிடத்தில் எப்போதும் சரியவில்லை. உங்களால் நிறைவேத்த முடியாத பல கவர்ச்சிக்கரமான வாக்குறுதிகளை நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்தீர்கள். அதில் மயங்கி உங்களுக்கு வாக்களித்தனர். ஆனால், தேர்தலுக்குப் பிறகு உண்மையை உணர்ந்துகொண்டதால் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் உங்களுக்கு தோல்வியை தந்தார்கள். எங்களுக்கு வெற்றி கிடைத்தது. மக்கள் செல்வாக்கு எங்களுக்கு கூடியிருக்கிறதே தவிர, குறையவில்லை'' என்றார்.


எடப்பாடியின் இந்த குற்றச்சாட்டை உடனே எதிர்கொண்ட மு.க.ஸ்டாலின், "விரைவில் வரவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியுடன் ஆட்சிப் பொறுப்புக்கு வருவோம். நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். 2021-ல் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம்'' என்று பதிலடி தந்தார். ஆனால், இதற்கு அசராத எடப்பாடி, "சட்டமன்றத் தேர்தலில் (2021) சொல்ல வேண்டியதை நாடாளுமன்ற தேர்தலின்போது எதற்கு சொன்னீர்கள்? ஆட்சியில் இல்லாத நிலையில் எப்படிச் சொன்னீர்கள் ? இடைத்தேர்தலிலேயே மக்கள் எங்களுக்குத்தான் வெற்றியை தந்திருக்கிறார்கள். அதே மனநிலையுடன் சட்டமன்றத் தேர்தலிலும் எங்களைத்தான் ஆதரிப்பார்கள்'' என்றார் ஆவேசமாக.

எடப்பாடி இப்படி பேசிக்கொண்டிருக்கும்போதே, தி.மு.க. எம்.எல்.ஏ. ஆஸ்டின் குறுக்கிட்டு சில வார்த்தைகளைச் சொல்ல... அதனால் கோபமடைந்த எடப்பாடி, ""உங்களுக்கு என்னதான் பிரச்சனை? நான் பேசும்போது எதுக்கு குறுக்கிடுகிறீர்கள்? இதெல்லாம் தவறுங்க...'' என கடுமையாக கோபத்தைக் காட்ட அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்களிடையே ஏகத்துக்கும் அமளி ஏற்பட்டது. எடப்பாடியின் கோபத்தை கண்டு ஸ்டாலினும் துரைமுருகனும் அதிர்ச்சியடைந்தனர். எடப்பாடியின் கோபத்துக்கு தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் ஆவேசம் காட்ட, "ஆட்சி அமைக்கப்போவது நீங்களா? நாங்களா?' என்கிற ரேஞ்சுக்கு சபையில் கூச்சல் அதிகரித்தது.


உடனே இதில் தலையிட்ட சபாநாயகர் தனபால், ""முதல்வர் பேசும்போது உறுப்பினர்கள் அமைதி காப்பது மரபு. இதை நீங்கள் கடைப்பிடிப்பிடிப்பதாக தெரியவில்லை. உங்களுக்கு இது இறுதி எச்சரிக்கை. மீண்டும் இதேமாதிரி நடந்துகொண்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்'' என ஆஸ்டினை கண்டித்தார். அப்போது எழுந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஏற்கனவே 2, 3 முறை அவரை கண்டித்து இறுதி எச்சரிக்கையும் செய்திருக்கிறீர்கள் என நினைவுபடுத்த... "ஆஸ்டினை இன்று ஒரு நாள் சபையிலிருந்து வெளியேற்றுகிறேன்' என்று உத்தரவிட்டார் தனபால்.

இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டாலினின் பதிலுக்கு பதில் சொல்வதை மீண்டும் தொடர்ந்தார் எடப்பாடி. அப்போது, ஆஸ்டினை சபையிலிருந்து வெளியேற்ற காவலர்கள் உள்ளே நுழைந்தனர். அதனைக்கண்டு எழுந்த துரைமுருகன், ""ஆஸ்டின் நடந்து கொண்டது தவறுதான். அவர் மீதான நடவடிக்கையை கைவிடலாம்'' என சொல்ல, "இனியும் அதேபோல் நடக்காது என எதிர்க் கட்சித்தலைவரும் துணைத்தலைவரும் உத்தரவாதம் தந்தால் பரிசீலிக்கலாம்'' என்றார் ஓ.பி.எஸ். இதனையடுத்து துரைமுருகன் உத்தரவாதம் தர, ஆஸ்டின் மீதான தண்டனையை நிறுத்தி வைப்பதாகச் சொன்னார் சபாநாயகர்.

இந்த நிலையில், டி.என். பி.எஸ்.சி. ஊழல்களைப் பற்றி விவரித்த தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், ஊழல்களுக்கு பொறுப்பேற்று துறையின் அமைச்சரும் (ஜெயக்குமார்), முதல்வரும் (எடப்பாடி பழனிச்சாமி) ராஜினாமா செய்யவேண்டும்'' எனச் சொல்ல... அமைச்சர்களும் அ.தி. மு.க. எம்.எல்.ஏ.க்களும் பதிலுக்கு ஆவேசப்பட, மீண்டும் பதட்டமும் பரபரப்புமானது சட்டமன்றம். கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் பரபரப்பின்றி நகர்ந்த சட்டமன்ற கூட்டத்தில் தற்போது கோபம், ஆவேசம், எச்சரிக்கை, விவாதம், அமளி என சூடு பிடித்துள்ளது.


 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.