Skip to main content

கடைசி கேள்வி, சந்திப்பு, கையெழுத்து - ராஜீவ்காந்தி மரண நொடிகள்

Published on 21/05/2018 | Edited on 22/05/2018

ராஜீவ்காந்தியின் 27-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடுமுழுவதும் அனுசரிக்கப்பட்டுவருகிது. அவர் உயிரிழப்பதற்கு முன் அவருடைய கடைசி கூட்டம், கடைசி சந்திப்பு, கடைசி கேள்வி, கடைசி கையெழுத்து என அவருடைய அந்த இறுதி நிகழ்வுகள் நமது நக்கீரனில் அன்று பிரசுரமானது. அது தற்போது மீண்டும் உங்களுக்காக,
 

rajeev

 


கடைசி கூட்டம்!

 

ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் பூந்தமல்லியில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார மேடையில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரையும், பூந்தமல்லி காங்கிரஸ் வேட்பாளர் சுதர்சனத்தையும் ஆதரித்து பேசினார் ராஜீவ். 

 

அப்போது நேரம் இரவு ஒன்பதரை மணி, கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த ''மைக்'' சரிவர வேலை செய்யாததால்  மைக் இல்லாமலே சில நிமிடங்கள் பேசினார். ரஜீவ்காந்தி பேசிய கடைசி பொதுக்கூட்டம் இதுதான்.

 

கடைசி கேள்வி!

 

வழக்கமாக சென்னை வரும்போதெல்லாம் நிருபர் கூட்டத்திற்கு அதிக நேரம் செலவிடமாட்டார் ராஜீவ்.. ஆனால் விசாகப்பட்டணத்திலிருந்து சென்னை வந்து சேர்ந்தவுடன், விமான நிலையத்தில் சுமார் பதினைந்து நிமிடங்கள் நிருபர்களுடன் சிரித்துப் பேசியபடி கலகலப்பாக பேட்டியளித்தார். பேட்டி முடிந்தவுடன் '' அவ்வளவுதானா..? கேள்விகள் அதற்குள் தீர்ந்துவிட்டதா..?'' என்று கேட்ட ராஜீவ் ''யாராவது கடைசியாக ஒரு கேள்வி கேளுங்கள்...'' என்றார்.

 

''தமிழ்நாட்டில் உங்கள் கூட்டணி ஆட்சியைப் பிடித்தால்  காங்கிரஸ், மந்திரி சபையில் பங்கேற்குமா...?'' என்று அந்தக் கடைசி கேள்வியை கேட்டார் ஒரு நிருபர்.

 

''இந்த யோசனையெல்லாம் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது'' என்று சிரித்தபடி கேட்ட ராஜீவ் . தமிழ்நாட்டில் அதிமுகவே தனியாக அமைச்சரவை அமைக்கும் என்றார். ஆனால் ராஜீவின் வாழ்க்கையிலேயே அதுதான் கடைசி கேள்வி என்பது யாருக்கும் தெரியவில்லை...

 

rajeev

 

 

கடைசி சந்திப்பு!

 

மரணம் நிச்சயிக்கப்பட்டது தெரிந்துதானோ என்னவோ, கடைசி நேரத்தில் தன் முன்னோர்களை சிலை வடிவில் சந்தித்தார்.

 

சென்னை விமான நிலையத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் கத்திப்பாரா சந்திப்பில் காரை நிறுத்தி அங்கிருந்த பிரமாண்டமான நேரு சிலையை பார்த்துவிட்டு கிளம்பினார்.

 

அதேபோல் ஸ்ரீபெரும்புதூர் கூட்ட மேடைக்கு செல்லும் முன் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்தார் அவர்.

 

 

கடைசி கையெழுத்து!

 

ராஜீவ் விமான நிலையத்தில் இருந்து சென்னையில் இறங்கியதும் அவரை பார்க்க அனுமதிக்கப்பட்டிருந்த ஒரே நடிகை, சமீபத்தில் (1991-ஆம் ஆண்டு காலகட்டத்தில்) காங்கிரஸில் சேர்ந்த ஜெயசித்ரா.

 

ராஜீவை சந்தித்த ஜெயசித்ரா அவர் கொண்டுவந்த ரோஜா மலர்களை கொடுத்து பொன்னாடை போர்த்தியிருக்கிறார். மேலும் தஞ்சாவூர் தட்டும் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்களும் தெரிவித்திருக்கிறார்.

 

 

ராஜீவ் மிகவும் சந்தோஷமாக இருப்பதை பார்த்ததும் அவரது ''புதிய ராகம்'' படத்திற்கான வாழ்த்து அட்டையில் கையெழுத்து போட்டு தர கேட்டிருக்கிறார். ''படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருப்பதால் ஒன்றும் பிரச்னை இல்லையே'' என்று கேட்டிருக்கிறார். படம் ஜூன் 15-ல் ரிலீஸ் ஆகிறது, நீங்கள் கையெழுத்து போடுங்கள் என்று கேட்டதும் சந்தோசமாக கையெழுத்து போட்டுக்கொடுத்தார். அதுதான் அவர் போடப்போகும் கடைசி கையெழுத்து என்பது தெரியாமல்...

 

ராஜீவ் அதே சந்தோஷத்தோடு வேறு என்ன விஷயம் என்று கேட்க ''நேரம் இருக்கும் போது  இதைக் கேட்டுப்பாருங்கள்'' என்று புதிய ஆடியோ கேசட்டும் கொடுத்திருக்கிறார்.

வாங்கிய கேசட்டை போட்டு கேட்க முடியமால் அவரது வாழ்கை முடிந்து போனது. 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

தண்ணீர் தட்டுப்பாடு ; தாக்குபிடிக்குமா 'சென்னை'

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Water scarcity; Attacking 'Chennai'

கோடைகால வெயிலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும் மேற்கொண்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்கும் உப்பு சர்க்கரை கரைசல் எனும் ஓ.ஆர்.எஸ் கரைசலை ஆயத்தமாக வைத்திருக்க தமிழக சுகாதாரத்துறைக்கு அரசு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. 

கோடை காலங்களில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெயிலின் தாக்கத்தை தனித்து கொள்வதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தாண்டி மூன்றாவது காரணியாக பார்க்கப்படுவது குடிநீர் தட்டுப்பாடு. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது போன்ற செய்திகள் தென்படுவதே இதற்கான சான்று. அதேபோல் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை அதிகம் கையாளும் இடமாக சென்னை உள்ளது. பல்வேறு ஏரிகளில் உள்ள நீர் இருப்பை நம்பியே சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு நீக்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் மிக முக்கியமான ஏரி புழல் ஏரி. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது புழல் ஏரியில் இருக்கும் நீரின் அளவு 2,942 மில்லியன் கன அடி ஆகும். வினாடிக்கு 570 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 217 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்து சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சோழவரம் ஏரி. 1,080 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 118 மில்லியன் கன நீர் மட்டுமே உள்ளது. தற்போது நீர்வரத்து இல்லாத நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து 168 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  அடுத்தது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை குடிநீர் தேவையில் முக்கிய பங்காற்றுகிறது. மொத்தம் 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது நீர் இருப்பு 2,384 மில்லியன் கன அடியாக இருக்கிறது. நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 46 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னையின் அடுத்த குடிநீர் ஆதாரம் பூண்டி ஏரி. 3,231 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு 978 மில்லியன் கன அடியாக உள்ளது. இந்த ஏரிக்கும் நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 525 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டு காணப்படும் நிலை இருக்கிறது. 1,475 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு கணக்கிட முடியாத அளவிற்கு மிகவும் குறைவாக இருக்கிறது. வீராணம் ஏரியில் நீர்வரத்தும் இல்லை நீர் வெளியேற்றமும் இல்லாத சூழ்நிலை இருக்கிறது.

இப்படி மொத்தமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.75 டிஎம்சி ஆக இருக்கிறது. இதில் வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு விட்ட நிலையில் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் தற்பொழுது 6.88 டிஎம்சி நீர் மட்டுமே இருக்கிறது. வரும் கோடை காலத்தில் இந்த அளவு தண்ணீரே சென்னையின் குடிநீர் பிரச்சனையை தீர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.