Skip to main content

எவ்வளவு சமைத்தீர்கள். எத்தனை பேர் வந்து சாப்பிட்டார்கள்... அம்மா உணவகத்தில் இப்படியா? அதிர வைத்த ரிப்போர்ட்!

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

தமிழகத்தில் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட சென்னையில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், அத்தியாவசிய உணவுத் தேவைக்காக அல்லல்படும் மக்களுக்காக அம்மா உணவகங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்று அறிவித்தது தமிழக அரசு.

மேலும், சென்னையில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, சென்னை மாநகராட்சி மூலமாக கிருமிநாசினி தெளித்தல், தங்கு தடையில்லாமல் தண்ணீர் வழங்குதல், தெருக்களைச் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்கு அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

 

admk



ஒருவேளை உணவிற்கே வழியில்லாத ஆதரவற்றோர், வெளிமாநிலத்தில் இருந்து வேலைதேடி வந்து திரும்பிச் செல்ல வழியில்லாமல் தவிப்போர் என அனைவருக்கும் அம்மா உணவகமே கதி என்ற நிலையில், பல இடங்களில் அம்மா உணவங்கள் சரிவர இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

admk



தமிழகம் முழுவதும் மொத்தமாக 654 அம்மா உணவகங்கள் இயங்குகின்றன. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டுமே 407 உணவகங்கள் இருக்கின்றன. அரசு பொது மருத்துவமனைகளிலும், மற்ற பிரதான இடங்களிலும் இயங்கிவரும் இந்த உணவகங் களுக்கு ஆகும் செலவும் 2013 முதல் 2019 வரை நூறு கோடி ரூபாயைத் தாண்டுகிறது. ஆனால், வரவோ 60 கோடி ரூபாய்தான். இருப்பினும், ஏழை மக்களின் துயர் தீர்க்கும் திட்டம் என்பதால், நஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் 2019-20 ஆண்டிற்காக 12.7 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியது தமிழக அரசு.

இதில் காலை 7 மணிமுதல் 10 மணிவரை இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் ஐந்து ரூபாய்க்கும் கிடைக்கிறது. மதியம் 12 மணியில் இருந்து 1 மணி வரை விதவிதமான சாத வகைகள் ஐந்து ரூபாய்க்கும், மூன்று ரூபாய்க்கும் கிடைக்கிறது. இரவில் இரண்டு சப்பாத்திகள் மூன்று ரூபாய்க்கும் கிடைப்பதால், பலரும் பயனடைகின்றனர். ஆனால், இந்தப் பயன் எல்லா அம்மா உணவகங்களிலும் கிடைப்பதில்லை.

 

admk



சென்னையில் பிராட்வே பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அம்மா உணவகத்தில் சமையல் செய்யும் பெண்களுக்கு, இந்த கொரோனா காலத்திலும் கையுறைகளோ, முகக் கவசமோ கொடுக்கப்படவில்லை. அதிகாரிகள் அதையெல்லாம் தருவதில்லை என்று அங்கு பணிபுரியும் பெண்கள் தெரிவித்தனர். அதேபோல், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் இரவு ஒன்பது மணிவரை கொடுக்கவேண்டிய உணவு, மாலை 6.30 மணிக்கே முடிந்துவிட்டது என்று அறிவித்துவிட்டார்கள். பசியோடு அங்கு வந்த சிறுவர்கள், இதைக்கேட்டு வாடிய முகத்துடன் திரும்பிச் சென்றனர். இதுபற்றி அங்கு பணிபுரிகிறவர்களிடம் கேட்டபோது, நூறு சப்பாத்தி தான் போட்டோம். அதுவும் சீக்கிரமே காலியாகிவிட்டது என்றனர்.


முதன்முதலில் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட சாந்தோம் பகுதியில், தற்போதுள்ள அமைச்சர் ஜெயக்குமாரின் வீட்டிற்கு முன்பாக இருக்கும் அம்மா உணவகம், மாலை 7 மணிக்கே மூடப்பட்டு இருந்தது. அங்குவந்த சுபாஷ் என்பவர், எப்போ திறப்பாங்க, மூடிட்டுப் போவாங்கன்னு யாருக்குமே தெரியாது சார். கேட்டா காலியிகிடுச்சு அவ்வளவுதான்னு அசால்டா சொல்லிடுவாங்க. நாங்க என்ன செய்ய முடியும் என்றார் பரிதாபமாக.

சுபாஷிடம் நாம் பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென காரில் வந்த ஒருவர் உள்ளே சென்று விசாரித்தார். நாமும் பேச்சை நிறுத்துவிட்டு உள்ளே சென்று பார்த்தபோது, அவர்களை லெஃப்ட், ரைட் வாங்கிக் கொண்டிருந்தார். எவ்வளவு சமைத்தீர்கள். எத்தனை பேர் வந்து சாப்பிட்டார்கள் என கேள்விகளை அவர் அடுக்கிக்கொண்டே போனபோது, பேச முடியாமல் திகைத்து நின்றனர் பணியாளர்கள் கண்ணியம்மாளும், தனஜா குமாரியும். பிறகுதான், காரில் வந்தவர் இந்தப் பகுதியின் ஆர்.ஐ. அமுதா என்பதும், இந்த உணவகத்தில் இது தொடர்கதையாக இருப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுவதால் விசாரிக்க வந்ததும் தெரியவந்தது.


மனிதாபிமான அடிப்படையில் எளியோரின் பசியாற்றும் இந்தத் திட்டத்தில் இத்தனை மோசடிகள் மண்டிக் கிடப்பதா என்ற கேள்வியை சமூக ஆர்வலர் பூவுலகின் சுந்தரராஜனிடம் முன்வைத்தோம்& நகர்ப்புறத்தில் வாழக்கூடிய ஏழை, எளிய மக்களுக்கு மிகப்பெரிய உணவு ஆதாரம் அம்மா உணவகம். கொரோனா போன்ற பேரிடர் சமயத்தில்தான், அம்மா உணவகங்களின் முக்கியத்துவம் பலருக்கும் தெரியவருகிறது. இந்தமாதிரி சமயத்தில் கூட, சரிசவர செயல்படாமல் இருந்தால் அது தவறு. சென்னை செண்ட்ரலில் தவித்திருந்த வெளிமாநிலத்தவர்களுக்கு சிந்தாதிரிப் பேட்டை சமுதாயக்கூடத்தில் தஞ்சம் கொடுத்த தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்கிறோம். அதேபோல், அம்மா உணவகத்தையும் உரிய பாதுகாப்புடன் முன்னெடுப்பது அரசின் கடமை என்று வலியுறுத்துகிறார்.

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.