Skip to main content

தடையை மீறி ஜெ. நினைவிடத்திற்கு வருவார் சசிகலா - தேனி கர்ணன் தடாலடி!

Published on 05/02/2021 | Edited on 05/02/2021

 

jkh

 

சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூன்று பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தலா 4 வருடம் சிறை தண்டனை விதித்து கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, அவரின் தண்டனை காலத்தை தற்போது நிறைவு செய்துள்ளார். கரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தற்போது மருத்துவமனையில் இருந்து பெங்களூரு புறநகரில் இருக்கும் தனியார் விடுதிக்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ளார். வரும் 8ம் தேதி சசிகலா தமிழகம் வர உள்ள நிலையில், ஜெயலலிதா சமாதி திடீரென மூடப்பட்டுள்ளது. இதில் அரசியல் காரணங்கள் இருக்கிறதா என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளை சசிகலா ஆதரவாளர் தேனி கர்ணனிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் பின்வருமாறு, 

 

திருமதி சசிகலா அதிமுகவில் வர முடியாது என்று அக்கட்சியைச் சேர்ந்த முன்னணியினர் தொடர்ந்து கூறிக்கொண்டு வருகிறார்களே? 

 

அதிமுகவின் பொதுச்செயலாளரே அவர்கள்தான். அவர்களை யார் எதிர்ப்பது? அந்த அதிகாரம் அவர்களுக்கு யார் கொடுத்தது. இந்த ஆட்சி அதிகாரம் இருக்கின்ற வரையில்தான் இந்த நிர்வாகிகள் எல்லாம் எடப்பாடி பக்கத்தில் இருப்பார்கள். ஆட்சி அதிகாரம் முடிந்தால் தானாக அவர்கள் அனைவரும் வெளியேறி விடுவார்கள். கட்சி தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்களோ அவர்தான் அதிமுகவின் பொதுச்செயலாளர். அந்த வகையில் தொண்டர்கள் அனைவரும் சசிகலாவின் பக்கம் இருக்கிறார்கள். எனவே அவர்தான் கழகத்தின் பொதுச்செயலாளர். அதை யாராலும் மாற்ற முடியாது. 

 

மருந்துவனையில் இருந்து சசிகலா அவர்கள் வெளியே வரும்போது அதிமுக கொடியைப் பயன்படுத்தியுள்ளார். இது தவறானது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்களே?

 

என்ன நடவடிக்கை எடுப்பீர்கள், எடுங்கள். என் காரில் அதிமுக கொடியைத்தான் கட்டியுள்ளேன். அவர் அதிமுகவின் உண்மையான பொதுச்செயலாளர். அவர் அதிமுக கொடியைக் கட்டாமல் வேறு எந்த கொடியைக் கட்டுவார்கள். அதிமுக எங்கள் சொத்து. எங்கள் கொடி கட்டக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. கடைக்கோடி தொண்டனுடைய சொத்து. எங்களைக் கொடிகட்ட வேண்டாம் என்று எவன் சொல்லுவான். யாருக்கும் அந்த அதிகாரம் கிடையாது. நாங்கள் எல்லாம் பரம்பரை பரம்பரையாக அதிமுக, எங்கள் குடும்பம் கட்சிக்காக ரத்தம் சிந்திய குடும்பம். நாங்கள் கொடி கட்டாமல் யார் கட்டுவது. 

 

கட்சி அவர்களிடம் இருக்கிறது, ஆட்சி அவர்களிடம் இருக்கிறது. கட்சியில் எந்தக் குளறுபடியும் இல்லை. அப்படி இருக்கையில் அதிமுகவை எப்படி மீட்டெடுப்பீர்கள்?

 

இந்த ஆட்சி இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கப் போகிறது. சரியாக இரண்டு மாதங்களுக்கு மேல் இந்த ஆட்சி இருக்காது. எடப்பாடி பழனிசாமி இவ்வளவு துரோகியா என்று அவரின் பக்கத்தில் இருக்கும் அல்லக்கைகளுக்கே மனசு உறுத்திக்கொண்டு இருக்கிறது. கோழி குஞ்சை பாதுகாப்பது போல சட்டமன்ற உறுப்பினர்களைப் பாதுகாத்து, இதோ என் சகோதரர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்தெடுக்கப்படுகிறார் என்று அறிவித்த சசிகலாவுக்கு இன்றைக்கு இவர்கள் அனைவரும் சேர்ந்து துரோகம் செய்துள்ளார்கள். நாங்கள் எதிரியோடு பயணிப்போம். துரோகியோடு பயணிக்க மாட்டோம். அந்த துரோகி யார் என்று உங்களுக்கே தெரியும். 

 

இந்த விஷயத்தில் சசிகலா அவர்கள்தானே முடிவெடுக்க வேண்டும்?

 

நிச்சயம் அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் அவர் துரோகியோடு பயணிக்க மாட்டார்கள் என்பது மட்டும் நூறு சதவீதம் உண்மை. தொண்டர்களைப் பாதுகாக்கத்தான் நாங்கள் தனி அணி அமைத்து செயல்பட்டோம். தற்போது அதற்கான தேவை இல்லை. எங்கள் பொதுச்செயலாளர் வந்துவிட்டார். அவர் தொண்டர்களையும் எங்களையும் பார்த்துக்கொள்வார்கள்.

 

கே.பி முனுசாமி மன்னிப்பு கடிதம் கொடுத்தால் டிடிவி.தினகரனை அதிமுகவில் சேர்ப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது சசிகலாவுக்கும் பொருந்துமா?

 

யாரு, யாருகிட்ட மன்னிப்பு கடிதம் கேட்பது என்ற அறிவு வேண்டாமா? அம்மா அவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்தான் கே.பி முனுசாமி. இரண்டு தேர்தல்களில் தோல்வி அடைந்தார். எதனால் அவர் தோல்வி அடைந்தார். அதிமுக எம்எல்ஏக்கள் போட்ட பிச்சையினால் இன்றைக்கு மாநிலங்களவை எம்பி ஆக உள்ளார். அம்மா இருந்தா இவர் எம்பி ஆக முடியுமா? 

 

திருமதி சசிகலா சென்னை வந்தால் என்ன நடக்கும்?

 

அதிமுக தொண்டர்களுக்கு நல்லது நடக்கும். கோடிக்கணக்கான தொண்டர்களுக்கு நல்லது நடக்கும். இதில் என்ன சந்தேகம் இருக்கு.  என்ன தடை போட்டாலும் அம்மா சமாதிக்கு அவர்கள் வருவார்கள், அஞ்சலி செலுத்துவார்கள். அதைப் போல் ராயபேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்துக்கும் செல்வார்கள். அவரை முடிந்தால் தடுத்துப் பாருங்கள். 8ம் தேதி பாருங்கள், தமிழகம் ஸ்தம்பித்துப் போகிறதா இல்லையா என்று. கோடிக்கணக்கான தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். பொறுத்திருந்து பாருங்கள், என்ன நடக்க இருக்கிறது என்று. யாராலும் சின்னம்மாவிற்கு அணை போட முடியாது. புயலென அவர்கள் சென்னை வருவார்கள். 

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.