
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 80 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபரை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தராசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் சவுக்கு தோப்பை ஒட்டியுள்ள உள்ள சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பொழுது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த நான்கு பேர் சவுக்குத் தோப்புக்குள் மூதாட்டியை அழைத்துச் சென்று வாயில் மண்ணை திணித்து பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.
மயங்கிய நிலையில் கிடந்த மூதாட்டியைக் கண்ட அக்கம்பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சுந்தரவேலு என்பவர் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூரில் பதுங்கி இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. அங்கு முந்திரி காட்டில் பதுங்கி இருந்த சுந்தரவேலுவை போலீசார் பிடிக்க முயன்ற பொழுது சுந்தரவேல் போலீசாரை தாக்க முயன்றதால் போலீசார் சுந்தரவேலை காலில் சுட்டுப் பிடித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சுந்தரவேலு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல் சுந்திரவேலு நடத்திய தாக்குதலில் காயமடைந்த போலீசாரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நான்கு பேரில் சுந்தரவேல் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற மூன்று பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.