Skip to main content

தெரியாது என சொன்ன மந்திரி மகன்! ஷாக் ஆன அ.தி.மு.க தலைமை! மிரட்டி மீட்ட 300 சி!

Published on 09/11/2020 | Edited on 09/11/2020
rrrr

 

 

காய்ச்சல்- நீர்ச்சத்து குறைபாடு என்று சொல்லப்பட்டு சிகிச்சைக்குள்ளான ஜெயலலிதாவின் மரணத்தை போலவே கரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணமும் சர்ச்சைகளில் சிக்கி தவிக்கிறது என்கிறார்கள் அவரது சொந்த தொகுதியான பாபநாசம் தொகுதி மக்கள்.

 

அக்டோபர் 12ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயாரின் இறப்புக்கு ஆறுதல் சொல்ல பாபநாசத்தில் இருந்து சேலத்தை நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்த அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவரை விழுப்புரம்- முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். அங்கிருந்து சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

 

31ஆம் தேதி நள்ளிரவு 11.45 மணிக்கு அமைச்சர் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 28ஆம் தேதியே தஞ்சை பகுதியைச் சேர்ந்தவர்களின் வாட்ஸ் ஆப்பில், அமைச்சர் மரணம் அடைந்துவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஷேர் செய்யப்பட்டன. சென்னையில் உள்ள தங்களுக்கு வேண்டியவர்களிடம், அமைச்சரின் நிலை குறித்து தஞ்சை வாசிகள் விசாரித்தபடி இருந்தனர். அதனால்தான், அவருடைய அதிகாரப்பூர்வ மரண அறிவிப்பு வெளியானபோது, அமைச்சரின் மரணத்தில் மர்மம் இருக்கிறது அவர் மூன்று நாட்களுக்கு முன்பே மரணம் அடைந்துவிட்டார், அதைத் தாமதமாக அறிவிக்கிறார்கள் என சமூக வலைத்தளங்களில் பரபரப்பான செய்திகள் வெளியாகின.

 

ddd

 

இந்த செய்திகள் குறித்து விளக்கம் அறிய நாம் அமைச்சரின் மகனான ஐயப்பன் என்கிற சண்முகப்பிரபுவை தொடர்பு கொண்டோம். அமைச்சர் இறப்பின் துக்கத்தால், இன்று வரை செல்போனில் யாருடனும் ஐயப்பன் பேசுவதில்லை என்கிற பதிலே நமக்கு கிடைத்தது. அமைச்சரின் பி.ஏ.வான நாகப்பன் என்பவரையும் தொடர்பு கொண்டோம். அவரும் செல்போனை எடுக்கவில்லை. அமைச்சரின் மூத்த மகனான வீரபாண்டியனை தொடர்பு கொண்டோம். வேளாண்மைத் துறையில் விதை ஆய்வு உதவி இயக்குநராக உள்ள அவரும் நமக்கு பதில் அளிக்கவில்லை. அமைச்சரின் மருமகனான கனகாதரனைத் தொடர்பு கொண்டபோதும் பதில் கிடைக்கவில்லை.

 

முயற்சியைக் கைவிடாமல், திருவிடைமருதூர் அ.தி.மு.க. நிர்வாகியான அசோக் என்பவர் மூலம் அமைச்சரின் மகன் ஐயப்பனிடம் பேச முயற்சித்தபோதும், தந்தை இறந்த சோகத்தில் இருப்பதால் அமைச்சரின் மகன் யாருடனும் பேசுவதில்லை என திருவிடைமருதூர் அசோக் மூலம் நமக்கு பதில் கிடைத்தது.

 

ddd

 

அமைச்சர் துரைக்கண்ணு பாபநாசம் தொகுதி மக்களிடம் நற்பெயரை பெற்றவர். அதனால்தான் தொடர்ந்து மூன்று முறை அந்தத் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016ல் அவரை ஜெயலலிதா அமைச்சராக்கினார். அவருக்கு நான்கு பெண் பிள்ளைகள், இரண்டு ஆண் பிள்ளைகள். அதில் துபாய் மற்றும் சிங்கப்பூரில் பணியாற்றிவிட்டு தமிழகம் வந்த ஐயப்பன் மீது மட்டும் அமைச்சரின் துறை சார்ந்த புகார்கள் கிளம்பின. வெளிநாட்டு தொடர்புகள், லோக்கல் ரவுடிசம் என மேலும் புகார்களில் சிக்கிய ஐயப்பனுக்கும் அ.தி.மு.க.வின் சீனியர் தலைவரான வைத்திலிங்கத்துக்கும் இடையே மோதல் இருந்தது. ஆனால் துரைக்கண்ணு எடப்பாடியின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தார்.

 

டெல்டா பகுதியில் சீனியரான வைத்திலிங்கம், உணவு அமைச்சர் காமராஜ் ஆகியோரைவிட வேளாண் அமைச்சராக இருந்த துரைக்கண்ணுவைத்தான் எடப்பாடி அதிகம் நம்பினார் என துரைக்கண்ணுவின் ஆளுமையைப் பற்றியும் அவரது குடும்பத்தைப் பற்றியும் நம்மிடம் சொல்கிறார்கள் பாபநாசம் தொகுதி மக்கள்.

 

ddd

 

அதற்கு பிறகு என்ன நடந்தது? ஏன் துரைக்கண்ணுவின் மரணத்தில் ஒரு மர்மம் உலா வந்தது? என அ.தி.மு.க.வின் தலைமைக் கழக நிர்வாகிகளிடம் விசாரித்தோம். எடப்பாடி முதல்வரான பிறகு, அமைச்சர்கள் அவரவர் துறை சார்ந்து வளம் கொழித்தனர். கட்டுப்பாடோ, நெருக்கடியோ இல்லாவிட்டாலும் மேலிடத்துக்கும் கட்சி நிதியாகவும் மாமூல் பாய்ந்தது. வேளாண்துறையில் நடை முறைப்படுத்தப்பட்ட திட்டங்களால் கிடைத்த பர்சேன்டேஜ்களைக் கொண்டு கட்சிக்கு அளித்த நிதியையும், டெல்டா மாவட்டங்களில் வருகிற சட்டமன்றத் தேர்தலை அ.தி.மு.க. எதிர்கொள்வதற்கு தேவைப்படும் வெயிட்டான அமவுண்ட்டையும் கண்டெய்னர் மூலமாக துரைக்கண்ணுவிற்கு அ.தி.மு.க. தலைமை அனுப்பி வைத்தது.

 

மிக மிக ரகசியமாக வைக்கப்பட்ட இந்த பணம் பற்றிய தகவல் துரைக்கண்ணுவிற்கும் அதனை அவரிடம் கொடுத்த அ.தி.மு.க. தலைமைக்கும்தான் தெரியும். இந்நிலையில்தான், திடீர் மூச்சிரைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரைக்கண்ணு சுயநினைவை இழந்தார். சுயநினைவு வந்தவுடன், அவரிடம் ஏற்கனவே தரப்பட்டதை எங்கே வைத்திருக்கிறார் என்கிற தகவலைப் பெற ஒரு டீம் காவேரி மருத்துவமனையிலேயே தங்க வைக்கப்பட்டிருந்தது.

 

அதுதவிர துரைக்கண்ணுவின் குடும்பத்தினரிடமும் இதுகுறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டது. துரைக்கண்ணுவின் அதிகாரப்பூர்வ மான இல்லத்தில் நடைபெற்ற இந்த விசாரணை வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக துரைக்கண்ணுவின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா என்றும், அதனால் அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர் என்கிற செய்தி வெளியே பரப்பப் பட்டது. ஆனால், அவர்களிடம் ரெய்டு பாணியில் மிரட்டல் விசாரணை நடத்திக்கொண்டிருந்தது அ.தி.மு.க மேலிடம்.

 

துரைக்கண்ணு குடும்பத்தினரில் அ.தி.மு.க. தலைமைக்கு, ஐயப்பன் மீதான சந்தேகம் அதிகமாகவே இருந்தது. முதல்வர் வரை நெருக்கமாக பழகும் வாய்ப்பை பெற்ற ஐயப்பன் மாவட்ட அ.தி.மு.க.வின் இளைஞர்கள் இளம் பெண்கள் பாசறையின் செயலாளராக இருந்தார். அப்பா விடம் கொடுத்து வைத்தவற்றைப் பற்றி விசாரித்த போது, அவர் தனக்கு எதுவும் தெரியாது என கையை விரித்துவிட்டார். ஷாக் ஆன அ.தி.மு.க தலைமை, எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடிக்கும் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த நம்பிக்கைக்குரிய மாண்புமிகுவிடம் ஒப்படைத்தது. கரோனா என தனிமைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்ட குடும்பத்தாரை கவனிக்கும் பொறுப்பு, தஞ்சைக்கு பக்கத்து மாவட்ட மந்திரியிடம் தரப்பட்டது. துரைக்கண்ணுவின் தனிப்பட்ட பாதுகாவல ரான போலீசை கையில் எடுத்தனர். துரைக்கண்ணு எங்கெல்லாம் செல்வார்? யாரிட மெல்லாம் பேசுவார்? என அவரது தொலைபேசி விவரங்களும் எடுக்கப்பட்டன. சுயநினைவை இழந்து, எக்மோ மற்றும் செயற்கை சுவாச கருவிகளால் உயிர் பிழைத்திருந்த துரைக்கண்ணு வின் உடல்நிலை மிக மிக மோசம் அடைந்தது.

 

சசிகலாவின் தம்பி மகன் ஜெய் ஆனந்த், எடப்பாடி வீட்டுக்கு சென்று அவரது தாயார் மறைவுகுறித்து துக்கம் விசாரித்தபோது, துரைக் கண்ணுவின் மனைவி எடப்பாடி லைனில் வந்து, துரைக்கண்ணு மிக மிக மோசமான நிலையில் இருக்கிறார் எனக் கதறலுடன் தெரிவித்தார். அவசரமாக எடப்பாடி புறப்பட்டார். எந்த நேரமும் மரண அறிவிப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடம் இருந்தது. அமைச்சர் சுயநினைவின்றி படுத்திருக்க, அவர் நல்ல நினைவில் இருந்தபோது கொடுத்தவை எங்கே உள்ளன என்கிற தேடுதல் தொடர்ந்தது.

 

ddd

 

31ஆம் தேதி மாலையில் பக்கத்து மாவட்ட அமைச்சர், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அவருக்கு சென்னையில் இருந்து ஒரு செய்தி வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டது. உடனே அவர் மதுரைக்கு வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். தேடியது கிடைத்துவிட்டது என்கிற மெசேஜ்தான் அவரது அவசரப் பயணத்திற்கு காரணம். அவர் சென்னை வந்ததும், துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் என மருத்துவமனை யின் அறிவிப்பு வெளியானது. நள்ளிரவு நெருங்கும்போது, துரைக்கண்ணுவின் மரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவரிடம் ரகசியமாக தரப்பட்டவை எங்கே எனக் கண்டறிந்து மீட்ட பிறகுதான், அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டார் துரைக்கண்ணு என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

 

பாபநாசம் தொகுதியில் சாதாரண மக்கள் பேசிக்கொள்ளும் செய்திகள் பற்றிய துரைக்கண்ணுவின் குடும்பத்தாரின் கருத்துகளை அறிய மறுபடியும் அவர்களை தொடர்பு கொண்டோம். அவர்களில் யாரும் தற்போது பேசத் தயாராக இல்லை. கருத்துகளைத் தெரிவித்தால் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

 

சொந்த தொகுதியில் செல்வாக்கு பெற்றிருந்த அமைச்சரின் மரண அறிவிப்பின் தாமதம் குறித்து உள்ளூர் மக்களுக்கே தெரியக்கூடிய அளவிற்கு, ஆளுந்தரப்பின் நடவடிக்கைகள் இருந்துள்ளன. மீட்கப்பட்டது எவ்வளவு இருக்கும் என விசாரிக்கையில், பாபநாசம் தொகுதி மக்கள் 150சி என்கிறார்கள், 300சிக்கு குறையாது என்கிறார்கள் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள்.

 

-தாமோதரன் பிரகாஷ், துரை.மகேஷ், செல்வக்குமார்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.

Next Story

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரில் சோதனை! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Former Minister R.P. Udayakumar car test

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் காரிலும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். தேர்தல் பரப்புரைக்காக தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட உத்தப்பநாயக்கனூர், கல்லூத்து பகுதிகளில் பரப்புரைக்கு வந்தபோது இந்த சோதனை நடைபெற்றது. அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக காரில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லபடுகிறதா என பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.