Skip to main content

“தெரியாமல் அந்தத் தவறைச் செய்துவிட்டேன்” - மனம் திறந்த சமந்தா

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Samantha says Unknowingly, she did that mistake

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர், விஜய், சூர்யா, சிம்பு, அல்லு அர்ஜூன், நானி போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர். கடந்த 2010 ஆம் ஆண்டு ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக சமந்தா தொடங்கிய திரையுலகப் பயணம் குறுகிய காலத்தில் பேன் இந்திய அளவில் வளர்ந்துள்ளார். 

இதனிடையே, நடிகை சமந்தா டோலிவுட்டின் பிரபல நடிகர் நாக சைதன்யா உடன் காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணமான 4 ஆண்டுகளில் நாக சைதன்யாவை தனிப்பட்ட காரணங்களால் விவாகரத்து செய்தார். இருவரும் விலகி தனியாக வசித்து வருகின்றனர். இதனிடையே, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா நடிப்பில் இருந்து தற்காலிக பிரேக் எடுத்துக் கொள்ளப்போவதாக அறிவித்தார். அதன் பின்னர், வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்த பிறகு நீண்ட நாள்களாக ஓய்விலிருந்த சமந்தா கடந்த ஆண்டுதான் படங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். இதையடுத்து ஆங்கில வெப்சீரிஸான ‘சிட்டாடெல்’-இன் இந்தியன் ஸ்பின் ஆஃப் வெர்ஷனில் நடித்தவர், கொஞ்ச நாள்கள் எந்தப் படங்களிலும் கமிட்டாகாமல் ஓய்வெடுக்கப்போவதாகக் கூறினார்.

தற்போது, ஓய்விலிருந்து திரும்பி உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘ஹெல்த் பாட்கேஸ்ட்’ ஒன்றைச் செய்து வருகிறார். அந்த வகையில், ஃபிட்னஸ் பயிற்சியாளர் அல்கேஷ் ஷரோத்ரியுடன், சமந்தா இணைந்து, ‘டேக் 20’ என்ற பெயரில் பாட்காஸ்டில் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களைப் பேசி வந்தார். அப்போது, சமந்தாவின் வீடியோவுக்கு கீழ் ஒருவர், ‘ஆரோக்கியமற்ற ஐஸ்கிரீம், கூல் டிரிங் போன்ற விளம்பரங்களில் விளம்பர தூதராக சமந்தா நடித்திருக்கிறார்’ எனக் கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளித்த சமந்தா, “நான் கடந்த காலத்தில் தெரியாமல் அது போன்ற தவறை செய்துவிட்டேன். ஆனால், உண்மை தெரிந்த பிறகு அது போன்று விஷயங்களை விளம்பரப்படுத்துவதை நிறுத்திவிட்டேன். இப்போது விழிப்போடு இருக்கிறேன். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

உலக அளவிலான லிஸ்ட் - டாப்பில் சமந்தா, நயன்தாரா   

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
imdb Top 100 Most Viewed Indian Stars of the Last Decade on globally

ஐ.எம்.டி.பி என்ற இணையதளம் உலகத் திரைப்படங்கள், வெப் தொடர்கள் உள்ளிட்ட பலவற்றைப் பற்றிய தகவல்களை வழங்கும் ஒரு பிரபலமான இணையதளம். மேலும், ஆன்லைன் மூலம் மக்கள் அளிக்கும் புள்ளிகளை வைத்து சிறந்த படம் குறித்த பட்டியலை மக்களுக்கு தொகுத்து வழங்குகிறது. இந்த இணையதளத்தில் டாப் இடத்தில் இடம்பெறுவது ஒரு அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. இதில் பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளையும் ரேட்டிங்கையும் பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த இணையதளத்தில் உலகளவில் கடந்த 10 ஆண்டுகளில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட இந்திய பிரபலங்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் முதல் இடத்தை தீபிகா படுகோனே, இரண்டாவது இடத்தில் ஷாருக்கான், மூன்றாவது இடத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன், நான்காவது இடத்தில் ஆலியா பட், ஐந்தாவது இடத்தில் இர்ஃபான் இருக்கின்றனர். 

இதில் கோலிவுட் பிரபலங்கள் பொறுத்தவரை 13வது இடத்தில் சமந்தா, 16வது தமன்னா, 18வது இடத்தில் நயன்தாரா, 30வது இடத்தில் தனுஷ், 35வது இடத்தில் விஜய், 42வது இடத்தில் ரஜினிகாந்த், 43வது இடத்தில் விஜய் சேதுபதி, 50வது இடத்தில் மாதவன், 54வது இடத்தில் கமல்ஹாசன், 58வது இடத்தில் ஸ்ருதிஹாசன், 62வது இடத்தில் சூர்யா, 84வது இடத்தில் த்ரிஷா, 92வது இடத்தில் விக்ரம், 98வது இடத்தில் அஜித் ஆகியோர் இருக்கின்றனர்.

Next Story

உலகளவில் கவனம் - பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒன்றுதிரண்ட பிரபலங்கள்

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
actors support palestine by sharing all eyes on rafah poster

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்ததாக ஐ.நா கவலை தெரிவித்தது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியானதாகவும் 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதே வேளையில், உலகில் உள்ள பல்வேறு மாணவர் அமைப்பினர், பொது மக்கள் என பலரும் இந்தப் போரை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் கடந்த 26ஆம் தேதி இரவு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் மீது ஹமாஸ் அமைப்பினர், ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, இஸ்ரேல் அந்த ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக தெரிவிக்கப்பட்டது. அதனால், அங்கு எந்தவித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டது. போர் சூழல் ஏற்படும் அபாயம் இருந்ததால், காசாவில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் ரபா பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 

actors support palestine by sharing all eyes on rafah poster

இந்த நிலையில், இஸ்ரேல் படையினர் ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தெற்கு காசாவில் உள்ள ரபா நகரம் மீது அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ரபா பகுதியில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்ட 45 பாலஸ்தீன மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு உலகளவில் பரவலாக பேசப்பட, பலரும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். 

actors support palestine by sharing all eyes on rafah poster

அந்த வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ‘ஆல் ஐஸ் ஆன் ரபா’  ‘ALL EYES ON RAFAH' என்ற போஸ்டரை அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதில் த்ரிஷா, சமந்தா, துல்கர் சல்மான், அட்லீ, ஹன்சிகா, மாதுரி தீக்‌ஷித், சோனம் கபூர், இலியானா,  ரகுல் ப்ரீத் சிங், மலைக்கா அரோரா, நோரா ஃபதாஹி என பலரும் இருக்கும் நிலையில் அவர்களோடு விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பிரபலங்கள் என மொத்தம் 3 கோடிக்கும் அதிகமானோர் கடந்த 24 மணிநேரத்தில் இந்த போஸ்டரை பகிர்ந்துள்ளனர்.