Skip to main content

மாவோ பங்கேற்ற முதல் புரட்சி! ஆதனூர் சோழன் எழுதும் மக்கள் தலைவன் மாவோ #6

Published on 25/10/2019 | Edited on 25/10/2019

ஹூனானில் நிலைமை அபாயகரமானதாக மாறிக் கொண்டிருந்தது. பிரிட்டனும் ஜப்பானும் ஆயுதந்தாங்கிய படகுகளை அனுப்பின. இதையடுத்து அங்கு ஒரு அமைதியான சூழல் நிலவியது. ஆனாலும், அது உண்மையில் அமைதியா என்பது சந்தேகமாகவே இருந்தது. ஏனென்றால், மஞ்சு எதிர்ப்பு பேரணிகளை மாணவர்கள் தொடர்ந்து நடத்தினர். மஞ்சு ஆட்சிக்கு ஏற்பட்ட வீழ்ச்சியை சீர்திருத்தவாத ஆதரவு நிலப்பிரபுக்கள் விவாதித்து வந்தனர். 1911 ஆம் ஆண்டு சீனாவில் ஹுவாங் ஸிங் தலைமையிலான வூச்சாங் புரட்சி வெற்றி பெற்றது.

அந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி வெள்ளிக் கிழமை சாங்ஷா வந்த சீன நீராவிக் கப்பல் அந்தச் செய்தியை கொண்டுவந்தது. சீன ராணுவத்திலேயே இரு குழுக்களாக பிரிந்து புரட்சியில் ஈடுபட்டனர். புரட்சிக்கு ஆதரவான வீரர்கள் சீன அரசின் அடையாளங்களை பிய்த்தெறிந்தனர் என்றெல்லாம் அந்தக் கப்பலில் வந்த பயணிகள் பேசிக் கொண்டனர். ஆனால், சண்டை போட்டவர்கள் யார்? அவர்கள் யாருக்கு எதிராக சண்டை போட்டார்கள்? என்ற விவரங்களை அவர்கள் தெரிவிக்கவில்லை. அல்லது அவர்களுக்குத் தெரியவில்லை.

 

gh



அவர்களுக்கு மட்டுமல்ல, ஹூனான் ஆளுநர் மாளிகையில் உள்ள அதிகாரிகளுக்கும் விவரங்கள் தெரியவில்லை. ஏனென்றால் சாங்ஷாவை வெளியுலகத்துடன் பிணைத்த ஒரேயொரு தந்தித் தொடர்பும் தகர்க்கப்பட்டு இருந்தது. கப்பல் வந்து சேர்ந்த அடுத்த மூன்று நாட்களில் வங்கிகள் அனைத்தும் செயலிழந்தன. பள்ளிக்கூடங்களில் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. வெளியுலகச் செய்தி கிடைப்பதே அரிதாக இருந்தது. பலவிதமான வதந்திகள் பரவின. இந்நிலையில் அன்று மாலையே ஜப்பானிய நீராவிக் கப்பல் ஹேன்காவிலிருந்து வந்தது. அதில் வந்த பயணிகள் புரட்சியாளர்கள் வெற்றி பெற்ற செய்தியை விரிவாகத் தெரிவித்தார்கள். வூச்சாங் புரட்சியில் ஈடுபட்டவர்களில் சிலர் அந்தக் கப்பலில் வந்தார்கள். ஹூனானில் தீவிரவாத உணர்வுடைய சக ராணுவ வீரர்களும் விரைவாக கலகத்தில் இறங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காக அவர்கள் வந்திருந்தார்கள்.

அவர்களில் ஒருவர் மாவோ படித்த பள்ளிக்கு வந்தார். பள்ளி முதல்வரின் அனுமதியோடு அவர் மாணவர்கள் மத்தியில் பேசினார். அந்த மாணவர்களில் எட்டுப் பேர் மஞ்சுக்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இந்த நிகழ்ச்சி மாவோவை பெரிய அளவில் பாதித்தது. அவரும் சில நண்பர்களும் ஹேன்காவுக்கு சென்று புரட்சியாளர்களின் படையில் சேருவது என்று முடிவெடுத்தார்கள். அவர்களுடைய பயணத்துக்கான கப்பல் கட்டணத்தை மாணவர்கள் வசூலித்தார்கள். அவர்கள் கிளம்புவதற்கு முன்பே பல நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன. புரட்சியாளர்கள் கலகத்தில் ஈடுபடத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்த வேளையில், கலகத்தை அடக்குவதற்கு ஆளுநர் நடவடிக்கை மேற்கொண்டார். ராணுவத்தினரை அவர் நம்பவில்லை. புதிதாக மக்கள்படையை அமைத்தார். அந்த படைகளுக்கு போதுமான ஆயுதங்கள் வழங்கப்பட்டன.
 

 

nm



இரவு நேரத்தில் புரட்சியாளர்கள் நகரத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அந்த முயற்சி தோற்றது. நகரின் கிழக்கு வாயிலுக்கு அருகில் இருந்த ராணுவக் காப்பரணில் குதிரை லாயத்திற்கு தீவைத்தனர். அந்தத் தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் வருவதற்காக வாயில் திறக்கப்பட வேண்டும் என்று புரட்சியாளர்கள் கோரினர். ஆனால், மக்கள் படையினர் இதை ஏற்க மறுத்தனர். இதையடுத்து, புரட்சியாளர்கள் ஆயுதக் கிடங்கில் பூட்டி வைக்கப்பட்ட ஆயுதங்களையும், வெடிப் பொருட்களையும் எடுத்துக் கொண்டார்கள். இரண்டு நாட்களில் அதாவது ஒரு ஞாயிற்றுக் கிழமை அவர்கள் வித்தியாசமான முறையில் நகரைத் தாக்கினார்கள்.

அதற்கு சற்றுமுன் நகரத்திற்கு வெளியே முகாமிட்டிருந்த ராணுவத்திலிருந்த தனது நண்பர் ஒருவரிடம் மெழுகுத் துணியால் ஆன பூட்சுகளையும் சில பொருட்களையும் இரவலாக பெற மாவோ சென்றார். ஆனால், காப்பரணில் இருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி விட்டனர். அங்கே பரபரப்பு நிலவியது. ராணுவ வீரர்கள் தெருக்களில் குவிந்து கொண்டிருந்தனர். புரட்சியாளர்கள் நகரத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர். சண்டை தொடங்கியது. நகரத்தின் வெளிப்புறச் சுவர்களுக்கு அப்பால் பெரிய யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நகரத்திற்கு உள்ளேயும் கிளர்ச்சி வெடித்தது. சீனத் தொழிலாளர்கள் நகரத்தின் வாயில்களை தகர்த்துக் கைப்பற்றினார்கள்.

இது நடந்துகொண்டிருந்த வேளையில் மாவோ ஒரு வாயிலின் வழியாக நகரத்திற்குள் நுழைந்தார். அதன்பிறகு உயரமான ஒரு இடத்தில் ஏறி நின்றார். அங்கிருந்து சண்டையை பார்த்தார். அப்போது, ஆளுநர் மாளிகையில் மஞ்சு கொடி அகற்றப்பட்டு ஹேன் கொடி ஏற்றப்பட்டதை கண்டார். பிற்பகலுக்குள் நகரம் முழுவதும் கைப்பற்றப்பட்டது. எங்கும் வெள்ளைக் கொடி பறந்தது. வெள்ளைக் கைப்பட்டை அணிந்த வீரர்கள் நகரின் ஒழுங்கை பராமரிக்க ரோந்து சுற்றினர். காலையில் தோன்றிய பரபரப்பு அடங்கிவிட்டது. இதற்கிடையே ஆளுநரும் அவருடைய மூத்த அதிகாரிகளும் தப்பியோடினர். மக்கள்படைத் தளபதியாக ஆளுநரால் நியமிக்கப்பட்டவரையும், வேறு பல அதிகாரிகளையும் ஆளுநர் மாளிகை அருகே தலையை வெட்டி, மரண தண்டனை நிறைவேற்றினார்கள்.
 

j



அவர்களுடைய ரத்தம் தோய்ந்த தலைகளும் உடல்களும் தெருக்களில் அப்படியே கிடந்தன. புரட்சி வெற்றி பெற்றாலும் அடுத்த குழப்பம் தொடங்கியது. இந்த வெற்றிக்கு அடித்தளமாக இருந்தவர்கள் அனைவருமே சீன ராணுவத்தில் பணிபுரிந்து , புரட்சியாளர்களுடன் இணைந்தவர்கள். அவர்களுக்கு பொறுப்பு எதுவுமே வழங்கப்படவில்லை. எனவே, புதிய புரட்சி நிர்வாகத்தை யார் தலைமை தாங்குவது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் வூச்சாங் மாகாணத் தலைநகர் ஹூ பேயில், தொடக்கத்தில் புரட்சியை எதிர்த்து பின்னர் ஆதரித்த லி யுவான்ஹாங் என்பவர் ராணுவ ஆளுநராக பொறுப்பேற்க சம்மதித்தார். அதே நாளில் நாட்டின் பெயரை சீனக் குடியரசு என்று மாற்றி அறிவித்தார். வூச்சாங் மாகாணத் தலைநகர் ஹூபேயில்தான், குய்ங் முடியாட்சி ஒழிக்கப்பட்டு சீனக் குடியரசு உதயமாயிற்று.

சாங்ஷாவிலும் நிலைமை குழப்பமாகத்தான் இருந்தது. அங்கு, முற்போக்குவாதிகளின் ஹூனான் கிளையின் துடிப்பான இளம் தலைவரான ஜியோவ் தாஃபெங் ராணுவ ஆளுநராக நியமிக்கப்பட்டார். சீர்திருத்தவாத மேட்டுக் குடியினரில் முக்கியமானவரான டான் யாங்கெய் ராணுவம் சாராத குடிமைத் துறை ஆளுநராக நியமிக்கப்பட்டார். இருந்தாலும், புரட்சியில் பங்கேற்ற பலர் மாகாணத்தின் பல பகுதிகளில் இருந்து சாங்ஷா வந்தனர். அவர்கள் தங்களுக்குரிய பங்கை எதிர்பார்த்தனர். அவர்கள் கைத்துப்பாக்கிகளைக் கொண்டும், கத்திகளைக் கொண்டும் ஒருவரையொருவர் மிரட்டும் நிலைக்குச் சென்றனர். வூச்சாங்கில் புரட்சியாளர்களுக்கு உதவுவதற்காக சாங்ஷாவிலிருந்து ஒரு படைப்பிரிவை ஜியோவ் அனுப்பினார். இந்தச் சமயத்தில் அவருக்கு அடுத்தகட்ட தலைவராக இருந்தவரை சிரச்சேதம் செய்து கொன்றார்கள். விரைவிலேயே ஆளுநர் மாளிகைக்குள் வைத்து ஜியோவ் தாஃபெங்கும் சிரச்சேதம் செய்யப்பட்டார். அவருக்கு அப்போது 25 வயதுதான் முடிந்திருந்தது. பொறுப்பேற்ற 9 நாட்களில் இரு தலைவர்களும் கொல்லப்பட்டனர்.

அந்த இரு தலைவர்களின் உடல்களும் தெருவில் வீசப்பட்டுக் கிடந்தன. இதை மாவோ நேரில் கண்டார். அவர்கள் இருவரும் ஏழைகளாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறவர்களாகவும் இருந்தனர். அதனால்தான் அவர்களை கொன்றார்கள். நிலப்பிரபுக்களும் வணிகர்களும் அவர்கள் மீது வெறுப்பு கொண்டிருந்தனர் என்பதை மாவோ அறிந்திருந்தார். அவர்கள் கொல்லப்பட்ட அன்று மாலையிலேயே பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த டான் யெங்கேய் ஆளுநராக நியமிக்கப்பட்டார். புரட்சி வெற்றி பெற்றவுடன் இவர் ராணுவம் சாராத குடிமைத் துறை ஆளுநராக நியமிக்கப்பட்டு இருந்தார். புரட்சி வெற்றி பெற்றாலும் பிரபுக்கள் கைதான் ஓங்கியிருந்தது.
 

 

Next Story

மாபெரும் அரசியல் குழப்பத்தில் சீனா! ஆதனூர் சோழன் எழுதும் மக்கள் தலைவன் மாவோ #9

Published on 10/12/2019 | Edited on 06/01/2020


சிலமாதங்களுக்கு முன்புதான் ஒரு வம்சாவளி அரசு தகர்க்கப்படுவதை மாவோ கண்கூடாக பார்த்தார். ஆனால் இப்போது மேட்டுக்குடியினரின் சூழ்ச்சிகள் மீண்டும் ஒரு ஆட்சிமாற்றத்தை கொண்டுவந்தன. புரட்சியின் பயன்கள் சாதாரண மக்களுக்கு கிடைக்கவில்லை. ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் இந்த ஆட்சி மாற்றம் நடைபெற்றது. ஹூனான் ஆளுநர் டான் யாங்கெய் விரட்டப்பட்டது மாவோவுக்கு பிடிக்கவில்லை. அவர் நல்ல மாற்றங்களை கொண்டுவந்ததாக மாவோ நினைத்தார். கோமின்டாங் கட்சிக்கு எதிரான சண்டையில் சாங்ஷா நகரில்  இருந்த பெரிய வெடிமருந்து கிடங்கு பயங்கரமாக வெடித்து  சிதறியது. ஹூனானில் உள்ளவர்களுக்கு ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்பதற்காக குடியரசுத் தலைவரின் ஆதரவாளர்களில் இருவர் கிடங்கிற்கு தீ வைத்தார்கள். கோமின்டாங் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி, மாவோவின் மனதுக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
 

n



ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்த ஆண்டுகளில் மாவோ சிறந்த எழுத்தாளராகவும் உருவாகி கொண்டிருந்தார். சாங்ஷாவில் ஜியாங் நதி என்ற நாளிதழைப் படித்து வந்தார். அதில்தான் முதன்முறையாக அவர் சோசலிசம் என்ற வார்த்தையைப் பார்த்தார். சன்யாட் சென் தலைமையில் நடைபெற்ற புரட்சிக்குப் பிறகு சில நாட்கள் கழித்து சீன சோசலிஸ்ட் கட்சியை ஜியாங் காங்கூ என்பவர் நிறுவினார். அந்தக் கட்சியின் கொள்கைகள் மாவோவை கவர்ந்தன. "அரசாங்கம் இல்லை; குடும்பம் இல்லை; மதம் இல்லை; தகுதிக்கேற்ற உழைப்பு; தேவைக்கேற்ற ஊதியம்." இது ஆற்றல் மிகுந்த கருத்து என்று தனது தோழர்களுக்கு மாவோ எழுதினார். அவருடைய கடிதங்களுக்கு சில நண்பர்கள் பதில் எழுதினார்கள்.ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஐந்து ஆண்டுகள் மாவோ படித்தார். இந்த ஐந்து ஆண்டுகளில் தனது கவனம் வேறு பக்கம் திரும்பாமல் பார்த்துக் கொண்டார். அங்கு அவருக்கு யுவான் ஜிலியூ, யேங் சாங்ஜி என்ற  இரண்டு பேராசிரியர்கள் உதவி செய்தார்கள். அவர்களில் யுவான், மாவோவின் எழுத்துக்களை கேலி செய்வார். ஒரு பத்திரிக்கையாளனின் எழுத்துக்களைப் போல இருப்பதாக அவர் கிண்டல் செய்வார். இவர், பெர்லின், டோக்கியோ போன்ற வெளிநாட்டு நகரங்களில் படித்து திரும்பியவர். இவருடைய கிண்டல் காரணமாக செவ்வியல் மொழி நடையை மாவோ கற்றுக்கொண்டார்.

யேங் சாங்ஜி மாவோ மீது தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவர் கருத்துமுதல்வாதி. உயர்வான ஒழுக்க நெறிகளை பின்பற்றியவர். நீதிதவறாத, வலிமையுள்ள, நேர்மையான, சமூகத்திற்கு பயன்படக்கூடிய மனிதர்களாக மாணவர்கள் மாறவேண்டும் என்று போதனை செய்வார். 1915 -ஆம் ஆண்டு சீனா மீது ஏகாதிபத்திய அரசுகள் கடுமையான நெருக்கடியை திணித்தன. அந்த நெருக்கடிகளுக்கு சீனா இழிவான விதத்தில் அடிபணிந்து வந்தது. மாவோவின் மனதில் அவநம்பிக்கை தீவிரமடைந்தது. அந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி, யுவான் ஷிகெய்யிடம் ஜப்பானின் இறுதி எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டது. 21 கோரிக்கைகள் என்று அது அழைக்கப்பட்டது.

 

 

jhk



ஜப்பானின் மிகாடோ தலைமையிலான அரசு, சீனாவை முழுவதும் ஜப்பானின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக தெரிவித்தது. அத்துடன் ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் இருந்த ஷான்டுங் மாகாணத்தில் ஜப்பானுக்கு தனிப்பட்ட உரிமைகள் இருப்பதாக வலியுறுத்தியது. வேறு வழியில்லாமல் சீன குடியரசுத்தலைவர் இதை ஏற்றுக் கொண்டார். இது ஒரு மிகவும் வெட்ககரமான நாள் என்று மாவோ எழுதினார். சீன அரசாங்கத்தை கண்டனம் செய்யுமாறு தனது சக மாணவர்களை கேட்டுக் கொண்டார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் யுவான் ஷிகெய் சீனாவின் பேரரசராக தன்னை அறிவித்துக் கொண்டார். தனது அரசுக்கு ஹூங்க்ஸியான் என்று பெயர் வைத்து கொண்டார்.

இதையடுத்து சீனாவின் பல மாகாணங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அவர்களுடைய எதிர்ப்பு காரணமாக புதிய பேரரசர் தனது முடிவை மறு பரிசீலனை செய்யத் தொடங்கினார். மீண்டும் குடியரசுத் தலைவராக மாற முன்வந்தார். ஆனால் அதற்குள் காலம் கடந்து  விட்டது. 1916 ஆம் ஆண்டு மே மாதம் தெற்கில் இருந்து வந்த படைகள் தலைநகரை நெருங்கின. இதையறிந்த ஹூனான் மாநிலத்தின் ஆளுநரான டாங் ஸியாங்மிங் பேரரசரின் ஆதரவாளர் என்ற நிலைப்பாட்டிலிருந்து விலக முடிவு செய்தார். அதற்கும் அவகாசம் இல்லை. அடுத்த மாதமே அதாவது, ஜூன் மாதம் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக பேரரசர் யுவான் ஷிகெய் திடீரென்று மரணம் அடைந்தார். ஹூனானில் நிலைமை மோசமடைந்தது. அங்கு பேரரசர் யுவான் ஷிகெய்யின் ஆதரவாளரான டாங் ஸியாங்மிங் விரட்டப்பட்டார். தனது அரண்மையிலிருந்து விவசாயி வேடத்தில் அவர் பின் வாசல் வழியாக தப்பிச் சென்றார். அவர் போகும்போது அரசாங்க கருவூலத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டார்.
 

Next Story

எதிர்காலம் குறித்த குழப்பங்களின் முடிவில்… ஆதனூர் சோழன் எழுதும் மக்கள் தலைவன் மாவோ #8

Published on 07/12/2019 | Edited on 06/01/2020

புரட்சிக்குப் பிறகு ஹூனான் மாநிலம் வேகமாக மாறிவந்தது. சீனாவில் வம்சாவளி ஆட்சி திடீரென்று தூக்கியெறியப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய நம்பிக்கை பிறந்தது. சீனாவில் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற யுவான் ஷிகெய் கொஞ்ச நாட்கள் வரை நல்ல பிள்ளையாக இருந்தார். தலைநகரில் நடப்பவை இன்னமும் மற்ற பகுதிகளுக்கு சென்று சேருவதில் தாமதம் நிலவியது. ஹூனானில் எழுத்து சுதந்திரம் இருந்தது. அந்த மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்த டான் யாங்கெய் ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருந்தார். அபின் பயிரிடுவதை தடை செய்தார். போதை மருந்து இறக்குமதி நிறுத்தப்பட்டது. எழுத்து சுதந்திரத்தை பயன்படுத்தி பத்திரிகைகள் அமெரிக்காவையும் பிரிட்டனையும் கடுமையாக விமர்சனம் செய்தன. கல்விக்கு நிதி ஒதுக்கீடு மூன்று மடங்காக அதிகரிக்கப் பட்டது.  நவீனப் பள்ளிகள் ஏராளமாக உருவாகின. இளம் பெண்களும் இளைஞர்களும் தங்கள் முடிகளை வெட்டிக் கொண்டார்கள். பெண்கள் முக்காடில்லாமல் வெளியிடங்களில் நடமாடினர்.

 

k



ராணுவத்திலிருந்து மாவோ விலகியபோது அவருக்கு 18 வயது ஆகியிருந்தது. அவரளவில் இந்த காலக் கட்டம் குழப்பம் மிகுந்ததாக இருந்தது. அடுத்து என்ன செய்வது என்று அவருக்கு தெரியவில்லை. ஒரே நேரத்தில் பலவிதமான விளம்பரங்கள் அவரைக் கவர்ந்தன. காவல்துறை பயிற்சிப்பள்ளியில் சேருவதற்கு அழைப்பு விடுக்கும் ஒரு விளம்பரத்தைப் பார்த்தார். அதில் சேருவதற்கு பெயரை பதிவு செய்தார். ஆனால் அதற்காக அவரை பரிசோதிப்பதற்கு முன், சோப்புத் தயாரிக்கும் பள்ளியைப் பற்றிய விளம்பரத்தைப் பார்த்தார். அந்தப் பள்ளியில் கல்விப் பயிற்சி எதுவும் அளிக்கப்படவில்லை. ஆனால் உணவுக்கு உத்தரவாதமும் சிறிதளவு சம்பளமும் வழங்கப்படும் என்று அந்த விளம்பரத்தில் உறுதி அளிக்கப்பட்டது.

அது ஒரு கவர்ச்சியான விளம்பரம். சோப் தயாரிப்பதால் ஏற்படும் சமூக நன்மைகளை அந்த விளம்பரம் விரிவாக விளக்கியிருந்தது. காவல்துறை பயிற்சி பள்ளியில் சேரும் முடிவை மாவோ கைவிட்டார். அதற்கு பதிலாக சோப் தயாரிப்பாளராக மாறுவது என்று முடிவு செய்தார். ஒரு டாலர் பணம் கட்டி தனது பெயரை பதிவு செய்து கொண்டார். இந்த சமயத்தில் மாவோவின் நண்பன் ஒருவன் சட்டப்பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினான். அந்தப் பள்ளியில் சேரும்படி மாவோவை வற்புறுத்தினான். மூன்று ஆண்டுகளில் எல்லாவிதமான சட்ட நுணுக்கங்களையும் கற்றுத்தருகிறோம். படிப்பு முடிந்தவுடன் மாணவர்கள் வழக்குரைஞர்களாக மாறிவிடலாம் என்று ஒரு விளம்பரம் உறுதி அளித்தது. இந்த விளம்பர விவரங்களை விரிவாக குறிப்பிட்டு தனது செலவுக்கு பணம் அனுப்பும்படி மாவோ கடிதம் எழுதினார். இந்நிலையில் சீனா இப்போது பொருளாதார யுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தை கட்டியமைக்க பொருளாதார நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள் என்று மாவோவின் மற்றொரு நண்பர் யோசனை கூறினார்.

 

i



அதை தொடர்ந்து ஒரு வணிகவியல் நடுநிலைப்பள்ளியில் இன்னொரு டாலர் செலவு செய்து தனது பெயரை பதிவு செய்தார். அங்கு அவர் ஒரு மாணவனாக ஏற்றுக் கொள்ளப்பட்டார். ஆனால் இன்னொரு விளம்பரம் மறுபடியும் அவரை குழப்பியது. உண்மையில் உயர்நிலை வணிகவியல் பொதுப் பள்ளியில் படிப்பதுதான் நல்லது என்று அந்த விளம்பரம் தெரிவித்தது. இதையடுத்து அங்கும் ஒரு டாலர் கொடுத்து தனது பெயரை பதிவு செய்தார். தனது மகன் லாபகரமான தொழிலில் ஈடுபடப் போவதாக நம்பிய மாவோவின் தந்தை கல்விக் கட்டணத்துக்கான தொகையை அனுப்பி வைத்தார். உயர்நிலை வணிகவியல் பள்ளியில் மாணவனாக சேர்ந்து படிக்கத் தொடங்கினார் மாவோ. ஆனால் அங்கு பெரும்பாலான வகுப்புகள் ஆங்கில மொழிகளில் நடைபெற்றன. அரிச்சுவடியைக் காட்டிலும் சற்று கூடுதலாக மட்டுமே மாவோவுக்கு ஆங்கிலம் தெரியும். எனவே வெறுப்படைந்து அந்தப் பள்ளியிலிருந்து விலகினார்.

அதன்பிறகு மாவோவின் அடுத்தக் கட்ட சாகசம் தொடங்கியது. சாங்ஷா நகரில் இருந்த முதல் மாகாண நடுநிலைப்பள்ளியில் சேர்ந்தார். மிகவும் மதிப்பு வாய்ந்த அந்தப் பள்ளியில் சீன இலக்கியத்திற்கு வரலாற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அந்தப் பள்ளியின் நுழைவுத் தேர்வில் மாவோ முதல் மாணவனாக தேறினார். தான் தேடியது கிடைத்து விட்டது என்று நினைத்தார். சில மாதங்கள் மட்டுமே அங்கும் அவரால் தாக்கு பிடிக்க முடிந்தது. சில வரம்புகளுக்கு உட்பட்டு அங்கு பாடம் நடத்தப்பட்டது. பள்ளியின் விதிமுறைகளும் மாவோவால் ஏற்க முடியாதவையாக இருந்தன. எனவே அங்கிருந்தும் அவர் வெளியேறினார். அதன்பிறகு சாங்ஷாவில் புதிதாக திறக்கப்பட்ட பொது நூலகம் அவரை கவர்ந்து இழுத்தது. அங்கேயே தனது நேரத்தின் பெரும்பகுதியை செலவிடத் தொடங்கினார்.

 

i



நூலகம் திறந்தவுடன் உள்ளே நுழையும் முதல் வாசகராக மாறினார். எடுக்கும் நூல்களை மிக கவனமாக வாசிப்பார். மதிய உணவை வாங்குவதில் கூட காலம் தாழ்த்துவார். நூலகம் மூடப்படும் வரை அங்கேயே இருப்பார். இந்த நாட்கள் மாவோவின் வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்தவையாக இருந்தன. ஆனால் தனது மகன் வீணாக நாட்களை கழிப்பதாக மாவோவின் தந்தை கருதினார். எனவே அவருடைய மாதாந்திர செலவுகளுக்கு பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டார். பணம் இல்லாதபோது நமது மனம் ஒருமுகப்படுகிறது. மாவோவுக்கும் அதுமாதிரியான சந்தர்ப்பம் வாய்த்தது. எல்லா இளைஞர்களையும் போல தனது வாழ்க்கைக்கு உதவும் தொழில் குறித்து அவர் சிந்தித்தார்.

ஆசிரியராக மாறுவது என்று முடிவு செய்தார். 1913-ஆம் ஆண்டு ஹூனான் மாகாண நான்காவது ஆசிரியர் பயிற்சிப் பள்ளி வெளியிட்ட விளம்பரத்தைப் பார்த்தார். அங்கு சேருவதற்கு கல்விக் கட்டணம் தேவையில்லை என்ற விஷயம் மாவோவுக்கு ஆறுதலாக இருந்தது. நண்பர்களும் அங்கு சேரும்படி மாவோவை வற்புறுத்தினார்கள். தங்கும் இடத்திற்கும் உணவுக்கும் சிறு தொகை இருந்தால் போதும் என்பதால் மாவோ அங்கு சேரத் தயாரானார். தனது விருப்பத்தை தந்தைக்கும் குடும்பத்தினருக்கும் தெரிவித்து கடிதம் எழுதினார். அவர்களும் ஒப்புதல் அளித்தார்கள். பள்ளியில் சேருவதற்காக மாவோ ஒரு கட்டுரையை தயாரித்தார். அவருடைய நண்பர்கள் இருவரும் தங்களுக்கும் சேர்த்து கட்டுரைகள் தயாரிக்கும்படி மாவோவை கெஞ்சினார்கள்.

 

lk



மொத்தம் மூன்று கட்டுரைகளை மாவோ தயாரித்தார். அந்த மூன்று கட்டுரைகளும் பள்ளியில் ஏற்கப்பட்டன. மூவருக்கும் இடம் கிடைத்தது. உண்மையில் மாவோ மூன்று முறை அங்கு சேர தகுதி பெற்றார். இந்தப் பள்ளியில் சேர்ந்த சமயம் சீனாவின் அரசியல் திசை மாறிக்கொண்டிருந்தது. சன்யாட் சென் தலைமையில் நடைபெற்ற புரட்சி பெரிய மாற்றங்களை கொண்டு வர தவறிவிட்டது. மஞ்சுக்களின் ஆட்சி ஒழிக்கப்பட்டது தவிர வேறு எதுவும் புதிதாக உருவாகவில்லை. சீனாவின் குடியரசுத்தலைவராக பொறுப்பு வகித்த யுவான் ஷிகெய் பழைய சர்வாதிகார அரசில் பணியாற்றியவர். அந்த அரசாங்கத்தைப் போலத்தான் அவருடைய அரசாங்கமும் செயல்பட்டது.

1912 -ஆம் ஆண்டு சன்யாட் சென் கோமின்டாங் என்று அழைக்கப்பட்ட தேசிய கட்சியை தொடங்கினார். அந்தக் கட்சியை ஹூனான் மாகாண அரசு ஆதரித்தது. புரட்சி முடிந்து இரண்டு ஆண்டுகள் வரை யுவான் ஷிகெய் எந்தவிதமான கொள்கையும் இல்லாமல் ஆட்சி நடத்தினார். அவருடைய அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக சன்யாட் சென் போர்ப் பயணத்தை தொடங்கினார். இந்தப் போர்ப் பயணத்திற்கு சீனாவின் தெற்குப் பகுதியில் இருந்த ஐந்து மாகாணங்களும் ஜியெங்ஸீ மாகாணமும் தங்களுடைய ஆதரவை தெரிவித்தன. ஆனால் இந்த இரண்டாவது புரட்சி பெரிய அளவில் தீவிரமாக நடைபெறவில்லை. தெற்கு நோக்கி சென்ற புரட்சி படைகள் 1913-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் படுதோல்வி அடைந்தன. மாவோ வசித்த ஹூனான் மாநிலத்தின் ஆளுநர் டான் யாங்கெய் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் அங்கிருந்து தப்பிவிட்டார். அங்கு டாங் ஸியாங்மிங்  என்பவர் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.  இந்தப் புரட்சி தோல்வி அடைந்த சில நாட்களில் கோமின்டாங் கட்சிக்கு சீனா முழுவதும் தடை விதிக்கப் பட்டது.