Skip to main content

இந்திய அணியில் இடம் கிடைத்தது குறித்து மனம் நெகிழும் வருண் சக்கரவர்த்தி!

Published on 27/10/2020 | Edited on 27/10/2020

 

varun chakravarthy

 

இந்திய அணியில் இடம் கிடைத்தது குறித்து, தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரான வருண் சக்கரவர்த்தி மனம் நெகிழ்ந்துள்ளார்.

 

தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரான வருண் சக்கரவர்த்தி நடப்பு ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். சுழற்பந்து வீச்சாளரான இவர், நடப்புத் தொடரில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தா அணியின் வெற்றியில் முக்கியப் பங்காற்றி வருகிறார். நேற்று அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலியத் தொடருக்கான, 20 ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணியிலும் வருண் சக்கரவர்த்தி பெயர் இடம் பெற்றிருந்தது. இதனையடுத்து, அவருக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியில் தனக்கு இடம் கிடைத்தது குறித்து வருண் சக்கரவர்த்தி மனம் திறந்து பேசியுள்ளார்.

 

அதில் அவர், "இது ஏதோ கனவு போல உள்ளது. தொடர்ச்சியாக விளையாடி அணியின் வெற்றிக்குப் பங்களிக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். இந்திய அணிக்காக விளையாடும் போதும் இதைச் செய்ய முடியும் என்று நம்புகிறேன். என் மீது நம்பிக்கை வைத்துள்ள அணித் தேர்வாளர்களுக்கு நன்றி கூற வேண்டும். தொடர்ந்து கடினமாக உழைத்து வருகிறேன். நம்பிக்கையும், உத்வேகமும் என்னைச் சுற்றியுள்ள பலரிடம் இருந்து கிடைக்கிறது. கடந்த வருடம் சிறப்பாக அமையவில்லை. ஏற்றம், இறக்கம் என இரண்டும் இருந்தது. இந்த வருடத்தில், அவையெல்லாவற்றிலும் இருந்து மீண்டு வந்துள்ளேன்" எனக் கூறினார்.

 

 

 

Next Story

ரஜினியை சந்தித்த கொல்கத்தா அணி வீரர்கள்

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

.

cricketers venkatesh and varun meets rajinikanth

 

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வழக்கம் போல் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இப்போது வரை புள்ளி பட்டியலில் 16 புள்ளிகள் எடுத்து குஜராத் அணி முதல் இடத்திலும் 15 புள்ளிகளுடன் சென்னை அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. மூன்றாவது இடத்தில் 14 புள்ளிகளுடன் மும்பை அணியும் நான்காவது இடத்தில் 13 புள்ளிகளுடன் லக்னோ அணியும் உள்ளது.  

 

இந்த நிலையில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் ரஜினிகாந்த்தை சந்தித்துள்ளனர். இருவரும் ரஜினியை பார்த்த மகிழ்ச்சியில் தங்களது சமூக வலைத்தளத்தில் ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரஜினி பற்றி கூறியுள்ளனர்.

 

வெங்கடேஷ் ஐயர் பதிவிட்டிருப்பதாவது, "தலைவர் தரிசனம். இன்றைய நாள் என் இதயத்திலும் நினைவுகளிலும் என்றென்றும் பதிந்துவிட்டது. சிறுவயதில் என் கனவுகள் அனைத்தையும் வடிவமைத்த ரஜினிகாந்த்தை ஒருவழியாகச் சந்தித்தேன். என்ன ஒரு அனுபவம். அவருடன் பேசும்போது பல வருடங்களாக ஒருவரையொருவர் அறிந்தது போல் உணர்ந்தோம்" என பதிவிட்டுள்ளார். 

 

வருண் சக்கரவர்த்தி பதிவிட்டதாவது, "இரவு வானில் தினமும் ஒரு மில்லியன் நட்சத்திரங்களை பார்க்கலாம். ஆனால் இந்த சூப்பர் ஸ்டாரைப் பார்ப்பது என்பது வாழ்நாளில் ஒருமுறையாவது தான் நடக்கும். அது நடந்தது.அவர் எங்களிடம் பேசிய விதம் ஒரு குடும்ப உறுப்பினராக தீவிரமாக உணர்ந்தேன். லிவிங் வித் ஹிமாலயன் மாஸ்டர்ஸ் (LIVING WITH HIMALAYAN MASTERS) என்ற அற்புதமான புத்தகத்தை பரிசாக வழங்கியதற்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.

 

 

Next Story

இங்கிலாந்துக்கு எதிரான தொடர்: பும்ரா, வருண் சக்கரவர்த்தி சந்தேகம்!

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

bumrah

 

இங்கிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி வரும் நான்காம் தேதி தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் 5 இருபது ஓவர், மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இங்கிலாந்திற்கு எதிரான இருபது ஓவர் போட்டிக்கான இந்திய அணி, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், இந்திய இருபது ஓவர் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்திக்கு, யோ-யோ டெஸ்ட் எனப்படும் உடல் தகுதி தேர்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் அவர் தேர்ச்சியடையவில்லை. ஏற்கனவே இதுகுறித்து தகவல்கள் வெளியான நிலையில், வருண் சக்கரவர்த்தி யோ-யோ டெஸ்ட்டில் தோல்வியடைந்ததை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி தற்போது உறுதி செய்துள்ளார். யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால், இங்கிலாந்திற்கு எதிரான இருபது ஓவர் தொடரில் அவர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. வருண் சக்கரவர்த்தி ஏற்கனவே ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இருபது ஓவர் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியது குறிப்பிடத்தக்கது.

 

அதேபோல், இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிய பும்ரா, இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகிவுள்ளது. பும்ராவிற்கு ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான இருபது ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.