Skip to main content

ரஷ்யா விவகாரம்; அமைதி காக்கும் இந்தியா... அமெரிக்கா போடும் திட்டம்

Published on 03/03/2022 | Edited on 03/03/2022

 

US Diplomat says US working to urge India to take 'clear position' on Ukraine-Russia issue

 

ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் இந்தியா தெளிவான நிலைப்பாட்டை எடுக்க பைடன் அரசு வலியுறுத்தும் என அமெரிக்கத் தூதரக அதிகாரி டொனால்ட் லூ தெரிவித்துள்ளார்.

 

ஒரு வாரத்தைக் கடந்தும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடரும் நிலையில், உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வலியுறுத்தியும், ரஷ்யா தனது படைகளைத் திரும்பப் பெறக் கோரியும் ஐநா பொதுச் சபையின் அவசர கால அமர்வில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 193 உறுப்பு நாடுகளில், 141 நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்தன. ரஷ்யா, சிரியா, பெலாரஸ், வட கொரியா, எரித்ரீயா ஆகிய ஐந்து நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 35 நாடுகள் இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. இந்தியா ஆரம்பம் முதலே இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்துவரும் நிலையில், இது ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உள்ளதாக மேற்குலக நாடுகளில் கருத்து எழுந்து வருகிறது. 

 

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து பேசிய அமெரிக்கத் தூதரக அதிகாரி டொனால்ட் லூ, "அமெரிக்க வெளியுறவுச் செயலர் அந்தோனி பிளிங்கன், அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் இந்த போர் தொடர்பாக இந்தியாவுடன் இடைவிடாத உயர்மட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியா தனது நிலைப்பாட்டை விளக்க முயற்சிக்கும் போது இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. ஒன்று, இந்த மோதலுக்குப் பேச்சுவார்த்தை வாயிலான தீர்வுக்கான சாத்தியக்கூறுகளைத் தொடர்ந்து முன்வைக்கிறது. மற்றொன்று, இன்னும் 18,000 இந்திய மாணவர்கள் உக்ரைனில் உள்ளனர். உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடன் இணைந்து அவர்களைப் பாதுகாக்க முயல்கின்றனர்

 

ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க இந்தியாவை வலியுறுத்துவதற்காக நாங்கள் அனைவரும் பணியாற்றி வருகிறோம். ஒற்றுமையான முடிவின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டவும், ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்க வெளியுறவுத் துறை இந்தியாவுடன் பேசி வருகிறது. மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்குத் தேவையான உதவி பொருட்களை இந்தியா வழங்கி வருகிறது. இதனை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது முக்கியமான ஒரு செயல்பாடு. இந்தியா நேரடியாக ரஷ்யாவை விமர்சிக்கவில்லை என்றாலும், ஐநா கூட்டத்தில் பேசுகையில், 'ஐநா உறுப்பு நாடுகள் அனைத்தும் மற்ற நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை மதிக்க ஐ.நா. சாசனத்தை கடைபிடிக்க வேண்டும்' என்றது. இதன்மூலம் உக்ரைனின் இறையாண்மையை ரஷ்யா மீறுகிறது என்பதை இந்தியா உணர்ந்திருப்பது தெரிகிறது" என்றார். 

 

ஐநா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பொதுச்சபை ஆகிய இரண்டிலும் நடைபெற்ற வாக்கெடுப்புகளில் இந்தியா வாக்கெடுப்பைப் புறக்கணித்த நிலையில், அமெரிக்கத் தூதரக அதிகாரியின் இந்த பேச்சு மூலம் அமெரிக்கா இந்தியாவை தன் பக்கம் சேர்த்துக்கொள்வதற்குத் திட்டமிடுவது உறுதியாகியுள்ளது. 

 

டொனால்ட் லூ-வின் இந்த செய்தியாளர் சந்திப்புக்கு முன்னதாக "இந்தியாவுடனான அமெரிக்க உறவு" குறித்த கூட்டம் ஒன்று அமெரிக்காவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இந்தியா வாக்கெடுப்பிலிருந்து விலகியது குறித்து அமெரிக்காவின் பிரதான கட்சிகளான குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர். ஆனாலும், சீனாவுடனான தங்களது வல்லரசு போட்டிக்கு இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு என அமெரிக்கா நம்புவதால், இந்தியா மீது நேரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்காது என நம்பப்படுகிறது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மீது தாக்குதல்; ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
America announced action against Iran to incident on Israel

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஜேனட் யெல்லன் கூறுகையில், “வரும் நாட்களில் ஈரானுக்கு எதிராகக் கூடுதல் பொருளாதாரத் தடைகள் நடவடிக்கை எடுப்போம். எந்த மாதிரியான தடைகள் விதிக்கப்படும் என்பது குறித்து விரைவில் விவரங்கள் வெளியிடப்படும்” என்று கூறினார்.

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்; களமிறங்கிய அமெரிக்கா!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
America sided with Israel against Iran

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

America sided with Israel against Iran

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.