Skip to main content

ஆடு மேய்த்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை; தலைமறைவான வாலிபர் அதிரடி கைது!

Published on 11/06/2022 | Edited on 11/06/2022

 

women incident krishnagiri police arrested youth

 

பர்கூர் அருகே, ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, கொடுவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த கொலையாளியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தண்ணீர் பள்ளம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மனைவி ராதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 40). ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்தார். 

 

கருத்து வேறுபாடு காரணமாக கணவர் பிரிந்து சென்று, வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தனது இரண்டு மகள், ஒரு மகனுடன் உள்ளூரில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார் ராதா. 40க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். 

 

ஜூன் 8- ஆம் தேதி ராதா, அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றிருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த துரை என்பவரும் ஆடுகளை அங்கு மேய்ச்சலுக்கு ஓட்டி வந்தார். 

 

இந்நிலையில், ஜி.டி. மலை பகுதியில் இருவரும் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தபோது, 35 வயதுள்ள மர்ம நபர் ஒருவர் அங்கு வந்தார். தான் மரவள்ளிக் கிழங்குகளை வாங்கிச் செல்வதற்காக வந்ததாக கூறியவர், அவர்களுடன் சகஜமாக பேசத் தொடங்கினார். மூவரும் மாலை நேரம் வரை பேசிக் கொண்டிருந்தனர். 

 

அந்தி சாய்ந்ததால் ஆடுகளை மீண்டும் பட்டிக்கு ஓட்டிச் செல்வதற்காக துரை ஆடுகளைத் தேடிச்சென்றார். அப்போது ராதா மட்டும் மேய்ச்சல் நிலத்தில் தனியாக இருந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த மர்ம நபர், திடீரென்று ராதாவை வன்கொடுமை செய்துள்ளார். 

 

வாலிபரின் வெறிச்செயலை சற்றும் எதிர்பாராத ராதா கத்திக் கூச்சல் போட்டார். அலறல் சத்தம் கேட்டு துரை ஓடி வருவதைப் பார்த்த மர்ம நபர், அவருடைய தலையை தான் வைத்திருந்த கொடுவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில், ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே ராதா இறந்தார். 

 

இச்சம்பவம் குறித்து கந்திகுப்பம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பர்கூர் அருகே உள்ள நக்கல்பட்டியைச் சேர்ந்த புல்லட் என்கிற சிம்மராஜ் (வயது 35) என்ற வாலிபர்தான் ராதாவை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்திருப்பது தெரிய வந்தது. 

 

நக்கல்பட்டி மலை அடிவாரத்தில் சிம்மராஜ் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஜூன் 9- ஆம் தேதி இரவு, அங்கு சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.