Skip to main content

“அறத்தின் வழி நின்று அறிஞர்களைக் கெளரவிக்கிறோம்” - அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழக விழாவில் கல்வியாளர்கள் புகழாரம்

Published on 27/10/2022 | Edited on 27/10/2022

 

அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா சென்னை, கோட்டூர்புரம் இணையக் கல்விக் கழக அரங்கில் நடந்தது. இதில், நடிகரும் கவிஞருமான ஜோ மல்லூரி, தமிழிசைப் பாடகர் டி.கே.எஸ்.கலைவாணன், தமிழறிஞர் கவிக்கோ ஞானச்செல்வன், மகாகவி பாரதியின் கொள்ளுப்பேத்தி உமா பாரதி, அண்மையில் சாகித்ய பால புரஷ்கார் விருது பெற்ற கவிஞர் மு.முருகேஷ், அஞ்சலி நாட்டியாலயா நிறுவனர் ரவிச்சந்திரன், திரைக்கலைஞர் கவிஞர் ரேகா, பாடலாசிரியர் அருண்பாரதி, கவிமாமணி வெற்றிப்பேரொளி, எழுத்தாளர் மு.ஞா.செ.இன்பா, கவிஞர் ஜலாலுதீன், கவிஞர் பேச்சியம்மாள், பாவலர் முத்துசாமி மற்றும் அமெரிக்க எழுத்தாளர் ஜெப்ரி அலெக்சாண்டர் ஆகியோருக்கு இப்பல்கலைக் கழகத்தின் வேந்தரான முனைவர் தாழை இரா.உதயநேசன் மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கி  சிறப்பித்தார்.


முன்னதாக அஞ்சலி நாட்டியாலயா குழுவினர் நாட்டியம் ஆட மறைந்த நாகூர் ஹனீபாவின் புதல்வர் நெளசாத் வாழ்த்துப்பாடல் பாடினார். விழாவில் தொடக்க உரையாற்றிய முனைவர் ஜெ.ஹாஜாகனி, “தமிழால் வியப்புறும் நிகழ்ச்சிகள் நடக்கும் என்பதற்குச் சான்றாக இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இன்றையச் சூழலில் உயர்வு நாடி அமெரிக்காவுக்குச் செல்பவர்கள் தங்களுடைய உயர்வையே முதன்மைப்படுத்துவார்கள். ஆனால் அவர்களில் இருந்து மாறுபட்டு நமது இதயநேசனான வேந்தர் ஐயா உதயநேசன் அவர்கள், தமது உயர்வை மட்டும் கருதாமல் தமிழின் உயர்வையும் தமிழ்ப்படைப்பாளர்களின் உயர்வையும் கருத்தில் கொண்டு செயல்படுகிறார். இப்படிப்பட்ட மனிதர்களால் தான் இந்த உலகம் இயங்குகிறது. நம் தமிழ்கூறு நல்லுலகத்தின் எல்லை பற்றிச் சொல்லப்புகும் பனம்பாரனார். ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறு நல்லுலகம்’ என்கிறார். இது நம் நில எல்லையாக அன்று இருந்தது. இன்று தமிழ்கூறு நல்லுலகத்தின் எல்லை அமெரிக்கா முதல் ஆம்பூர் வரை ஐயா உதயநேசன் அவர்களால் நீண்டிருக்கிறது. 


இவர் ஆம்பூரிலும் தொண்டு செய்கின்றார். அமெரிக்காவிலும் தொண்டு செய்கின்றார். தமிழுக்கும் தொண்டு செய்கின்றார். தமிழர்க்காகவும் தொண்டு செய்கின்றார்.  வழக்கமாக விருதுகள் வாங்கப்படுகின்றனவா? வழங்கப்படுகின்றனவா? என்றால், வாங்கப்படுகின்றன என்ற நிலை நிலவுகிறது. அந்த நிலை இங்கே மாறி இருக்கிறது. இலட்சாதிபதிகளுக்கு விருதுகள் தரப்படுகிற காலத்தில் லட்சியவாதிகளுக்குத் தரவேண்டும் என்று இங்கே தரப்பட்டிருக்கிறது. அதற்காகவே அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகத்தைப் பாராட்டுகிறேன்” என்றார் உற்சாகமாக.


மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றவர்களை வாழ்த்திய தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறைத் தலைவர் முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன் தன் உரையில், “இங்கே மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற அத்தனை பேரும் சாதாரணமானவர்கள் இல்லை. அவரவர் துறையிலும் சிறந்து விளங்குகிறவர்கள். அப்படிப்பட்டவர்களை அழைத்து மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கியதற்காக அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகத்தை முதலில் பாராட்டுகிறேன். எதன் அடிப்படையில் இங்கே பட்டம் கொடுக்கப்படுகிறது? எதற்காகக் கொடுக்கப்படுகிறது? என்று சிலர் கேள்வி எழுப்பலாம். இங்கே யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். எதற்கு வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் என்ற நிலை இருக்கிறது. அதனால் கண்டவரும் கேள்வி எழுப்பலாம். அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. 
இங்கே நம் எல்லோரின் வாழ்த்துக்களோடும் தமிழ்ச்சான்றோர்கள் மதிப்புறு முனைவர் பட்டம் மூலம் கெளரவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.


கடலில் நாம் கால் நனைக்க வேண்டும் என்றால் நாம்தான் அதைத் தேடிப்போக வேண்டும். ஆனால் மழை அப்படி இல்லை. அது நம்மைத் தேடிவந்து நனைக்கும். அதுபோல் அமெரிக்க  முத்தமிழ்ப் பல்கலைக் கழகம் அறிஞர்களைத் தேடிவந்து கெளரவித்திருக்கிறது. பொதுவாக தமிழர்கள்  அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று பட்டம் பெறுவதை கெளரவம் என்று கருதுகிறார்கள். ஆனால் நம் ஐயா உதயநேசன் அமெரிக்காவுக்குச் சென்று அங்கே படித்துப் பட்டம் பெற்று இந்த மண்ணுக்குத் திரும்பி வந்து சான்றோர் பெருமக்களுக்கு எல்லாம் பட்டமளித்து கெளரவப்படுத்துகிறார்.  இதைவிட சிறப்பு என்ன இருக்கிறது.

 
ஆங்கிலத்தை வணிக மொழி என்பார்கள். இலத்தீனை சட்டத்தின் மொழி என்பார்கள். கிரேக்கத்தை இசையின் மொழி என்பார்கள். ஜெர்மனை தத்துவத்தின் மொழி என்பார்கள். பிரெஞ்சைத் தூதின் மொழி என்பார்கள். இத்தாலியனைக் காதலின் மொழி என்பார்கள். அதுபோல் மொழிகளுக்கெல்லாம் தலைமை தாங்கும் நம் தாய்மொழியாம் தமிழ் மொழி அன்பின் மொழியாகவும் அறத்தின் மொழியாகவும் திகழ்கிறது. அதனால்தான் இங்கே அறவுணர்வோடு முத்தமிழ்ப் பல்கலைக்கழகம் இவர்களுக்கெல்லாம்  பட்டம் கொடுத்து மதிப்பளித்திருக்கிறது. நிதியைக் கருத்தில் கொள்ளாது நீதியைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டிருக்கிற பட்டம் இது. இவர்களுக்கெல்லாம் முனைவர் பட்டம் கொடுக்கப்படவில்லை என்றால் அறம் செத்துப்போய்விடும். இது அறத்தின் வழி நின்று நடத்தப்படுகிற பட்டமளிப்பு விழா.” என்று பெருமிதமாகக் குறிப்பிட்டார்.


பல்கலைக்கழகத்தின் வேந்தரான முனைவர் தாழை இரா. உதயநேசன் தன் தலைமை உரையில், “தமிழ் அறிஞர்களைக் கொண்டாடுவது ஒன்றே நம் நோக்கம். அவர்களை உயர்த்த இயன்றதை எல்லாம் செய்வோம். உங்களுக்குத் தெரிந்து தகுதியானவர்கள் கண்டுகொள்ளப்படவில்லை என்றால் எங்களுக்குத் தகவல் கொடுங்கள். அவர்களை ஏந்திக்கொள்ள நாங்கள் இருக்கிறோம்.” என்றார் அழுத்தமாக. 


விழாவின் தொகுப்புரையை முனைவர் ஆதிரா முல்லை மற்றும் முனைவர் கா.விஜயகுமாரி நிகழ்த்த பேராளர்கள் குறித்து பதிவாளர் பாட்டழகன் எடுத்துரைக்க முனைவர் ஜோ.சம்பத்குமார் நன்றியுரை ஆற்றினார். சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர்ராஜாவும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் வாழ்த்தினார். இந்த விழாவில் திரைப்படக் கலைஞர்கள், இயக்குநர்கள், கவிஞர்கள், படைப்பாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

 

- இலக்கியன்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா?” - ராமதாஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Ramadoss questioned Will Tamil ascend the throne?

தமிழ்நாடு அரசின் சார்பில் 2வது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக, ராமதாஸ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நல்லது. அதற்குள்ளாகத் தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்று மொழி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப்பலகைகள் ஆகியவற்றை சாத்தியமாக்கி  அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு?” என்று தெரிவித்துள்ளார்.

Next Story

எழுத்துப் பிழையுடன் அரசு பெயர்ப் பலகைகள்; கவனிக்குமா தமிழ் வளர்ச்சித்துறை?

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Spelling mistake on government office name boards

தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதுவரை நடைமுறையில் இருந்து வந்த வீட்டுவசதித் துறையை, 'வீட்டுவசதி  மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை' என்று பெயர் மாற்றியது. அதேபோல, குடிசை மாற்று வாரியத் துறையை, 'தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்' என்று பெயர்களை மாற்றி அமைத்தது. ஆனால் இந்த இரு துறைகளின் பெயர்களிலும் இடம்பெற்றுள்ள, 'நகர்ப்புறம்' என்ற சொல்லை, 'நகர்ப்புரம்' என்று குறிப்பிட்டுள்ளனர். அரசின் இணையதளத்திலும் அவ்வாறே பிழையுடன் 'நகர்ப்புரம்' என்றே பதிவு செய்துள்ளனர். அதாவது, வல்லின 'றகரம்' வர வேண்டிய இடத்தில்,  இடையின 'ரகர' எழுத்தைக் குறிப்பிட்டு, 'நகர்ப்புரம்' என்று பிழையுடன் குறிப்பிடப்பட்டு இருந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 11.12.2021 ஆம் தேதி சேலத்தில் கலந்து கொண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும்கூட, 'நகர்ப்புரம்'  என்று குறிப்பிட்டே பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. செய்தி மக்கள் தொடர்புத் துறை அச்சிட்டு இருந்த அழைப்பிதழிலும் 'நகர்ப்புரம்'  என்று பிழையுடனே குறிப்பிட்டு இருந்தனர். இதுகுறித்து நக்கீரன் இணைய ஊடகத்தில் 20.12.2021ஆம் தேதி செய்தி வெளியிட்ட பிறகு, அரசு இணையதளத்தில் இருந்து பிழையான சொல்  திருத்தம் செய்யப்பட்டு 'நகர்ப்புறம்' என்று மாற்றப்பட்டது.

இது இப்படி இருக்க, சேலம் குமாரசாமிப்பட்டியில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டட முகப்பின் இடப்பக்கத்தில், 'நகர்புர' சமுதாய சுகாதார மையம் என்றும், வலப்பக்கத்தில் 'நகர்ப்புர' ஆரம்ப சுகாதார நிலையம் என்றும், நுழைவு வாயில் முன்பு உள்ள முகப்பு  சுவரில் உள்ள கருப்பு நிற பளிங்கு கல்வெட்டில், 'நகர்புற' சமுதாய சுகாதார மையம் என்றும் எழுத்துப் பிழைகளுடன் பெயர்ப் பலகை வைத்துள்ளனர். வல்லின றகர எழுத்துடன் குறிப்பிடப்படும் புறம் என்ற சொல்லுக்கு திசை, பக்கம், வெளியே, காலம், வீரம், புறநானூறு என பல பொருள்கள்  உள்ளன. இங்கே நகர்ப்புறம் என்பது அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்ற நிலப்பரப்பைக் குறிக்கும். அதாவது, இடவாகுபெயராக  வருவது, புறம் ஆகும். நகர் + புறம் = நகர்ப்புறம் எனலாம். ஆகையால், நகர்ப்புறம் என்றே பெயர்ப் பலகையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

அதேபோல, இடையின 'ரகற' எழுத்துடன் குறிப்பிடப்படும் புரம் என்ற சொல்லுக்கு நகரம், ஊர் என்று பொருள்கள் உள்ளன. இது ஒரு  பெயர்ச்சொல்லாகும். வணிகர்கள் வாழும் பகுதியை நகர் என்கிறார்கள் மொழியியல் ஆய்வாளர்கள். காஞ்சிபுரம் என்றால் காஞ்சி நகர் என்றும், விழுப்புரம் என்றால் விழுமிய நகர், பல்லவபுரம் என்றால் பல்லவ நகர் என்றும் பொருள்படும்.  எனில், நகர்ப்புரம் என்று குறிப்பிட்டால் அதன் பொருள் 'நகர்நகர்' என்றாகி விடும். ஆக, நகர்ப்புரம் என்று குறிப்பிடுவது முற்றிலும் பிழையானது.

Spelling mistake on government office name boards

இது ஒருபுறம் இருக்க, சேலம் குமாரசாமிப்பட்டியில் நகர்ப்புற சுகாதார மையத்தில் பெயர்ப்பலகை எழுதுகையில், அதிகாரிகள் நகர்ப்புறம்  அல்லது நகர்ப்புரம் என்பதில் கடைசி வரை பெரும் குழப்பத்துடன் இருந்திருக்கக்கூடும். ஓரிடத்தில் 'நகர்புரம்' என்றும், மற்றொரு இடத்தில் 'நகர்ப்புரம்' என்றும், நுழைவு வாயில் பகுதியில் 'நகர்புறம்' என்றும் விதவிதமாக  எழுதியுள்ளனர். நகர் + புறம் என்றாலும் சரி; நகர்+புரம் என்றாலும் சரி; சேர்த்து எழுதும்போது இரண்டு சொல்லுக்கும் இடையில் 'ப்' என்ற  ஒற்றெழுத்து மிகும். இலக்கண விதிப்படி சொல்வதெனில், வருமொழியில் ககரம், சகரம், தகரம், பகரம் ஆகிய எழுத்துகளில் தொடங்கும் சொற்கள் இருந்தால், அவ்விரண்டு சொற்களுக்கும் இடையில் க், ச், த், ப் ஆகியவற்றுக்கு இனமான ஏதேனும் ஓர் ஒற்றெழுத்துத் தோன்றும்.

இது மட்டுமின்றி, சேலம் பெரமனூர் நாராயணசாமி தெருவில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாகப் பொறியாளர்  அலுவலக பெயர் பலகையிலும் நகர்ப்புறம் என்பதை 'நகர்ப்புரம்' என்று எழுத்துப் பிழையுடன் வைத்துள்ளனர். இப்படி பிழையான பெயர்ப் பலகைகளை அன்றாடம் காண்போருக்கு, ஒரு கட்டத்தில் அந்தச் சொல்தான் சரியாக இருக்குமோ என்ற முடிவுக்கும் வந்து விடும் அபாயம் இருக்கிறது. இது தொடர்பாக நாம் சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஜோதியிடம் கேட்டபோது, ''இடையின ரகர எழுத்துடன்  'நகர்ப்புரம்' என்று எழுதுவது பிழையானதுதான். சேலம் குமாரசாமிப்பட்டி சுகாதார நிலைய பெயர்ப்பலகையில் நகர்ப்புறம் என்றுதான் எழுத  வேண்டும். இது தொடர்பாக நீங்கள் ஒரு கடிதம் எழுதினால் எங்கெங்கு பிழைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் திருத்தி எழுதி விடுகிறோம்,'' என்றார்.     

Spelling mistake on government office name boards

அவரை தொடர்பு கொண்டபோது, 'ஐயா' என்றே அழைத்தவர், முழு உரையாடலையும் மொழி கலப்பின்றி பேசினார். பதவிக்குத் தகுந்த அணுகுமுறை சரிதான் என்றாலும் கூட, இதற்கெல்லாம் அரசுக்குக் கடிதம் எழுதினால்தான் பிழைகள் திருத்தப்படும் என்பது சற்று முரணாக இருந்தது. ஒரு தவற்றைச் சுட்டிக்காட்டிய பிறகு அரசு அலுவலர்கள் அதை சரிசெய்வதே சிறந்தது. நகர்ப்புறமா? அல்லது நகர்ப்புரமா? என்ற குழப்பம் இன்னும் தமிழக அரசுக்கே தீர்ந்தபாடில்லை போலிருக்கிறது. நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை  அறிக்கையிலும் நகர்ப்புறம் என்று வர வேண்டிய எல்லா இடங்களிலும் நகர்ப்புரம் என்றே பிழையுடன் குறிப்பிட்டு இருந்தனர்.

செவ்வியல் செறிவுடன் கூடிய தமிழ் மொழி, ஏற்கெனவே வேகமாகச் சிதைந்து வருகிறது. அதை அழிந்து விடாமல் காப்பதே நம் கடமை.  நாடாளுமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி, காலம் தாழ்த்தாமல் மேற்படி பிழைகளைத் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் சேலம் மாநகராட்சி  அலுவலர்கள் விரைந்து சரிசெய்திட வேண்டும்.