ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. கடந்த 2- ஆம் தேதி இதற்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 24 மாவட்ட கவுன்சில்களுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக 18 இடங்களையும், அதிமுக கூட்டணி 6 இடங்களையும் கைப்பற்றியது. இதையடுத்து வருகிற 11 - ஆம் தேதி மாவட்ட கவுன்சில் தலைவருக்கான தேர்தலும், துணைத் தலைவருக்கான தேர்தலும் நடைபெற உள்ளது.
பெரும்பான்மைக்கு தேவையான 13 இடங்களை விட, கூடுதலாக 5 இடங்களை திமுக கைப்பற்றியிருப்பதால் திமுகவுக்கே மாவட்ட கவுன்சிலர் தலைவர் பதவியை பிடிப்பதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது. இதனையடுத்து, திமுகவுக்குள் யார் அந்த பதவியை பிடிப்பது என்கிற போட்டியும் வேகமெடுத்துள்ளது.

திமுக வெற்றிப் பெற்ற 18 உறுப்பினர்களில் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஏ.ஜி.ரவி, மாவட்டத் தலைவர் பதவியை பிடிக்க முயற்சி செய்து வருகிறார். இதேபோல திமுக மா.செ. கும்மிடிப்பூண்டி வேணு, தனது மகள் உமாமகேஸ்வரியை தலைவர் பதவியில் அமர வைக்க தீவிர முயற்சியில் இருக்கிறார்.
கனிமொழி ஆதரவாளரான ஏ.ஜி.ரவிக்கும், மாவட்ட செயலாளரான கும்மிடிப்பூண்டி வேணுவின் மகள் உமா மகேஸ்வரிக்குமான போட்டி அதிகரித்துள்ளது.